வெட்டிக்காடு

வெட்டிக்காடு
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, September 11, 2010

*11*: உழவன்

கல்லூரியில் படிக்கும் போது (1987) நான் எழுதிய முதல் கவிதை!

                                                                        உழவன்


கரிய இருட்டின்
கொடுங்கோலாட்சியை ஒழிக்க
கதிரவன் புறப்படும் முன்பே
கலப்பையை
தோளில் சுமந்து சென்று...

கரிய இருளிடம்
போராடி வெற்றிபெற்ற 
இருமாப்பால்
கதிரவன் பவனிவரும்
பகல்பொழுது முழுவதும்
நெற்றி வியர்வை
நிலத்தில் விழ உழைத்து...

கரிய இருளிடம்
இரண்டாம் கட்டப் போரில்
தோல்வியைத் தழுவிய
கதிரவன் ஓடி மறைந்த பின்
வீடு திரும்பும் உழைப்பாளி!

                     *                   *               *

Thursday, July 08, 2010

தேடுகிறேன்.....

கோட் சூட் போட்டுகிட்டு இன்று உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் அடிப்படையில் நான் ஒரு மஞ்சள் பை கிராமத்து மனிதன். இப்போது மஞ்சள் பைக்கு பதிலாக லேப்டாப் பை.... இதுதான் வித்தியாசம்:) நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடிதத படம்.... எங்கள் ஊர் நாட்டாமை என் பெரிய்ப்பா (தேவர் மகன் சிவாஜி கணேசன் மாதிரி இருப்பார்) ஸ்டைலில் பெரிய மீசை வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம்தான். அதைத்தான் என் புரொபைல் படமாக வைத்துள்ளேன். வலது பக்கம் உள்ள புகைப்படத்தில் நான் மாறி விட்டதைப்போல் எங்கள் வெட்டிக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் இந்த 25 வருடங்களில் காலச்சக்கரம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால் மாறிவிட்டன. கடந்த 2004 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட வெட்டிக்காட்டிற்கு சென்றபோது எழுதிய கவிதை!
                                                                     தேடுகிறேன்.....


பொறியியல் படித்து
அமெரிக்கா வந்து
வருடங்கள் பத்து
உருண்டோடி விட்டன!

இரண்டு வருடங்களுக்கொருமுறை
இந்தியா என்ற அட்டவணைப்படி
இன்று நான் என் கிராமத்தில்...

பத்து வருடங்களில்
எப்படியெல்லாம் மாறிவிட்டது
எனது கிராமம்!

கிட்டி, கிளி கோடு பாய்தல்
விளையாடும் சிறுவர்கள் இல்லை.
கிரிக்கெட் விளையாடும்
சிறார்கள்!

பாவாடை, தாவாணி மறந்து
சுடிதாரில் உலா வரும்
பள்ளிக்கூட மாணவிகள்!

மாட்டு வண்டி பூட்டி
மன்னார்குடி டவுன் சென்ற
மக்கள்
போகிறார்கள் இன்று
புழுதி பறக்கச் செல்லும்
சிறு பேருந்தில்!

காளைகளை ஏரில் பூட்டி
கலப்பயை கையில் பிடித்து
ஏர் உழும் காட்சிகள் இல்லை.
டிராக்டர் வைத்து
உழும் விவசாயிகள்!

முப்பது அடி கிணறு வெட்டி
முகத்தடியில் மாடுகள் பூட்டி
தண்ணீர் இறைக்கும்
காட்சிகளை காணவே முடியவில்லை.
முன்னூறு அடி
ஆழ்குழாய் கிணறு தோண்டி
மோட்டார் வைத்து
தண்ணீர் இறைக்கும் முறை!

நெற்கதிர்களை லாவகமாக
கையில் தூக்கி, கல்லில் அடித்து
கதிர் அடிக்கும் காட்சிகள் இல்லை.
இதற்கும் வந்து விட்டது
இயந்திரம்!

கோயில் திருவிழாக்களில்
அரிச்சந்திரா, பவளக்கொடி
வள்ளித் திருமணம்
நாடகங்கள் இல்லை.
திரை கட்டி காட்டப்படும்
சினிமாக்கள்!

கரகாட்டாம், மயிலாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம் இல்லை.
கோடம்பாக்கம் குமரிகள் போடும்
குத்தாட்ங்கள்!

முச்சந்தியில் கூடி
பேசி, பாடி, சிரித்து
மகிழ்ந்த மக்கள் இன்று
மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள்
தொலைக்காட்சி பெட்டி முன்பு !

காலச் சக்கரம், விஞ்ஞான வளர்ச்சி
ஏற்படுத்திய மாற்றங்கள்!
நான் மட்டும் தேடுகிறேன்.....
நான் ஓடி விளையாண்ட

என் கிராமத்தை.....?!
                     * * *


                                                                                              




Wednesday, July 07, 2010

வெட்டிக்காடு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் வைரமுத்து அவர்கள் “எங்கள் ஊர்” என்ற தலைப்பில் அவருடைய கிராமத்தைப் பற்றி எழுதிய கவிதையை வார இதழ் ஒன்றில் படித்தேன். அதன் பாதிப்பில் நான் பிறந்து வளர்ந்த என்னுடைய ஊரான வெட்டிக்காட்டை பற்றி எழுதிய கவிதை இது.  இதை கொஞ்சம் மாற்றி இப்போது எழுதலாம் என்று தோன்றியது. வேண்டாம்..... இப்படியே இருக்கட்டும்.

