வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, June 30, 2010

Dr.Sam Pitroda - Part 4

முனைவ்ர். சாம் பிட்ரோடா (4)




தொலைபேசித்துறை (DOT) உயர் அதிகாரிகள் மேல் நாட்டு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவன்ங்கள் கொடுக்கும் காலாவதியான இயந்திரவியல் விசைமாற்றிகளையும் மற்ற உபகரணங்களையும் வாங்க்கிக்கொண்டிருந்தார்கள். C-DOT மற்ற அரசாங்க நிறுவனங்களைப் போல் சொன்ன நேரத்தில் எதையும் முடிக்க மாட்டார்கள், கொஞ்ச நாட்களில் மூடி விடுவார்கள் என்று நினைந்திருந்தார்கள். ஆனால், சாம் மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக 128 Lines RAX உற்பத்தி செய்து காட்டியபோது மிரண்டு விட்டார்கள். காரணம்... C-DOT மிடமிருந்து எண்ணியல் விசைமாற்றிகளை தொலைபேசித்துறை வாங்கினால் அவர்களுக்கு லஞ்சம் கிடைக்காது! எனவே C-DOT 128 Lines RAX  இணைப்பகத்தை தொலைபேசித்துறை கட்டமைப்பில் சோதனை செய்ய (Filed Trial) தாமதப்படுத்துதல், தேவையானவைற்றை செய்து கொடுக்காமல் இழுத்தடித்தல் போன்ற பல தொல்லைகளை C-DOTக்கும் சாம் அவர்களுக்கும் தொலைபேசித்துறை உயர் அதிகாரிகள் கொடுத்தார்கள்.

சந்தையில் போட்டித்தன்மை இருந்தால்தான் எண்ணியல் விசைமாற்றிகளின் விலை குறைவு, சந்தை ஆற்றல் (Market Efficiency) ஆகியவை மேம்படும் என்று சாம் யோசித்து C-DOT-ன் எண்ணியில் விசைமாற்றிகளை பொதுத்துறை மற்றும் L&T, WS Industries போன்ற தனியார் நிறுவனங்களுக்கு C-DOT தொழில்நுட்பத்தை ராயல்டி (Royalty) அடிப்படையில் விற்கும் திட்டத்த்தை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு தொலைபேசித்துறை உயர் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ITI (India Telephone Industries) எனப்படும் பெங்களூரில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்திடம்தான் C-DOT தனது எண்ணியல் விசைமாற்றி தொழில்நுட்பத்தை கொடுக்க வேண்டும். ITI மட்டும்தான் C-DOT எண்ணியல் விசைமாற்றிகளை தயாரிக்க வேண்டும் என்று கூறினார்கள். ITI பெரும்பாலன பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற ஒரு ஆற்றலற்ற (Inefficient) நிறுவனம். ITI-யிடம் கொடுத்தால் அவர்கள் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்பது தொலைபேசித்துறை உயர் அதிகாரிகளின் கணக்கு (என்னா... ஒரு வில்லத்தனம்!). ஆனால் சாம் ஒரு போதும் முடியாது என்று கூறிவிட்டார்.

தொலைபேசித்துறை அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளை ராஜீவ் காந்தியிடம் எடுத்து கூறினார் சாம். அதற்கான தீர்வு என்ன என்று ராஜீவ் சாமிடம் கேட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து தொலைபேசி சார்ந்த நிறுவனங்களான DOT (Department of Telecommunications), TEC (Telecommunication Engineering Centre), C-DOT (Centre for Development of Telematics), ITI (Indian Telephone Industries) ஆகியவற்றையெல்லாம் Telecom commission எனற ஒரு அமைபின்கீழ் கொண்டு வர வேண்டும் என்றார். உடனே ராஜீவ அப்படியே செய்து விடலாம்... நீங்களே Telecom commission தலைவர் ஆகி விடுங்கள் என்றார். மேலும ராஜீவ் நீங்கள் அமெரிக்க குடிமகன் (American Citizen), இதற்கு மந்திரிசபையில் பலத்த எதிர்ப்பு இருக்கும். நீங்கள் அமெரிக்க குடியுரிமையை கொடுத்து விடுங்கள். உங்களுக்கு காபினெட் மந்திரி அந்தஸ்தில் Scientific Advisor to Prime Minister என்ற பதவி கொடுக்கிறேன்என்றார். அரசாங்க அதிகாரிகளின் எதிர்ப்பை சமாளித்து தனது செயல் திட்டங்களை செயல்படுத்த ராஜீவ் சொல்வதுதான் சரியான வழி என்று முடிவு செய்து 1987 ஆம் ஆண்டு தனது அமெரிக்க குடியுரிமையை கொடுத்துவிட்டு பிரதமரின் அறிவியல் ஆலோசகர் (Scientific Advisor to Prime Minister) மற்றும் தொலைபேசித்துறை குழு (Telecom Commission) தலைவர் என்ற பதவிகளை ஏற்றுக்கொண்டார். சாமின் மனைவியும், குழந்தைகளும் டில்லிக்கு வந்து செட்டிலானார்கள்.

