வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, July 05, 2006

சிக்சர்...

மக்கள்ஸ் எல்லாம் தோனி மாதிரி சிக்சர் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வந்து ஒரு சிக்சர் அடிங்க சீனியர்னு நம்ம கைப்புள்ள http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html கூப்பிட்டிருக்கார். இதோ என்னுடைய ஆறு.


ஊர்கள்:

1. வெட்டிக்காடு

பிறந்து, வளர்ந்த கிராமம். பதினேழு வயது வரை ஓடி விளையாடிய ஊர். வெட்டிக்காட்டை மேலும் தெரிந்துகொள்ள இங்கே, http://vssravi.blogspot.com/2006/02/blog-post.html

2. சென்னை

ஐந்து ஆண்டுகள் வசித்த நகரம். கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தபோது விடுதியில் இருந்த நான்கு ஆண்டுகள் (1985-1989), பிறகு Aurelec (Nexus Computers: 1991-1992) பணிபுரிந்தபோது ஓர் ஆண்டு.

3. கொச்சி

டில்லியிலும், சென்னையிலும் மூன்று மாதங்கள் பயிற்சி முடிந்த பிறகு முதன் முதலில் ஒரு வருடம் வேலை பார்த்த ஊர் (1989-1990). தெற்கே திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே காசர்கோடு வரைக்கும் இடையிலுள்ள அத்தனை நகரங்களுக்கும், பணி நிமித்தம் சென்றிருக்கிறேன். இயற்கை அன்னையின் செல்லக்குழந்தையான கேரள மாநிலத்தின் அற்புதமான காட்சிகளை (Backwaters, தென்னை மரங்கள், சேச்சிகள் !) ரசித்துக்கொண்டே சென்ற ரயில், பேருந்து பிரயாணங்களை என்றும் மறக்க முடியாது.

4. பெங்களூர்

C-DOT-ல் பணிபுரிந்தபோது ஒரு இரண்டு ஆண்டுகள் (1992-1994) வசித்த நகரம். அப்போது I.I.Sc-ல் Ph.D செய்துகொண்டிருந்த எனது பள்ளி, கல்லூரி நண்பன் ராஜாராமுடன் (பத்தாம் வகுப்பிலிருந்து B.E வரைக்கும் ஏழு ஆண்டுகள் ஒரே பெஞ்ச்) Scooter-ல் சினிமா, M.G. Road, கர்னாடிக் இசைக்கச்சேரிகள், ரெஸ்டாரன்ஸ் என்று துள்ளித்திரிந்த காலம்.

5. சிங்கப்பூர்

வேலை நிமித்தம் முதன்முதலில் வந்து சேர்ந்த வெளிநாடு. சிங்கப்பூர் சாங்கி விமான தளத்தையும், சாலைகள், கட்டிடங்களை பார்த்து பிரமித்து நின்ற அந்த நாள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிற்கின்றது. ஒரு ஐந்து வருடங்கள் (1994-1999) சிங்கப்பூர் வாழ்க்கை. Telecom Consultant வேலை காரணமாக அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா நாடுகள் என்று விமானம் + ஹோட்டல் என்ற நாடோடி வாழ்க்கை வெறுத்துப்போய் எங்களுடைய பாஸ்டன் தலைமையகத்தில் Engineering வேலை கிடைத்தவுடன் சிங்கப்பூருக்கு 1999-ல் பை.. பை.

6. பாஸ்டன்

1999 முதல் வாழ்ந்து வரும் ஊர்.


புத்தங்கள்:

1. பொன்னியின் செல்வன்

முதன் முதலில் கல்லூரி மூன்றாம் ஆண்டு கோடை விடுமுறையில் படித்தேன். அந்த கோடை விடுமுறை முழுவதும் சோழ சாம்ராச்சியத்தில் வாழ்ந்த காலம் அது. இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கத்தில் "பொன்னி வளவன்" என்று ஓர் காலத்தில் பெயர் வைத்துக்கொண்டு பிலிம் காட்டியதுண்டு !

2. கள்ளிக்காட்டு இதிகாசம்

பணி நிமித்தம் டொரோண்டோவில் இருந்தபோது படித்த கதை. அப்படியே என்னை டொரோண்டோவிலிருந்து வெட்டிக்காட்டிற்கு கடத்திச்சென்ற புத்தகம்.

