வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Thursday, February 09, 2006

வழியில போற ஓணான...

கிண்டி பொறியியல் கல்லூரியில் நான் முதல் வருடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்ட காலம் அது.

ஏதோ காரணமாக கடைசி வருட மாணவர்களுக்கு ஒரு செமஸ்டர் தள்ளி போயிடுச்சு. அதனால போதிய ஹாஸ்டல் வசதி இல்லாததால் அவசர அவசரமாக விடுதி என்று போர்ட மாட்டி ஹைதர் அலி காலத்து பழைய கட்டிடங்களில் மாடுகளை தொழுவத்தில் அடைச்சு வைப்பதுபோல இளிச்சவாயன்களான எங்களை அடைத்து வைத்திருந்தது கல்லூரி நிர்வாகம். இது சீனியர் பசங்களுக்கு நல்லா வசதியா போயிடுச்சு. எல்லோரையும் மாடுகளைப் போல ஒண்ணா ஓட்டிக்கிட்டு போய் ராகிங் செய்ய. இப்போ மாதிரி ராகிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இல்லாத காலம் அது. ராகிங் பொறி பறக்கும்!

எங்களை அடைத்து வைத்து இருந்ததோ 'அனெக்ஸ்-II' என்ற லேடிஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலிருந்த கட்டிடம். கவருமெண்டு தர்ம ஆஸ்பத்திரி மாதிரி அந்தப் பக்கம் இருபது இரும்புக் கட்டில்கள், இந்தப் பக்கம் இருபது இரும்பு கட்டில்கள். அவனவன் தங்களோட பெட்டிகளையும், உடமைகளயும் இரும்புக் கட்டிலுக்கு கீழேயே வச்சுக்கணும். இருக்கிற நாலு பாத்ரூமுக்கு காலை ஆறு மணியிலேர்ந்து அடிதடி ரகளை நடக்கும்.

ராத்திரியானா அவனவன் சீனியர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவங்கள், இவனுங்களோட ராகிங்கியிலேர்ந்து எப்படி தப்பிப்பது? என்று சபை களை கட்டும்.

சீனியர்களா அவங்க... எமகாதகப் பயலுங்க!

சீனியர்களப் பார்த்தவுடன் ஏடாகூடமான ஒரு போஸில் வளைந்து சல்யூட் அடிக்க வேண்டும். 'கிண்டி சல்யூட்' னு அதற்கு பெயர். சல்யூட் அடிக்கலன்னா அன்னிக்கு ராத்திரி தர்ம அடி கிடைக்கும்!

ராத்திரி ஆனா கல்லூரி முன்னாடி இருக்குற அண்ணா சிலை முன்னாடி நிக்க வச்சு "ஏய்.. அண்ணா, அன்று நீ ஓர் விரல் காட்டி ஓராயிரம்...." என்று தொடங்கும் அபத்தமான நீண்ட வசனத்தை மனப்பாடம் செய்ய வைத்து பேச வைப்பானுங்க. 'அண்ணாயிஸம்' என்று அதுக்குப் பேரு.

எல்லோரையும் கிரவுண்டுல உட்கார வச்சு ஒவ்வொரு நாளும் ஒரு 'பலான' தலைப்பு கொடுத்து தீப்பொறி பறக்கும் கருத்துகள்(?!) கொண்ட பட்டிமண்டபம் நடத்துவானுங்க.

பனியன சட்டை மேலேயும், ஜட்டிய பேண்ட் மேலயும் போட்டுக்கச் சொல்லி "நான் சூப்பர்மேன்!" அப்படின்னு கூவிக்கிட்டே கிரவுண்ட சுத்தி ஓடிவரச் சொல்லுவானுங்க.