அதிகாரமுள்ள இரண்டு பதவிகள் சாமிடம் இருந்ததால் அரசாங்க அதிகாரிகளின் தடைகளை தவிடுபொடியாக்கிவிட்டு முன்னேறினார். தடை போட்ட உயர் தொலைபேசித்துறை அதிகாரிகளை பெண்டு நிமித்தினார். சாம் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் என்பதால் எல்லா மந்திரிகளும், தலைவர்களும் சாமிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். சாம் தனது திட்டப்படியே  C-DOT எண்ணியியல் விசைமாற்றிகள் மற்றும் தொலைபேசி அனுப்புதல் (Telecom transmission) உபகரணங்கள் தாயாரிக்கும் உரிமைகளை ராயல்டி அடிப்படையில் 40 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கினார். 128 RAX கிராமப்புற தொலைபேசி இணைப்பகம் தொலைபேசித்துறை கட்டமைப்பில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் 256 RAX கிராமப்புற தொலைபேசி இணைப்பகமும் தயாராகி சோதனை செய்யப்பட்டது. 40 நிறுவனங்கள் இந்த கிராமப்புற தொலைபேசி இணைப்பககங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. இந்தியாவில் உள்ள கிராமங்கள்தோறும் கிராமப்புற தொலைபேசி இணைப்பககங்கள் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன.

1988 ஆம் ஆண்டில் சிறிய நகரத்துக்கான 512 Lines SBM (Single Base Module) தொலைபேசி இணைப்பகம் ரெடி. பெரிய நகரத்துக்கான 10,000 lines தொலைபேசி இணைப்பகம் குறித்த 5 ஆண்டுகளில் முழுவதுமாக தாயார் ஆகவில்லை. ஆனால் அதன் நகல் (Prototype) தாயாராக இருந்தது. 1989 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள அல்சூர் (Ulsoor) தொலைபேசி இணைப்பகத்தில் C-DOT-ன் 10,000 Lines தொலைபேசி இணைப்பகதின் சோதனை (Field Trial) தொடங்கியது. இதன் சிறப்பு என்னவென்றால் 1000 தொலைபெசி இணைப்புகள் தொடங்கி தேவைக்கேற்ப Base Module-களை இணைத்து 10,000 இணைப்புகள் வரை கொண்டு செல்லலாம்.



        C-DOT’s First 10,000 Lines Exchange - Ulsoor, Bangalore - 1992
                
இந்தக் காலகட்டத்தில் டில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் மேல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து எண்ணியில் நிலைமாற்றிகள் வாங்கி தொலைபேசித்துறையின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் STD/ISD தொலைதூர சேவைகள் தொடங்கப்பட்டன. நகரங்களில் PCO (Public Calling Office) எனப்படும் மஞ்சள் நிற பொது தொலைபேசி நிலையங்கள் அமைக்கப்பட்டன. PCO அமைக்க ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. வருமானத்தில் PCO உரிமையாளர்களுக்கு 20% கமிசன் கொடுக்கப்பட்டது.
  
இவ்வாறாக சாமின் திட்டங்கள், கனவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேறிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வாழ்க்கையில் எப்போதும் வெற்றிகள் மட்டும் கிடைத்துக் கொண்டிருக்காது. தோல்விகள், சோதனைகள் எல்லோருக்கும் வரும். அது கடவுளின் நியதி.... Law of Average! 1989 ஆம் ஆண்டில் சாமிற்கு மிகப் பெரிய சோதனை வந்தது. அதன்பின் ஏற்பட்ட தொல்லைகள், மன அழுத்தங்களால் சாமின் 48 வயதில் 1990 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாரடைப்பு (Massive Heart Attack)..... ஏன்?                                                     
              -தொடரும்

Monday, June 28, 2010

Dr.Sam Pitroda - Part 3


மு.கு:
நான் சாம் பிட்ரோடா அவர்களுடன் 1991 ஆம் ஆண்டு டில்லியில் ஒரு மாதம் பணியாற்றியிருக்கிறேன். C-DOT-ல் இரண்டு ஆண்டுகள் (1992-1994, Bangalore) பணியாற்றியிருக்கிறேன். எனவே சாம் அவர்களைப் பற்றி நான் தெரிந்து கொண்ட, படித்த செய்திகளின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதி வருகிறேன். இது ஒரு மொழி மாற்றம் (Translation) அல்ல.
முனைவ்ர். சாம் பிட்ரோடா (3)



ராஜீவ் காந்தியுடனான அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு சாமும் ராஜீவும் அடுத்த சில நாட்களில் பல முறை சந்தித்துப் பேசி நெருங்கிய நண்பர்களானார்கள். பிரதமர் இந்திரா காந்தியுடன் நடந்த சந்திப்பு முடிந்த ஒரு சில மாதங்களில் மத்திய மந்திரிசபை சாம் தலைமையில் இந்திய தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிலையத்தை (C-DOT, Centre for Development of Telematics) அமைக்க 50 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது. 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் C-DOT டில்லியில் தொடங்கப் பட்டது. சாம் பிரதமர் இந்திரா காந்தியிடம் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளித்தார்.

  1. C-DOT தொடங்கி மூன்று வருடத்திற்குள் 128 தொலைபேசி இணைப்புகள் கொண்ட முதல் தாணியங்கி கிராமப்புற எண்ணியல் நிலைமாற்றி தொலைபேசி இணைப்பகத்தை (128 Lines Rural Automatic Exchange) உற்பத்தி செய்து விடுவோம்.
  2. ஐந்து வருடத்திற்குள் நகரங்களுக்குத் தேவையான 10,000 தொலைபேசி இணைப்புகள் கொண்ட எண்ணியல் நிலைமாற்றி தொலைபேசி இணைப்பகத்தை (10,000 Lines Multi Base Module Digital Exchange) உற்பத்தி செய்து விடுவோம்.
சாமின் பெற்றோர்கள் சிகாகோவில் சாமுடன் செட்டிலாகிவிட்டார்கள். சாமின் குழந்தைகள் சிகாகோவில் படித்துக் கொண்டிருந்தார்கள். எனவே சாமின் குடும்பம் சிகாகோவிலிருக்க சாம் மட்டும் டில்லிக்கு வந்து C-DOT பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனக்கு அளிக்கப்பட்ட ஒரு காரியதரிசியுடன் சாம் 1984 ஆகஸ்ட் மாதம் C-DOTன் பணிகளைத் தொடங்கினார். சாம் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் அரசங்கா நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியாது என்ற விதிமுறையின்படி சாம் பெற்றுக்கொண்ட சம்பளம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய். (அம்மாகூட தமிழக முதலைமைச்சராக ஒரு ரூபாய் சம்பளத்தில் ஊழலே செய்யாமல் மக்கள் பணி ஆற்றினார் ஒரு காலத்தில்!!!)