3. மோகமுள்

பாதியில் விட்டதிலிருந்து ஒரு சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை 5.20க்கு முடித்துவிட்டுதான் தூங்கப்போனேன்.

4. God Father

கல்லூரிக்கு வந்து நண்பர்களின் புண்னியத்தில் ஆங்கில கதைப் புத்தங்களை தட்டுத் தடுமாறி படிக்க ஆரம்பித்தேன். முதன் முதலில் ஒரு வெறியுடன் படித்து முடித்த ஆங்கில புத்தகம்.

5. Iacocca - Lee Iacocca (http://en.wikipedia.org/wiki/Lee_Iacocca)

ஆங்கிலத்தில் முதன் முதலில் படித்த சுயசரிதை புத்தகம். An inspirational autobiography book.

6. Seven Habits of Highly Effective People - Stephen R. Covey

தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.

மனிதர்கள் / தலைவர்கள்:

1. வை.சி.சோமு ஆலம்பிரியர் - எனது தந்தையார். 69 வயதில் தான் இறக்கும் வரை உழைத்துக்கொண்டேயிருந்த கிராமத்து விவசாயி.

2. தந்தை பெரியார்

3. பெருந்தலைவர் காமராசர்

4. டாக்டர் சாம் பிட்ரோடா (Dr.Sam Pitroda) - இந்தியாவின் தொலைத் தொடர்பு (Telecommunications) புரட்சிக்கு வித்திட்ட மனிதர். இவரைப்பற்றி பிறகு தனி பதிவு போடுகிறேன்.

5. கபில்தேவ்

6. பாரதிராஜா

தமிழ் படங்கள்:

1. முதல் மரியாதை

2. நாயகன்

3. முள்ளும் மலரும்

4. அழகி

5. தவமாய் தவமிருந்து

6. கன்னத்தில் முத்தமிட்டால்

வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், தேவர் மகன், பாட்ஷா, ஆட்டோகிராப்............ என்ற நீண்ட பட்டியல் உள்ளது.

ஆங்கில படங்கள்:

1. God Father - I

2. Titanic

3. Madagascar

4. Castaway

5. King Kong - 2006

6. Gladiator

பாடல்கள்:

மணி இரவு பணிரென்டாகப் போகிறது. Closing the laptop...

கவிப்பேரரசு வைரமுத்துவுடன் ஒர் சந்திப்பு



இந்த வார இறுதியில் ஜுலை 1, 2 தேதிகளில் நியுயார்க் நகரில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் (FETNA) தமிழர் விழாவில் கலந்துகொண்டேன். இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிட்டியது. வைரமுத்து அவர்களின் தீவிர ரசிகன் நான், காரணம் அவரும் என்னைப்போல் ஓர் கிராமத்து மனிதர். பல ச்நதர்ப்பங்களில் அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்போது நானே எழுதியது போன்று உணர்ந்திருக்கின்றேன். கிடைத்த சிறிது நேரத்தில் என்ன பேசுவது என்ற தயக்கம். "கள்ளிக்காட்டு இதிகாசம்" பற்றி எனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டேன்.

"மிக்க மகிழ்ச்சி, கருவாச்சி காவியம் படித்தீர்களா?" என்றார்.

"இன்னும் படிக்கவில்லை, புத்தகமாக வந்தபிறகு படிக்கலாம் என்று இருகிகிறேன்" என்றேன்.

"கூடிய விரைவில் புத்தகம் வரவுள்ளது, கட்டாயம் படியுங்கள்" என்றார்.

அதற்குள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் வந்துவிட்டனர். நானும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றேன்.

பி.கு:

எனக்கு V.I.Pக்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. இந்த விழாவில் நடிகர் சரத்குமார், பேராசிரியர் ஞானசம்பந்தன், பட்டிமன்ற நடுவர் டாக்டர் அறிவொளி, கவிஞர் இலந்தை இராமசாமி ஆகியோர்களையும் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. கவிப்பேரரசு எனது ஆசான் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், ஆனால் புகைப்படம் எடுத்த நண்பர் சற்று சொதப்பி விட்டார்!!.