கிரிக்கெட் கிரவுண்டுல பேட், பந்து இல்லாம கற்பனை கிரிக்கெட் விளையாடணும். "டேய், பவுன்சருடா பாத்து விளையாடுடான்னு" கத்துவானுங்க. சரி பவுன்சருதான்னேன்னு ஹூக் சாட் அடிச்சா, "நாயே.. ஹெல்மெட் போடாம விளையாடுற.. குனிஞ்சுக்காம ஹூக் சாட் அடிக்கிறேயே.. பந்து மண்டையில அடிபட்டு நீ செத்துப் போயிட்டா... உன்னோட அப்பன், ஆத்தாவுக்கு நாங்க என்னடா... பதில் சொல்லுறது?" என்று அக்கறையாக் கேட்பானுங்க.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் எங்கள ஒரு ஆறு பேர அழச்சிகிட்டு சினிமா பார்த்துட்டு வரலான்னு நாலு சீனியர் பசங்க கூட்டிக்கிட்டுப் போனாங்க. "டேய்.. பசங்களா நாங்க ஒரு பஸ் ஸ்டாப் வந்தவுடன் கையக் காட்டுவோம். எல்லாரும் "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" அப்படீன்னு சத்தமா கத்தணும்.. புரிஞ்சுதா" என்றார்கள்.

"சரிங்க சார்..." என்று பூம் பூம் மாடு மாதிரி நாங்க தலையாட்டினோம்.

5B பஸ்சுல எங்கள ஏத்தி அழைச்சிகிட்டுப் போனங்க. சைதாப்பேட்டை பஸ் ஸ்டாப் வந்தவுடன் சீனியர் பசங்க கையக் காட்னாங்க. நாங்களோ மெட்ராசுக்குப் புதுசு. சைதாப்பேட்டை எது, தி.நகர் எதுன்னு எங்களுக்குத் தெரியாது. "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" ன்னு உரக்கக் கத்தினோம். தி.நகர் பயணிகள் பலர் தி.நகர் வந்துடிச்சுன்னு திடுதிப்புன்னு இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. பேக்கு மாதிரி நின்னுக்கிட்டிருந்த எங்களைப் பார்த்து கண்டக்டரும், டிரைவரும் "டேய்.. சாவு கிராக்கி.. யாருடா அது தி.நகர் வந்திடுச்சின்னு கத்தினது"ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரே ரகளையாப் போயிடிச்சு அன்னிக்கு.

இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பயலுக இருக்காங்களே... கொலகாரப் பசங்க! போன வருஷம் தாங்கள் பட்ட ராகிங்கிற்கு பழிக்குப் பழி வாங்கணுமுன்னு வெறி புடிச்சி அலைவானுங்க.

எங்க 'அனெக்ஸ்-II' ஹாஸ்டல்லேருந்து ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்க சாப்பிடற 'B' மெஸ்சத் தாண்டிதான் நாங்க சாப்பிடுற 'C' மெஸ்ஸுக்குப் போகணும். கரெக்டா காத்திருந்து மெஸ்ஸுலேர்ந்து ராத்திரி சாப்பிட்டு வரும்போது பத்திகிட்டுப் போயிடுவானுங்க.

ஒரு நாளு நடு ராத்திரியில மத்த பசங்க எல்லாம் நல்லா தூங்கிட்டு இருக்கும்போது.. எங்க மின்னணுவியல் கோஷ்டியான நான் (வெட்டிக்ஸ்), 'பட்டு' செந்தில், 'குல்டி' வெங்கட், 'காந்தி' சரவணன், 'நக்சலைட்' செந்தில், 'சித்தப்பு' லோகநாதன் எல்லாம் சேர்ந்து இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்களோட மரண ராகிங்கிலேர்ந்து எப்புடிடா தப்புவதுன்னு ஆலோசனை பண்ணினோம். பலவகையான ஐடியாக்கள்! கடசியில பட்டு சொன்ன ஐடியாத்தான் சரின்னு சபை முடிவு பண்ணியது. என்னான்னா... நேரா 'B' மெஸ் வழியாப் போகம, எல்லாப் பசங்களும் மெஸ்ஸுக்குப் போன பின்னாடி.. கொஞ்ச நேரம் கழிச்சி, லேடிஸ் ஹாஸ்டல் அந்தப்பக்கம் இருக்கிற முள்ளுச் செடிங்க மண்டி கிடக்குற எடம் வழியா உள்ள புகுந்து, 'I' பிளாக் வழியா வந்து மெஸ்ஸுக்குப் போயிட்டு வந்திடலாம். இந்த ரகசியத்த நமக்குள்ள மட்டும் வச்சிக்கணும். இதுதான்.