இந்தியாவில் உள்ள அனைத்து I.I.T (Indian Institute of Technology) மற்றும் சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூக்குச் சென்று மாணவர்க்ளிடம் உரையாற்றினார். சாமின் உத்வேக உணர்ச்சி மிகுந்த பேச்சைக்கேட்ட மாணவர்கள் C-DOTல் சேர முன் வந்தனர். இதில் பாதி பேர் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேல் படிப்புக்காக செல்லவிருந்தவர்கள்! ஒரே மாதத்தில் 50 சிறந்த இளம் பொறியிலாளர்களைச் தேர்வு செய்தார் சாம். இப்படி இரவு பகலாக உழைத்து C-DOTஐ உருவாக்கிக் கொண்டிருக்கும்போது இடியென வந்து தாக்கியது அக்டோபர் மாதத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கொலை! ஆனால் அடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி! சாமின் நெருங்கிய தோழர். ராஜீவ் பதவி ஏற்றுக்கொண்ட ஒரு மாதம் கழித்து சாமிடம் சொன்னது “நம்முடைய தொலை நோக்கு திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. எவ்வளவு செலவானும் பரவாயில்லை. நான் துணை நிற்பேன். உங்கள் பயணத்தை தொடருங்கள்”. 

மேல் அதிகாரிகளுக்கு சார் போடுதல், கூழை கும்பிடு போடுதல் போன்ற நிர்வாகத்தால் புரையோடிக் கிடக்கும் அரசாங்க அலுவலகங்கள் உள்ள இந்தியாவில் முதன் முதலில் C-DOT என்ற அரசாங்க நிறுவனத்தில் திறந்த பண்பாடு (Open Culture)” என்ற அமெரிக்க பாணி வேலை பார்க்கும் பண்பாட்டை கொண்டு வந்தவர் சாம். அதன்படி யாரும் சார் போடுதல் கூடாது, எல்லாரையும் பேர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மேல் அதிகாரிகளைப் பார்த்து பாரும் எழுந்து நிற்கக் கூடாது, பயப்படாமல் தைரியமாக மீட்டிங்கில் பேச வேண்டும், தேவையென்றால் சாமை எதிர்த்துப் பேசி கேள்விகள் கேட்க வேண்டும். இவைகள் ஒரு சில உதாரணங்கள். மத்திய அரசாங்க நிறுவனங்களுக்கு சம்பள அடிப்படை உள்ளதால் C-DOT பொறியிலாளர்களுக்கு அதற்கு மேல் கொடுக்க முடியாது என்ற காரணத்தால் சாம் பிற சலுகைகளை அள்ளிக்கொடுத்தார். அவற்றில் ஒரு சில:
1. C-DOT செலவில் வசிக்க வீடு (C-DOT leased accommodation)
2. வீட்டிலிருந்து அலுவலகம் போய் வர கார்
3.  365 X 24 கேண்டினில் இலவச சாப்பாடு
4. விளையாடி ரிலாக்ஸ் செய்ய இண்டோர் விளையாட்ரங்கம்
5. அலுவலக பயணத்திற்கு விமானப் பயணம். அந்தக் கால கட்டத்தில் I.A.S அதிகாரிகளுக்குக் கூட விமானப் பயணம் கிடையாது. முதல் வகுப்பு ரயில் டிக்கெட்தான். முக்கியமான மூத்த I.A.S அதிகாரிகள்தான் விமானத்தில் பயணம் செய்ய முடியம். 

அந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த தனியார் நிறுவனங்களில் கூட இளம் இஞ்சீனியர்களுக்கு இது போன்ற சலுகைகள் கிடையாது! இந்த சலுகைகள் மற்றும் சாமின் வழிகாட்டுதலில் C-DOT  இளம் பொறியாளர்கள் வேலை, வேலை, வேலை என்று ஒருவித வெறியோடு கடுமையாக உழைத்தார்கள்.  வேலை, சாப்பாடு மற்றும் விளையாட்டு என்று ஒரு கல்லூரி விடுதி போலத்தான் இருக்கும் C-DOT அலுவலகம். சாமுடைய குடும்பம் சிகாகோவிலிருந்ததால் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் சாம் அலுவகத்தில்தான் இருப்பார். இளைஞர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தல், டேபிள் டென்னிஸ் விளையாடுதல், முதுகில் தட்டிக்கொடுத்து வேலை வாங்குதல் என்று ஒரு சக நண்பன், சகோதரன்போல் பழகுவார். C-DOT தலைவர் என்று ஒரு சிறிய பந்தாகூட இருக்காது.

சாம் மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு கொடுத்த வாக்குறுதிப்படி 1987ஆம் ஆண்டு C-DOTன் சொந்த தொழில்நுட்பத்தில் உருவான 128 தொலைபேசி இணைப்புகள் கொண்ட முதல் தாணியங்கி கிராமப்புற இணைப்பகம் தாயார்!. இந்த சமயத்தில் C-DOTன் பொறியியலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500 பேர். சராசரி வயது 25! டில்லி, பெங்களூர் என்ற இரு இடங்களில் அலுவலகங்கள்.

