வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Friday, February 22, 2013

டாலர் நகரம்




நண்பர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தகத்தை 27-1-2013 அன்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது கிடைக்கப் பெற்றாலும் தொடர்ந்து வார இறுதிப் பயணங்கள் மற்றும் வேலை காரணமாக புத்தகத்தை உடனே படிக்க இயலவில்லை. இந்த வாரத்தில்தான் படித்து முடித்தேன். இந்த புத்தகத்திலுள்ள ஒரு சில பகுதிகளை ஜோதிஜியின் வலைத்தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். புத்தகமாக கையில் வைத்துக்கொண்டு படித்தபோது ஒரு நாவலைப் படிக்கும் ஆர்வத்துடன் ஒரே மூச்சில் படித்து விட்டேன். காரணம்... அவ்வளவு அனுபவங்கள், தகவல்கள் அடங்கிய புத்தகம்.

உலகம் தெரியாத அப்பாவி கிராமத்து இளைஞனாக ஒரு மஞ்சள் பையுடன் 1992 ஆம் ஆண்டில் திருப்பூருக்கு வரும் ஜோதிஜியின் ஆரம்ப கால அனுபவங்களுடன் நம்மை திருப்பூர் நகரத்தின் பின்னலாடை நிறுவனங்களின் உள்ளே அழைத்து செல்கிறார். ஒரு சாதரன தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, சூபர்வைசர், மேலாளர், சொந்த தொழில், தற்போது ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பொது மேலாளர் (General Manager) என்று உயர்ந்திருக்கும் ஜோதிஜி தனது கடந்த இருபது ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தில் திருப்பூரின் வளர்ச்சி,வீக்கம், பிரச்சனைகள், பின்னடைவு ஆகியவற்றை பற்றி ஆழமாக, துல்லியமான தகவல்கள், புகைப்டங்கள் வாயிலாக தெரிவிக்கிறார். திருப்பூர் நகரத்தின் பல முகங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக விளங்குகிறது டாலர் நகரம்.  

அப்பாவி இளைஞனாக இருந்ததால் ஆரம்ப காலத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் திருப்பூரை நோக்கி படையெடுக்கும் தற்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். தன் அனுபங்கள மட்டும் அல்லாமல் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கருணாகரன் என்ற கிராமத்து சிறுவன் காஜாபட்டன் அடிக்கும் குழந்தை தொழிலாளியாக திருப்பூருக்கு வந்து இன்று பல கோடி நிறுவனத்தின் அதிபராக வளர்ந்திருப்பது. கிராமத்திலிருந்து திருப்பூருக்கு தொழிலாளியாக வந்து 100 கோடி நிறுவனத்திற்கு முதலாளியாக உயர்ந்து கெட்ட பழக்க வழக்கங்களால் இன்று தெருவில் நிற்கும் வாழ்ந்து கெட்ட ஆறுமுகம் ஆகிய இருவர்களைப் பற்றிய பதிவுகள் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொள்ளக்கூடிய பாடங்கள்.



திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் என்பது பெரும்பாலும் முதலாளிகளின் மேற்பார்வையில் தொழிலாளார்களை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 14 மணி நேரம் கசக்கிப் பிழிந்து வரைமுறை இல்லா வேலை வாங்குதல் என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. மனித வளத்துறை (Human Resources) என்பது பெரும்பாலன நிறுவனங்களில் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன, சூபர்வைசர்கள், மேலாளர்கள் தொழிலாளர்களை நடத்தும் முறைகள், பெண்களுக்கு கொடுக்கும் பாலியியல் தொந்தரவுகள், அதை குடுபத்திற்காக ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்ட பெண்கள், “பணம் துரத்திப் பறவைகள்” என்ற அத்தியாத்தில் கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை படித்த போது மனம் மிகவும் கனத்து விட்டது.

நாம் தினசரி செய்திகளில் பார்த்து, படித்து கடந்து செல்லும் திருப்பூர் சாயப் பட்டறைகள் பற்றிய பிரச்சினைகள், அரசாங்க பஞ்சு வணிக ஏற்றுமதி இறக்குமதி கொள்கை மாற்றங்கள், அன்னிய செலவாணி ஏற்ற இறக்கங்கள், அன்னிய முதலீடு ஆகியவகளைப் பற்றி மிக தெளிவாக பல பாகங்களில் விளக்கி சொல்லியிருப்பது மிகவும் பாரட்டக் தக்கது. ”டாலர் நகரம்” புத்தகத்தை படித்த பிறகு  திருப்பூர் பின்னலாடை தொழில் இயங்கும் முறை பற்றி முழுமையாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.




ஜோதிஜி தன் சுயசரிதை கலந்த திருப்பூரின் ஆவணமாக இந்த புத்தகத்தை ஒரு கலவையாக எழுதிருக்கிறார். இதனால் படிக்கும்போது சில இடங்களில் ஒரு தொடர்பில்லாமல் இருக்கின்றது. இந்த சிறு குறையைத் தவிர்த்து பார்த்தால் “டாலர் நகரம்” திருப்பூர் மற்றும் பின்னலாடை தொழில் பற்றிய மிகச் சிறந்த ஆவண புத்தகம் !!!