பட்டோட ஐடியா அமர்க்களமா வொர்க் அவுட்டாச்சு. மூணு வாரமா நாங்க மட்டும் யார்கிட்டேயும் மாட்டமா மெஸ் போயி சாப்பிட்டு வந்துகிட்டு இருந்தோம்.

வச்சான்ய்யா... ஆப்பு, அதுக்கு ஒரு நாளு.. 'புட்டி' சாமிநாதன்.

சோடாபுட்டிக் கண்ணாடி மாட்டிய முகம். மெலிந்த உருவம். உலகம் பற்றி ஒண்ணும் தெரியாத அப்பாவி. சீனியர்களைக் கண்டு தொடை நடுங்குபவன். சீனியர்கள் வார்த்தைகளை வேதவாக்காகக் கடைபிடித்து வாழ்பவன். அவனோட போன சீனியர்களுகிட்ட வசமா நம்மளையும் மாட்டிவிட்டுவான் என்று பெயரெடுத்தவன். இப்படிப்பட்ட ஒரு மகா பேக்குதான் 'புட்டி' சாமிநாதன்.

வழக்கம்போல அன்னிக்கு ராத்திரியும் எல்லா பசங்களும் மெஸ்ஸுக்குப் போனவுடன், எங்க கோஷ்டி மெஸ்ஸுக்குக் கிளம்பிச்சு. அப்பப் பார்த்து புட்டியும் அங்கே இருந்தான். "நானும் உங்களோட மெஸ்ஸுக்கு வர்றேன்டா" என்று கூறிக்கொண்டு எங்களுடன் கிளம்பினான். நாங்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். என்ன சொல்றதுன்னு ஒருத்தனுக்கும் தெரியல. புட்டி எந்திரவியல். நான் மின்னணுவியல். புட்டி மீது எனக்கு சற்று பாசம் உண்டு. ஏன்னா.. அவன் ஊரு கும்பகோனம். எங்க தஞ்சாவூர் மாவட்டம். அதனாலதான்.

"மச்சி.. புட்டி பாவம்டா.. அவனையும் நம்மளோட கூட்டிக்கிட்டு போலாம்டா" என்றேன் நான்.

"வெட்டிக்ஸ் வேண்டான்டா" என்றான் பட்டு.

புட்டி ரொம்பக் கெஞ்சியதால் எங்கள் ரகசிய வழியைச் சொல்லி யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக் கூட்டிக்கிட்டு போனோம்.

முட்புதர்கள், 'I' பிளாக் கடந்து வந்தாச்சு. இதோ.. ஒரு எட்டு நட போட்டா 'C' மெஸ்.

அந்த நேரம் பார்த்து கருத்த மேனியும், நெடுநெடுவென வளத்தியும் கொண்ட செகண்ட் இயர் சீனியர் மதுரை 'முனியாண்டி' சங்கரும் அவன் நண்பனும் முதுகை எங்களுக்கு காட்டிக்கொண்டு சற்று தூரத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். 'முனியான்டி' சங்கர் ஒவ்வொரு ஜுனியருக்கும் முனியாண்டி 1, 2 என்று பெயர் வைத்து ராகிங் செய்வான். என்னோட பேரு 'முனியாண்டி-28'. அவன் "பேரு என்னடா?"னு கேட்டா 'முனியாண்டி-28' என்றுதான் சொல்லணும். தப்பித்தவறி நம்ம பேரச் சொல்லிட்டோமுன்னா..தொலச்சிப்புடுவான்... தொலச்சி.

மூன்று நாட்களுக்கு முன்னால் முனியாண்டி புட்டியை ராகிங் செய்தபோது அவன் சொன்ன "மவனே.. இனிமே என்ன எங்க பார்த்தாலும் எனக்கு கிண்டி சல்யூட் அடிக்கனும். இல்ல.. தொலைச்சிப்புடுவேன்" என்ற வார்த்தைகள் புட்டிக்குப் பொறிதட்டியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் புயலெனப் பாய்ந்து முனியாண்டிமுன் நின்று கிண்டி சல்யூட் அடித்து "வணக்கம் சார்!" என்றான் புட்டி. எங்களுக்கோ என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல...