இந்தியாவின் பிரதமரும், தன்னுடைய நண்பருமான ராஜீவ் காந்தி முன்னிலையில் 128 இணைப்புகள் கிராமப்புற தொலைபேசி இணைப்பகம் (128 RAX – Rural Automatic Exchange) வழியாக 1987 ஆம் ஆண்டு தொலைபேசி இந்திய தொலைபேசித்துறை வரலாற்றில் சாதனை நிகழ்த்திக் காட்டினார்.

   
  
இந்த கிராமப்புற தொலைபேசி இணைப்பகத்தின் முக்கிய அம்சங்கள்:

1. உறுதியான வடிவமைபு (Rugged Design); குறைந்த மின்சாரத்தில் இயங்குவது (Less power consumption). கிராமங்களில் மின்சாரத் தடைகள் இருக்கும் என்பதால் A/C இல்லாமலேயே வேலை செய்யும்.

2. உலகிலேயே கிராமங்களுக்காக குறைந்த (128 Lines) தொலைபேசி இனணப்புகள் கொண்ட மிகச் சிறிய முதல் தானியங்கி எண்ணியல் நிலைமாற்றி இணப்பகம் (Digital Automatic Exchange)

3. பல வடிமைப்புகள் (Patents) கொண்டது 

அடுத்து செய்ய வேண்டியது, இந்தக் கிராமப்புற தொலைபேசி இணைப்பகத்தை இந்திய தொலைபேசி கட்டமைப்பில் சோதனை செய்து (Field Trial) , அதிக அளவில் உற்பத்தி செய்வது (Mass Production). ஆனால் அதற்கு காத்திருந்தன இந்திய அரசாங்க ஊழல் அதிகாரிகளின் எதிர்புகள். அந்த எதிப்புகளை சாம் எப்படி சமாளித்தார்?
                                                        - தொடரும்

Saturday, June 26, 2010

Dr.Sam Pitroda - Part 2

முனைவ்ர். சாம் பிட்ரோடா (2)


சாம் சிகாகோ நகரிலிருந்து இந்திய தொலைபேசித்துறை (DOT-Department of Telecommunications) நிறுவனத்தின் தலைவர் அவர்களுக்கு தன்னைப்பற்றியும், இந்திய தொலைத்தொடர்பின் கட்டமைப்புக்கு செய்ய வேண்டிய செயல் திறண்கள் பற்றி ஒர் கடிதம் எழுதினார். ஆனால்.. அந்தக் கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை. மீண்டும் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதே கதைதான்.... நோ பதில். தனது முயற்சியில் சளைக்காமல் மூன்றாவது கடிதம் எழுதினார். மூன்றாவது கடிதத்திற்கு DOT தலைவரிடமிருந்து பதில் வந்தது. அதில் தன்னை டில்லியில் வந்து நேரில் பார்க்குமாறு எழுதியிருந்தார். இதற்கு எடுத்துக்கொண்ட காலம் ஏழு மாதங்கள்!

சாம் உடனே சிகாகோவிலிருந்து கிளம்பி டில்லி வந்து DOT தலைவரை பார்த்து தனது செயல் திட்டங்களை விளக்கி கூறினார். அதைக் கேட்டு மிகவும் வியப்படைந்த DOT தலைவர், உங்கள் திட்டங்கள் அருமையானவை. ஆனால் அதற்கு நிறைய செலவுகள் ஆகும். நிறைய கொள்கை அளவிலான மாற்றங்கள் (Policy Changes) தேவை. அதற்கான அதிகாரம் எனக்கும் கிடையாது, தொலைத்தொடர்பு அமைச்சருக்கும் கிடையாது என்றார்.

“அப்படியென்றால் அந்த அதிகாரம் யாரிடம் உள்ளது?என்று கேட்டார் சாம்.

“பிரதமர்

“நான் பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்து கொடுங்கள்என்றார் சாம்.

இதைக்கேட்டு ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டார்  DOT தலைவர். என்னடா இவன் தொடர்ந்து லெட்டர் எழுதி இம்சை கொடுக்கிறானேன்னு கூப்பிட்டு பேசுனா, சர்வ சாதாரணமா பிரதமரிடம் அழைத்துக்கொண்டு போன்னு சொல்றான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஆனால 39 வயது சாமின் இளமை, அவருடைய சாதனைகள், அவருடைய கண்களில் இருந்த ஒரு வெறி ஆகியவற்றை தெரிந்துகொண்ட DOT தலைவர் என்னால் முடிந்த வரை ஏற்பாடு செய்கிறேன். ஆனால் உடனே முடியாது, பல நாட்கள் ஆகலாம் என்கிறார். பராவாயில்லை நான் ஒரு மாதம் வரை டில்லியில் தங்கும் திட்டத்தோடுதான் வந்துள்ளேன். வெயிட் செய்கிறேன் என்றார் சாம்.

DOT தலைவர் தனது தொடர்புகளை பயன்படுத்தி சாமிற்கு இரண்டு வாரங்கள் கழித்து பிரமதர் இந்திரா காந்தியிடம் பேசுவதற்கு 10 நிமிடங்கள் அப்பாயின்மெண்ட் வாங்கி கொடுத்தார். ஆனால் சாம் எனக்கு 10 நிடங்கள் போதாது. 10 நிமிடங்களில் ஒன்றும் தெளிவாக எடுத்துக் கூற முடியாது. ஒரு மணி நேரம் வேண்டும் என்றார். என்னடா இவனோட ஒரே தொல்லையா போச்சே என்று நினைத்துக்கொண்டே பிரதம்ர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதமர் அலுவலகம் முடியாது என்று கூறிவிட்டது. சாம் DOT தலைவருக்கு மிக்க நன்றி கூறிவிட்டு, பிரதமரிடம் ஒரு மணி நேரம் அப்பாயின்மெண்ட் கிடைக்கும்போது எனக்கு தெரியப்படுத்துங்கள் நான் திரும்பி வருகிறேன் என்று தெரிவித்துவிட்டு சிகாகோ திரும்பி வந்துவிட்டார்.