                                                                      வெட்டிக்காடு


காவிரி நங்கை களிப்புடன்
கைகொட்டிச் சிரித்து
ஓடி விளையாடும்
தஞ்சைத் தரணியில்
தஞ்சைக்கும் மன்னைக்குமிடையே
எததனையோ சிறு கிராமங்கள்



அச்சிறு கிராமங்களில்
ஒன்றுதான் வெட்டிக்காடு
நான் பிறந்த ஊர்!

o

காலைக் கதிரவன்
கருமையான இருட்டை
விரட்டிக் கொன்றதுபோல்
கருமை நிறங்கொண்ட
தங்களையும்
அழித்து விடுவானோ
என்ற பயத்தில்
காகங்கள் கரையும்
காலை நேரத்தில்
கலப்பையைத் தோளில் சுமந்து
காளைகளை ஓட்டிக்கொண்டு
வயல்களுக்குச் சென்று
உழைப்பின் சிறப்பை
உலகுக்கு எடுத்துக்காட்டும்
உழவர்கள் வாழும் ஊர்.

o

ஒன்று முதல் பதினேழு வயது வரை
இதுதான் உலகம் என்றெண்ணி
நான் ஓடி விளையாடிய ஊர்.

என் எண்ணங்களுக்கும்
உணர்ச்சிகளுக்கும் அஸ்திவாரம்
இங்குதான் போடப்பட்டது!

நான் உலகிலுள்ள எத்தனையோ
நகரங்களுக்கும் ஊர்களுக்கும்
சென்று வந்திருக்கிறேன்.
அங்கெல்லாம் கிடைக்காத இன்பம்
ஒவ்வொரு முறையும்
என் ஊரில் காலடியெடுத்து
வைக்கும்போது உணர்கின்றேன்.
பிறந்த மண்ணின் மகிமையோ?

o

'
வெட்டிக்காடு'
இந்த கிராமத்திற்கேன்
இப்படியொரு
விசித்திரமான பெயர்?

அடர்த்தியான காடுகளை
வெட்டியழித்து
எமது முன்னோர்கள்
இங்கு குடியேறியதனால்
ஏற்பட்ட பெயரிது
இதைத்தவிர வேறெந்த
சரித்திர முக்கியத்துவமும்
கிடையாது என்று கூறி
என் சந்தேகத்தை விளக்கினார்
என் மூன்றாம் வகுப்பாசிரியர்.

o

ஊருக்கு தெற்கே ஓர் குளம்.
அதற்கடுத்து
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
தெரியும் பச்சைப் பசேலன்ற
வயல் வெளிகள்.

ஆண்களும், பெண்களும்
வயல் வெளிகளில்
ஏர் உழுதல், நாற்று பறித்தல்
நாற்று நடுதல், களை எடுத்தல்
என்ற பலவகையான வேலைகளைத்
தெம்மாங்கு பாட்டுகள் பாடியபடி
சுட்டெரிக்கும் கதிரவனின்
வெப்பத்திற்குச் சளைக்காமல்
உழைக்கும் உழைப்பாளிகள்!

தங்களின் இந்த உயர்ந்த தொழிலுக்கு
'
உழுதுண்டு' என்ற குறளில்
வள்ளுவன் தந்த பெருமையைத் தவிர
வேறெந்த சுகத்தையும்
அனுபவிக்காத அப்பாவிகள்.

o

ஓடி விளையாடும்
சிறு ஆறுகள்

அறுவடையை எதிர்பார்த்து
தலை கவிழ்ந்து
நிற்கும் நெற்கதிர்கள்

கணவன்மார்களுக்கு
கஞ்சி கொண்டு செல்லும்
பெண்கள்

கவலையின்றி
குளத்திலும், ஆறுகளிலும்
குதித்து விளையாடும்
சிறுவர்கள்

ஆறுமாத காலமாக
வெயிலிலும், மழையிலும்
அயராது பாடுபட்டு
உழைத்த தங்களின் உழைப்பிற்குப்
பலன்தரும் நெற்கதிர்களை
அறுவடை செய்யப்போகும்
உழவர்களின் முகத்தில்
தோன்றும் மகிழ்ச்சி!

அடடா!
மருத நிலத்தின்
இந்த காட்சிகளைக் காணும்போது
மனதில் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்.

0

பள்ளி விடுமுறை நாட்களில்
எனக்கு மகிழ்ச்சி
ஏற்படுகின்றதோ இல்லையோ
எங்கள் வீட்டு
மாடுகளுக்குக் கொண்டாட்டம்தான்!

விடுமுறை நாட்களில்
கருத்துடன் மாடுகளை
மேய்த்துப் பராமரிப்பதுதான்
என் பெற்றோர்கள்
எனக்குக் கொடுக்கும் வேலை

வயல்வெளிகளில் மாடுகளை
மேயவிட்டுவிட்டு
நண்பர்களுடன் நான் போட்ட
ஆட்டங்களும், விளையாட்டுகளும்
எண்ணிடலங்கா...

கபடி விளையாடுவது
கிளி கோடு பாய்தல்
பட்டம் விடுவது
பந்து அடிப்பது
குளத்தில் விளையாடுவது
என்ற ஓர் நீண்ட
பட்டியலே போடலாம்.

அந்த இளம் வயதில்
என் நண்பர்களுடன் சேர்ந்து
எனது ஊரில் அடித்த
கொட்டங்கள் இன்னும்
எத்தனை! எத்தனை!

இவற்றையெல்லாம்
நினைத்துப் பார்த்தால்
திரும்ப அந்த இளமை நாட்கள்
கிடைக்காதா? என்று
மனம் ஏங்கும்.

o

ஒரு சராசரி மனிதனின்
பார்வையில் வெட்டிகாடு
ஓர் அமைதியான கிராமம்.
ஆனால்
என்னைப் பொருத்தவரை
எனது ஊர்
ஓர் சொர்க்க பூமி!!!

           *    *   *