"என்னடா.. திடீர்ன்னு முன்னாடி வந்து நிக்கிற.. எப்படி?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முனியாண்டி.

"இதோ இப்படி சார்" என்று கவுண்டமணியை மாட்டிவிடும் செந்திலைப்போல் முட்புதற்கள் மறைவில் நின்றிருந்த எங்களை நோக்கிக் கையைக் காட்டி... வச்சான் ஆப்பு.

"மவனுகளா.. எங்கடா கொஞ்ச நாளா உங்களக் கண்ணுல காணலேயேன்னு நெனச்சேன்.. இந்த ரகசிய வழிதான் காரணமா? இன்னிக்கு நீங்க தொலைஞ்சிங்கடா" என்று கூறி புட்டியை மட்டும் விட்டுவிட்டு எங்க கோஷ்டி எல்லோரையும் சாப்பிடக்கூட விடாமல் செகண்ட் பிளாக்கிற்கு ஓட்டிக்கிட்டுப் போனான் முனியாண்டி.

முனியாண்டி கோஷ்டி அன்னிக்கு எங்களப் பண்னின ராகிங்க இப்ப நெனச்சுப் பார்த்தாலும் மனசு பகீர்னு அடிச்சுக்கும். அப்புறம் பக்கம் பக்கமா படங்கள் நிறைய போட்ட எந்திரவியல் அசைண்மென்டை எல்லார்கிட்டேயும் கொடுத்து எழுதச் சொன்னாங்க.. பாவி பயலுங்க.

பசி வயித்தக் கிள்ள அசைண்மென்டை நாங்க எழுதி முடிச்சபோது ராத்திரி மணி ரெண்டு.

"வழியில போற ஓணான எடுத்து காதுல விட்டுகிட்டு, குத்றது கொடையிறதுன்னு சொன்னானாம்" அப்படின்னு எங்க கிராமத்துப் பெருசுங்க அடிக்கடி சொல்லுங்க. அன்னக்கித்தான் தெரிஞ்சது.. அதுக்கு அர்த்தம் என்னான்னு எனக்கு!

ooo

நன்றி: மரத்தடி.காம்

Saturday, February 04, 2006

தேடுகிறேன்...

சென்றமுறை இந்தியா வந்தபோது கால ஒட்டத்தில் எனது கிராமத்தில் ஏற்பட்டிற்கும் மாற்ற்ங்களை கண்டு எழதியது.


தேடுகிறேன்...
---------------------

பொறியியல் படித்து
அமெரிக்கா வந்து
வருடங்கள் பத்து
உருண்டோடி விட்டன!

இரண்டு வருடங்களுக்கொருமுறை
இந்தியா என்ற அட்டவணைப்படி
இன்று நான் என் கிராமத்தில்...

பத்து வருடங்களில்
எப்படியெல்லாம் மாறிவிட்டது
எனது கிராமம்!

கிட்டி, கிளி கோடு பாய்தல்
விளையாடும் சிறுவர்கள் இல்லை.
கிரிக்கெட் விளையாடும்
சிறார்கள்!

பாவாடை, தாவாணி மறந்து
சுடிதாரில் உலா வரும்
பள்ளிக்கூட மாணவிகள்!

மாட்டு வண்டி பூட்டி
மன்னார்குடி டவுன் சென்ற
மக்கள்
போகிறார்கள் இன்று
புழுதி பறக்கச் செல்லும்
சிறு பேருந்தில்!

காளைகளை ஏரில் பூட்டி
கலப்பயை கையில் பிடித்து
ஏர் உழும் காட்சிகள் இல்லை.
டிராக்டர் வைத்து
உழும் விவசாயிகள்!

முப்பது அடி கிணறு வெட்டி
முகத்தடியில் மாடுகள் பூட்டி
தண்ணீர் இறைக்கும்
காட்சிகளை காணவே முடியவில்லை.
முன்னூறு அடி
ஆழ்குழாய் கிணறு தோண்டி
மோட்டார் வைத்து
தண்ணீர் இறைக்கும் முறை!