பிரதமரிடம் கிடைத்த 10 நிமிட அப்பாயின்மெண்டை வேண்டாமென்று கூறி திரும்பிச் சென்ற சாமின் உறுதி DOT தலைவருக்கு அவரின் மேல் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தனது நண்பர்களின் உதவியுடன் சாமைப்பற்றியும் அவருடைய செயல் திட்டங்கள் பற்றியும் அப்போது தொழில் நுட்பங்களில் அதிக ஆர்வம் கொண்ட பைலட்டாகா பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் காந்தியிடம் கொண்டு சேர்த்தார். ராஜீவ் காந்தி சாமைப் பற்றி விபரங்களைச் சேகரித்து கொடுக்குமாறு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தையும், RAW-விடம் கேட்டிருக்கிறார் (Background and Security checks)  

சாம் டில்லியிலிருந்து சிகாகோ திரும்பி ஆறு மாதாங்களாகியும் DOT தலைவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்பதால் ராக்வெல் (Rockwell) நிறுவனத்தில் அவருடைய துணைத் தலைவர் (Vice President) வேலையில் கவணம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சாமிற்கு பிரதமர் அலுவகத்திலிருந்து அவருக்கு பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு மணி நேர அப்பாமெண்ட் பற்றிய தகவல் வருகிறது. பிரதமர் அலுவகத்திற்கு தனது வருகையை உறுதி செய்து தகவல் அனுப்பிவிட்டு பிரதமருடனான சந்திற்பிக்கு தேவையான பிரசண்டேசன் சிலைடுகள் (Presentation slides) தாயார் செய்யும் வேலைகளில் இறங்கி விட்டார்.

1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டில்லிக்கு வந்து பிரதமரை சந்திக்க் சென்றார். அங்கு போனால் பிரதமர் இந்திரா காந்தி, அவருடைய பக்கத்தில் ராஜீவ் காந்தி மற்றும் காபினெட் மந்திரிகள் அந்த கான்பரன்ஸ் அறையில். தன்னைப் பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டு இந்திய தொலைத்தொடர்பின் கட்டமைப்பின் அவசியம், அதற்கான தொலைநோக்கு திட்டம் பற்றிய தனது பேச்சை தொடர்ந்தார். இந்திரா காந்தி மற்றும் அமைச்சர்களிடமிருந்து சரமாரியான கேள்விகள். எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதிலளித்து விளக்குகிறார். அவர் அளித்த தொலைநோக்கு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


1. இந்தியாவின் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியா தன்னுடைய சொந்த தொழில்நுட்பத்தில் எண்ணியல் மின்நிலைமாற்றிகளை (Digital Switches) தாயாரிக்க வேண்டும்.
2. இந்திய தொலைப்பேசித்துறை காலாவதியான தொழில்நுட்ப இயந்திரவியல் நிலைமாற்றிகளை (Mechanical Switches) இனிமேல் வாங்கக்கூடாது
3. இந்தியா தன்னுடைய சொந்த தொழில்நுட்ப எண்ணியல் மின்நிலைமாற்றிகள் சந்தைக்கு வரும்வரையில் அடுத்த் ஐந்து ஆண்டுகளுக்கு பெரு நகரங்களின் தேவைக்கு மேல் நாட்டு நிறுவனங்களிலிருந்து விலை அதிகமானலும் எண்ணியல் மின்நிலைமாற்றிகளை வாங்க வேண்டும்  

 ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. கூட்டம் முடிந்தவுடன் ராஜீவ் காந்தி வந்து சாமின் கைகளைக் குலுக்கி, கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து இந்த சந்திற்பிக்கு நான்தான் ஏற்பாடு செய்தேன் என்கிறார். தன் வயதுடைய இளைஞரான ராஜீவ் காந்தியை நன்றியுடன் பார்க்கிறார் சாம் (ராஜீவ் சாமைவிட இரண்டு வயது இளையவர்). ஒரு ஆழமான நட்பின் தொடக்கம்.......!!
                                                      -தொடரும்


















Friday, June 25, 2010

Dr.Sam Pitroda

முனைவர். சாம் பிட்ரோடா



இந்திய தொலைத்தொடர்பு புரட்சிக்கு (Telecommunications revolution) வித்திட்டவரும், நான் எனது தொலைத்தொடர்பு துறையில் குருவாக பின்பற்றும் முனைவர்.சாம் பிட்ரோடா (Dr. Satyanarayan Gangaram Pitroda) அவர்களைப் பற்றிய கட்டுரை.

கடந்த பதினைந்து வருடங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப சாதனைகள் ஆகியவற்றால் இன்று இந்தியாவில் எல்லோரது கைகளிலும் செல்பேசி. போகுமிடங்கும் மக்கள் செல்பேசியில் பேசிக்கொண்டே செல்கிறார்கள் அல்லது SMS அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். வடிவேலு ஒரு படத்தில் அவர் பயணம் செய்யும் பேருந்தில் இருக்கும் இன்னொருவருடன் செல்பேசியில் பேசிக்கொண்டே பயணம் செய்வார்! இன்று இந்தியாவில் உள்ள செல்பேசிகளின் எண்ணிக்கைகள் கிட்டத்தட்ட 60 கோடி.

ஆனால்..

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை (Telecommunications infrastructure) காயாலன் கடைக்கு ஒப்பிடலாம். ஒருவர் வீட்டில் கருப்பு கலரில் ஒரு தொலைபேசி இருந்தால் அவர் மிகப் பெரிய பணக்காரர் அல்லது பெரிய அரசு அதிகாரி. அந்த தொலைபேசியில் பெரும்பாலும் டயல் டோனுக்கு பதில் “கொர்என்ற சத்தம்தான் வரும் அல்லது வேலை செய்யாது. நீண்ட தூர (STD/ISD) அழைப்பு வசதிகள் கிடையாது. வெளி ஊர்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு பேச வேண்டுமானால் டிரங் கால் (Trunk Call) பதிவு செய்து விட்டு மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டும். 97% சதவீத கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு கிடையாது. இப்படி இருந்த இந்திய தொலைபேசித்துறையை 1984-ஆம் ஆண்டு சி-டாட், C-DOT (Centre for Development Telematics) என்ற இந்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி தலைமைப் பொறுப்பேற்று வழி நடத்தி ஆறு ஆண்டுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி திரும்பிய பக்கமெல்லாம் PCO (Public Calling Office) எனப்படும் பொது தொலைபேசி நிலையங்கள் அமைத்து, கிராமங்களில் தொலைபேசி இணைப்பங்களை நிறுவி தொலைபேசியை சாமன்ய மக்கள்களும் உபயோகிக்கும் சேவையாக மாற்றி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் சாம் பிட்ரோடா. எல்லோராலும் டாக்டர்.சாம் என்று அன்போடு அழைக்கப்படுபவர்.


சாம் பிட்ரோடா, 1942 ஆம் ஆண்டு மே 4ம் தேதி ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள டிட்டலார்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் குஜாராத் மாநிலத்திலிருந்து ஒரிஸ்ஸாவிற்கு குடி பெயர்ந்து வந்த ஓர் தச்சு ஆசாரி (carpenter). அவர் நடத்தி வந்த கடையில் வந்த வருமானத்தில் தன்னுடைய 8 குழந்தைகளையும் பள்ளியில் படிக்க வைத்தார். சாம் 11 வயதில் குஜாராத் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். 22 வயதில் மாகாராஸ்டிரா சாய்ராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் (Physics) முதுகலைப் பட்டம் பெற்றவுடன் அவரது தந்தை கொடுத்த $400 டாலர் பணத்துடன் 1964 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் உள்ள Illinois Institute of Technology  கல்லூரியில் மின்சாரத்துறை முதுகலை (M.S in Electrical Engineering) பட்டப்படிப்பில் சேர்ந்தார். எல்லா இந்திய மாணவர்களைப்போல பகுதி நேர வேலை பார்த்து அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு படிப்பை முடித்தார். சிகாகோவில் உள்ள GTE என்ற நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து 1974 ஆம் ஆண்டு வரை GTE  நிறுவனத்தில் எண்ணியல் மின்விசையமைப்பு (Digital Switching) என்ற துறையில் ஆராய்ச்சி பொறியாளராக பணியாற்றினார். அவர் கண்டுபிடித்த ஆராச்சிகளுக்காக வாங்கிய வடிவமைப்புகள் (Patents) முப்பதுக்கும் மேல். இந்தக் காலகட்டத்தில் அவர் ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமெரிக்க குடியுரிமையும் (US Citizenship) பெற்று தனது பெரும்பாலன சகோதர சகோதரிகளையும், பெற்றோர்களையும் அமெரிக்காவிற்கு அழைத்துக்கொண்டு விட்டார்.

சாம் தனது தந்தையாரின் அறிவுரையின்படி 1974 ஆம் ஆண்டு இரண்டு அமெரிக்க நண்பர்கள் கொடுத்த பணத்தை மூலதனமாக கொண்டு வெஸ்காம் ஸ்விட்சிங் (Wescom Switching, Inc)  எனற நிறுவனத்தை தொடங்கினார். 20 வடிவமைப்புகளை (Patents) கண்டுபிடித்து, ஆறு ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனத்தை ராக்வெல் (Rockwell) என்ற நிறுவனத்திடம் விற்றதின் மூலம் அவருக்கு கிடைத்த பணம் $4 மில்லியன் டாலர்கள். டாக்டர்.சாம்  38 வயதில் ஒரு அமெரிக்க கனவு சுயமுனைப்பு கோடிஸ்வரர் (American dream self-made millionaire).

1981 ஆம் ஆண்டு சாம் விடுமுறைக்காக இந்தியா வந்து ஒரிஸ்ஸாவில் உள்ள அவருடைய சொந்த கிராமத்திற்கு சென்றிற்கும் வேளையில் அங்கிருந்து ஒரு முக்கியமான காரணத்திற்காக அமெரிக்காவிற்கு தொலைபேச வேண்டிய நிலைமை. ஆனால்.. அந்த கிராமத்திலிருந்து அவரால் தொலைபேச முடியவில்லை. விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பி வந்தவுடன் மனமெல்லாம் இந்தியாவைப்பற்றித்தான். அவருக்கே தன்னைப்பற்றி ஒரு குற்றவுணர்வு. 38 வயதில் தொலைத்தொடர்பு துறையில் 50க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை (Patents) கண்டு பிடித்து கோடிஸ்வரனாக ஆகிவிட்டேன். ஆனால்.. என் தாய்நாட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டிய தொலைபேசி கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்திய தொலைபேசித்துறை  மேல்நாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் காலாவதியான இயந்திரவியல் விசைமாற்றிகளை (Mechanical Switches) கோடிக்கணக்கான பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்புப் பற்றி எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான DOT (Department of Telecommunications)யிடம் இல்லை. இந்த நிலைய மாற்ற வேண்டும் மனதில் ஒரு உறுதி எடுக்கிறார்.
                                                                                                                           -தொடரும்