நெற்கதிர்களை லாவகமாக
கையில் தூக்கி, கல்லில் அடித்து
கதிர் அடிக்கும் காட்சிகள் இல்லை.
இதற்கும் வந்து விட்டது
இயந்திரம்!

கோயில் திருவிழாக்களில்
அரிச்சந்திரா, பவளக்கொடி
வள்ளித் திருமணம்
நாடகங்கள் இல்லை.
திரை கட்டி காட்டப்படும்
சினிமாக்கள்!

கரகாட்டாம், மயிலாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம் இல்லை.
கோடம்பாக்கம் குமரிகள் போடும்
குத்தாட்ங்கள்!

முச்சந்தியில் கூடி
பேசி, பாடி, சிரித்து
மகிழ்ந்த மக்கள் இன்று
மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள்
தொலைக்காட்சி பெட்டி முன்பு !

காலச் சக்கரம், விஞ்ஞான வளர்ச்சி
ஏற்படுத்திய மாற்றங்கள்!
நான் மட்டும் தேடுகிறேன்.....
நான் ஓடி விளையாண்ட
என் கிராமத்தை.....?!

ooo

நன்றி: மரத்தடி.காம்

வெட்டிக்காடு

நான் பிறந்து வளர்ந்த எனது கிராமத்தைப்பற்றிய கவிதை.

வெட்டிக்காடு
-------------------

காவிரி நங்கை களிப்புடன்
கைகொட்டிச் சிரித்து
ஓடி விளையாடும்
தஞ்சைத் தரணியில்
தஞ்சைக்கும் மன்னைக்குமிடையே
எததனையோ சிறு கிராமங்கள்.

அச்சிறு கிராமங்களில்
ஒன்றுதான் வெட்டிக்காடு.
நான் பிறந்த ஊர்!

o

காலைக் கதிரவன்
கருமையான இருட்டை
விரட்டிக் கொன்றதுபோல்
கருமை நிறங்கொண்ட
தங்களையும்
அழித்து விடுவானோ
என்ற பயத்தில்
காகங்கள் கரையும்
காலை நேரத்தில்
கலப்பையைத் தோளில் சுமந்து
காளகளை ஓட்டிக்கொண்டு
வயல்களுக்குச் சென்று
உழைப்பின் சிறப்பை
உலகுக்கு எடுத்துக்காட்டும்
உழவர்கள் வாழும் ஊர்.

o

ஒன்று முதல் பதினேழு வயது வரை
இதுதான் உலகம் என்றெண்ணி
நான் ஓடி விளையாடிய ஊர்.

என் எண்ணங்களுக்கும்
உணர்ச்சிகளுக்கும் அஸ்திவாரம்
இங்குதான் போடப்பட்டது!

நான் உலகிலுள்ள எத்தனையோ
நகரங்களுக்கும் ஊர்களுக்கும்
சென்று வந்திருக்கிறேன்.
அங்கெல்லாம் கிடைக்காத இன்பம்
ஒவ்வொரு முறையும்
என் ஊரில் காலடியெடுத்து
வைக்கும்போது உணர்கின்றேன்.
பிறந்த மண்ணின் மகிமையோ?

o

'வெட்டிக்காடு'
இந்த கிராமத்திற்கேன்
இப்படியொரு
விசித்திரமான பெயர்?

அடர்த்தியான காடுகளை
வெட்டியழித்து
எமது முன்னோர்கள்
இங்கு குடியேறியதனால்
ஏற்பட்ட பெயரிது
இதைத்தவிர வேறெந்த
சரித்திர முக்கியத்துவமும்
கிடையாது என்று கூறி
என் சந்தேகத்தை விளக்கினார்
என் மூன்றாம் வகுப்பாசிரியர்.

o

ஊருக்கு தெற்கே ஓர் குளம்.
அதற்கடுத்து
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
தெரியும் பச்சைப் பசேலன்ற
வயல் வெளிகள்.