தமிழ் வலைப்பதிவுலகில் நீண்ட பதிவுகளுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் வடிவமைப்பு (Patent) வைத்துள்ளதால் டாக்டர்.சாம் அந்த உறுதியில் போராடி எப்படி வெற்றி பெற்றார் என்பதை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

பி.கு:
இந்தக் கட்டுரையில் ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இது படிப்பதற்கு இலகுவாக இருக்கிறதா அல்லது கடினமாக இருக்கிறாதா என்று கூறினால் அதற்கேற்ப அடுத்த பதிவுகளை எழுதுவதற்கு உதவியாக இருக்கும். 


Wednesday, June 23, 2010

தூசி தட்டுதல்.....


நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது வலைப்பதிவை தூசி தட்டி எழுதலாம் என்ற எண்ணம். அதற்கு இரண்டு காரணங்கள்.

1. சிங்கப்பூர் வலைப்பதிவு நண்பர்களின் மணற்கேணி புத்தக வெளியீட்டின்போது ஏற்பட்ட ஓர் அனுபவம்
2. எனது MBA படிப்பு ஜூன் 20ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது

நானும் தமிழ் வலைப்பதிவாளரான கதை:


2003ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓர் நாள்... என் கல்லூரி நண்பன் கரு.மலர்ச்செல்வனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அமெரிக்க தமிழ் சங்கப்பேரவைப் பற்றியும் (FETNA), பேரவை வருடாந்தோரும் ஜூலை 4 நீண்ட வார இறுதியில் நடத்தும் விழா பற்றியும் கூறினான். இந்த வருடம் நியுஜெர்சியில் விழா நடக்க இருக்கிறது நான் போகிறேன் நீயும் வாடா என்றான். அந்த சமயத்தில் மனைவியும் குழந்தைகளும் இந்தியாவிற்கு கோடை விடுமுறைக்காக செல்லவிருப்பதால் நானும் வருகிறேன் என்று கூறினேன். 2003ம் ஆண்டு FETNA விழா நான் கலந்துகொண்ட முதல் விழா. அந்த விழாவில் ஏற்பட்ட பரவச அனுபவங்கள் ஏராளம். குறிப்பாக எமது தஞ்சைத்தரணி கலைஞர்கள் நந்தன் கதைநாடகத்தில் நடத்திக்காட்டிய தப்பாட்டம், கரகாட்டம் போன்ற கலைகளை பத்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் பார்த்து மெய் சிலிர்த்துப் போனேன்.

அந்த விழாவில் நடந்த “கணணியில் தமிழ்என்ற ஓரு கருத்தரங்கில் முரசு அஞ்சல் மூலமாக கணணியில் எழதுவது எப்படி என்று அறிந்துகொண்டேன். அந்த கருத்தரங்கில் திண்ணை ஆசிரியர் கோபல் ராஜாரம் அவர்கள் திண்ணை.காம் (www.thinnai.com) இணையப் பத்திரிக்கைப் பற்றியும் எவ்வாறு அவர்கள் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறார்கள் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார். FETNA விழாவில் நான் மிகவும் மதிக்கும் எங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி அய்யா மற்றும் நண்பர்கள் பலருடன் அறிமுகப் படுத்திக்கொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.

விழா முடிந்து பாஸ்டனுக்கு திரும்பியவுடன் செய்த முதல் வேலை. முரசு அஞ்சலை டவுன்லோடு செய்து கம்பூட்டரில் நிறுவியது. கல்லூரிக் காலத்தில் கிறுக்கியவற்றில் சேமித்து வைத்திருந்த பழைய நோட்டுப் புத்தகங்களை தேடி எடுத்து “உழவன்என்ற கவிதையை தட்டுத்தடுமாறி முரசு எடிட்டரில் டைப் அடித்து பிரிண்ட் அவுட் எடுத்து பார்த்தபோது ஏதோ ஒரு மிகப்பெரிய புராஜக்டை வெற்றிக்கரமாக முடித்ததது போன்ற ஆனந்தம்!

FETNA விழாவில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜராம் அவர்கள் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. கல்லூரி காலத்தில் எழுதிய முதல் சிறுகதையை மூன்று நாட்கள் கணணியில் டைப் செய்து திண்ணைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கதையை வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கை அவ்வளவாக இல்லை. அடுத்த திண்ணை இணைய இதழில் என்னுடைய கதையை அதற்கேற்ற புகைப்படத்துடன் வெளியிட்டுயிருந்தார்கள். அதைப் பார்த்து அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. அந்தக் கதை இங்கே.



பிறகு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கதை, கவிதைகள் என்று அனுப்பிக்கொண்டிருந்தேன். திண்ணையில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அதே சமயத்தில் திண்ணையில் எனது சிங்கப்பூர் நண்பர் நம்பி எழுதுவதை தெரிந்துகொண்டு அவரை தொலைபேசியில் அழைத்து பேசிக்கொண்டிருந்தபோது அவர் அழைத்து வந்து இட்ட இடம் “மரத்தடியாஹூ குழுமம். கதை, கவிதைகள், கலாய்த்தல்கள், மொக்கைகள் என்று களைகட்டிய இடம் மரத்தடி. மரத்தடி ஆரம்ப நாடகளை என்றும் மறக்கமுடியாது. இப்போதைய வலைப்பதிவு ஜாம்பவான்களான PKS, பாஸ்டன் பாலா, ஆசிப், ஆசாத் பாய், KVR, பிரபு ராஜதுரை, ஹரன்பிரசன்னா, மதி கந்தசாமி, உஷா, துளசி டீச்சர் மற்றும் நண்பர்களை மரத்தடியில் சந்த்தித்தேன். ராத்திரியில் கம்யூட்டரில் உட்கார்ந்து இன்னும் என்ன பண்றீங்க? என்ற எனது தங்கமணியின் திட்டல்கள்களை கேட்டுக்கொண்டே ஒரு ஆறு மாதம் இந்தப் பயணம் தொடர்ந்தது. அதன்பிறகு பெண்டு நிமிர்த்தும் Start-up Company  வேலை காரணமாக மரத்தடி, திண்ணை மறந்து பொனது. 2005-ல் மரத்த்டி நண்பர்கள் எல்லோரும் வலைப்பதிவு ஆரம்பித்து கலக்கிக் கொண்டிருந்தார்கள். 2005 இறுதியில் நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து தமிழ்மணத்தில் இணைத்தேன். ஆனால் ஒரு சில பதிவுகளுடன் நின்று போனது. 2006 இறுதியில் பாஸ்டனிலிருந்து சிங்கப்பூருக்கு கம்பெனி டிரான்ஸ்பரில் இடம் பெயர்ந்தேன். பதிவுகள் எழுதவில்லையென்றாலும் 2005 முதல் நேரம் கிடைக்கும்போது தமிழ்மணம் வழியாக பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

சிங்கப்பூர் பதிவுலக நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு ஒரு சில பதிவர் சந்திப்புகளில் கலந்துகொண்டேன். அவ்வாறாகத்தான் மே மாதத்தில் மண்ற்கேனி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மண்ற்கேனி புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர் டாக்டர்.தேவன் மாயம் கேட்ட கெள்வி ஒன்றிற்கு பதிலளிக்குமாறு தம்பி ஜொசப் கூறினார். எழுந்து பேசச் சென்றால் வார்த்தைகள் ஆங்கிலத்தில்தான் வருகிறது. 17 வருட வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் பல தொலைதொடர்பு நிறுவனங்களுச் சென்று ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக பிரசண்டேசன்கள் செய்து வரும் எனது தற்போதைய பணியின் தாக்கம். ஏதோ சில வார்த்தைகள் பேசி வந்து அமர்ந்தேன்.

ஒரு பிளாஷ்பேக்.....


பள்ளியில் படித்தவரை தமிழில் எப்போதும் நான்தான் முதல் மாணவன். தமிழ் பேச்சுப்போட்டி, பட்டி மண்டபம், கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் என்று எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டு தொடர்ச்சியாக பெரும்பாலும் முதல் பரிசுகள் பல வாங்கியிருக்கிறேன். வெட்டிக்காடு, அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் மன்னார்குடி நகரம் என்ற 30 கிலோமீட்டர் வட்டத்தில் 17 வயதுவரை வாழ்ந்துவிட்டு பொறியியல் படிக்க சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது சென்னையின் பிரமாண்டைத் பார்த்து இந்த கிராமத்தான் மிரண்டு போனேன். ஆங்கிலம் பேசத்தெரியாத கிராமத்து ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையில் முதல் இரண்டு வருடங்களுக்கு தமிழ் போட்டிகள் அல்லது எந்தவொரு நிகழ்சிகளிலும் கலந்துகொள்ள வில்லை. இந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து சற்று வெளியே வந்து மூன்றாம் ஆண்டு முதல் தமிழ் மன்ற நிகழ்ச்சிகள், வகுப்பு ஆங்கில செமினார்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கலந்துகொண்டென். பள்ளியில் படித்தபோது இருந்த தன்னம்பிக்கை என்னும் மீண்டும் தவழ ஆரம்பித்தது.

கல்லூரி படிப்பு முடிந்தபிறகு நான்கு வருடங்கள் கொச்சி, சென்னை, டில்லி மற்றும் பெங்களுரீல் வேலை. அதன்பிறகு சிங்கப்பூர், அமெரிக்கா வெளிநாட்டு வாழ்க்கை. இந்த 20 வருடங்களில் தமிழ் மெடைகளில் பேசுவதற்கோ, தமிழில் எழுதவதற்கோ வாய்ப்புகள் இல்லை. உண்மை என்னவென்றால் நான் அதற்கான வாய்ப்புகளைச் தேடிச் செல்லவில்லை. வேலை, பொருள் தேடுதல் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்களாக இருந்தன!

பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழால் அடையாளம் காணப்பட்ட நான் அன்று மணற்கேணி விழாவில் தமிழில் சரளமாக பேச முடியாமல் தடுமாறினேன். ஆங்கிலத்தில் பேசமுடியவில்லையே என்று தாழ்வு மனப்பான்மையில் புளுங்கித் தவித்த காலம் போய் இன்று ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச முடியாத நிலைமை. வாழ்க்கை ஒரு சக்கரம்!

இருபது வருடங்களில் நான் தொலைத்த அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக எனது இந்த வலைப்பதிவு பயணத்தை மீண்டும் தொடரலாம் என்ற எண்ணம். எனது தொலைத்தொடர்பு துறை (Telecommunications), பொருளாதாரம், மேலாண்மை, அனுபவங்கள், கதை, கவிதைகள் என்ற தளங்களில் எழுதலாம் என்ற எண்ணம். 

எனவே நானும் ரவுடிதான்(பதிவர்) என்று ஜீப்பில் ஏற முடிவு செய்துவிட்டேன்...............................!!


உங்கள் ஆதரவை வேண்டி.......

அன்புடன்,
-ரவிச்சந்திரன்