ஆண்களும், பெண்களும்
வயல் வெளிகளில்
ஏர் உழுதல், நாற்று பறித்தல்
நாற்று நடுதல், களை எடுத்தல்
என்ற பலவகையான வேலைகளைத்
தெம்மாங்கு பாட்டுகள் பாடியபடி
சுட்டெரிக்கும் கதிரவனின்
வெப்பத்திற்குச் சளைக்காமல்
உழைக்கும் உழைப்பாளிகள்!

தங்களின் இந்த உயர்ந்த தொழிலுக்கு
'உழுதுண்டு' என்ற குறளில்
வள்ளுவன் தந்த பெருமையைத் தவிர
வேறெந்த சுகத்தையும்
அனுபவிக்காத அப்பாவிகள்.

o

ஓடி விளையாடும்
சிறு ஆறுகள்

அறுவடையை எதிர்பார்த்து
தலை கவிழ்ந்து
நிற்கும் நெற்கதிர்கள்

கணவன்மார்களுக்கு
கஞ்சி கொண்டு செல்லும்
பெண்கள்

கவலையின்றி
குளத்திலும், ஆறுகளிலும்
குதித்து விளையாடும்
சிறுவர்கள்

ஆறுமாத காலமாக
வெயிலிலும், மழையிலும்
அயராது பாடுபட்டு
உழைத்த தங்களின் உழைப்பிற்குப்
பலன்தரும் நெற்கதிர்களை
அறுவடை செய்யப்போகும்
உழவர்களின் முகத்தில்
தோன்றும் மகிழ்ச்சி!

அடடா!
மருத நிலத்தின்
இந்த காட்சிகளைக் காணும்போது
மனதில் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்.

0

பள்ளி விடுமுறை நாட்களில்
எனக்கு மகிழ்ச்சி
ஏற்படுகின்றதோ இல்லையோ
எங்கள் வீட்டு
மாடுகளுக்குக் கொண்டாட்டம்தான்!

விடுமுறை நாட்களில்
கருத்துடன் மாடுகளை
மேய்த்துப் பராமரிப்பதுதான்
என் பெற்றோர்கள்
எனக்குக் கொடுக்கும் வேலை

வயல்வெளிகளில் மாடுகளை
மேயவிட்டுவிட்டு
நண்பர்களுடன் நான் போட்ட
ஆட்டங்களும், விளையாட்டுகளும்
எண்ணிடலங்கா...

கபடி விளையாடுவது
கிளி கோடு பாய்தல்
பட்டம் விடுவது
பந்து அடிப்பது
குளத்தில் விளையாடுவது
என்ற ஓர் நீண்ட
பட்டியலே போடலாம்.

அந்த இளம் வயதில்
என் நண்பர்களுடன் சேர்ந்து
எனது ஊரில் அடித்த
கொட்டங்கள் இன்னும்
எத்தனை! எத்தனை!

இவற்றையெல்லாம்
நினைத்துப் பார்த்தால்
திரும்ப அந்த இளமை நாட்கள்
கிடைக்காதா? என்று
மனம் ஏங்கும்.

o

ஒரு சராசரி மனிதனின்
பார்வையில் வெட்டிகாடு
ஓர் அமைதியான கிராமம்.
ஆனால்
என்னைப் பொருத்தவரை
எனது ஊர்
ஓர் சொர்க்க பூமி!!!

ooo

நன்றி: மரத்தடி.காம்

Wednesday, February 01, 2006

அறிமுகம்

வணக்கம்!

ஒருவழியாக நானும் என்னுடைய கிறுக்கல்களை பதிவு செய்ய இந்த வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.

என்னைப்பற்றிய சிறிய அறிமுகம்:

எனது பெயர் ரவிச்ச்ந்திரன். பிறந்து, வளர்ந்தது தஞ்சைத்தரணியில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு கிராமம். படித்தது கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னனுவியல் மற்றும் தொலைத்தொடர்பு (Electronics & Communications), தற்போது வசிப்பது அமெரிக்காவில் பாஸ்டன் பகுதியில். எனது எண்ணங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மரத்தடி மற்றும் திண்ணையில் ஒரு காலத்தில் எழுதியவற்றை இங்கு முதலில் போடுவதாக உத்தேசம்.


அன்புடன்,
-ரவிச்சந்திரன்