வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, July 05, 2006

சிக்சர்...

மக்கள்ஸ் எல்லாம் தோனி மாதிரி சிக்சர் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வந்து ஒரு சிக்சர் அடிங்க சீனியர்னு நம்ம கைப்புள்ள http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html கூப்பிட்டிருக்கார். இதோ என்னுடைய ஆறு.


ஊர்கள்:

1. வெட்டிக்காடு

பிறந்து, வளர்ந்த கிராமம். பதினேழு வயது வரை ஓடி விளையாடிய ஊர். வெட்டிக்காட்டை மேலும் தெரிந்துகொள்ள இங்கே, http://vssravi.blogspot.com/2006/02/blog-post.html

2. சென்னை

ஐந்து ஆண்டுகள் வசித்த நகரம். கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தபோது விடுதியில் இருந்த நான்கு ஆண்டுகள் (1985-1989), பிறகு Aurelec (Nexus Computers: 1991-1992) பணிபுரிந்தபோது ஓர் ஆண்டு.

3. கொச்சி

டில்லியிலும், சென்னையிலும் மூன்று மாதங்கள் பயிற்சி முடிந்த பிறகு முதன் முதலில் ஒரு வருடம் வேலை பார்த்த ஊர் (1989-1990). தெற்கே திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே காசர்கோடு வரைக்கும் இடையிலுள்ள அத்தனை நகரங்களுக்கும், பணி நிமித்தம் சென்றிருக்கிறேன். இயற்கை அன்னையின் செல்லக்குழந்தையான கேரள மாநிலத்தின் அற்புதமான காட்சிகளை (Backwaters, தென்னை மரங்கள், சேச்சிகள் !) ரசித்துக்கொண்டே சென்ற ரயில், பேருந்து பிரயாணங்களை என்றும் மறக்க முடியாது.

4. பெங்களூர்

C-DOT-ல் பணிபுரிந்தபோது ஒரு இரண்டு ஆண்டுகள் (1992-1994) வசித்த நகரம். அப்போது I.I.Sc-ல் Ph.D செய்துகொண்டிருந்த எனது பள்ளி, கல்லூரி நண்பன் ராஜாராமுடன் (பத்தாம் வகுப்பிலிருந்து B.E வரைக்கும் ஏழு ஆண்டுகள் ஒரே பெஞ்ச்) Scooter-ல் சினிமா, M.G. Road, கர்னாடிக் இசைக்கச்சேரிகள், ரெஸ்டாரன்ஸ் என்று துள்ளித்திரிந்த காலம்.

5. சிங்கப்பூர்

வேலை நிமித்தம் முதன்முதலில் வந்து சேர்ந்த வெளிநாடு. சிங்கப்பூர் சாங்கி விமான தளத்தையும், சாலைகள், கட்டிடங்களை பார்த்து பிரமித்து நின்ற அந்த நாள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிற்கின்றது. ஒரு ஐந்து வருடங்கள் (1994-1999) சிங்கப்பூர் வாழ்க்கை. Telecom Consultant வேலை காரணமாக அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா நாடுகள் என்று விமானம் + ஹோட்டல் என்ற நாடோடி வாழ்க்கை வெறுத்துப்போய் எங்களுடைய பாஸ்டன் தலைமையகத்தில் Engineering வேலை கிடைத்தவுடன் சிங்கப்பூருக்கு 1999-ல் பை.. பை.

6. பாஸ்டன்

1999 முதல் வாழ்ந்து வரும் ஊர்.


புத்தங்கள்:

1. பொன்னியின் செல்வன்

முதன் முதலில் கல்லூரி மூன்றாம் ஆண்டு கோடை விடுமுறையில் படித்தேன். அந்த கோடை விடுமுறை முழுவதும் சோழ சாம்ராச்சியத்தில் வாழ்ந்த காலம் அது. இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கத்தில் "பொன்னி வளவன்" என்று ஓர் காலத்தில் பெயர் வைத்துக்கொண்டு பிலிம் காட்டியதுண்டு !

2. கள்ளிக்காட்டு இதிகாசம்

பணி நிமித்தம் டொரோண்டோவில் இருந்தபோது படித்த கதை. அப்படியே என்னை டொரோண்டோவிலிருந்து வெட்டிக்காட்டிற்கு கடத்திச்சென்ற புத்தகம்.

3. மோகமுள்

பாதியில் விட்டதிலிருந்து ஒரு சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை 5.20க்கு முடித்துவிட்டுதான் தூங்கப்போனேன்.

4. God Father

கல்லூரிக்கு வந்து நண்பர்களின் புண்னியத்தில் ஆங்கில கதைப் புத்தங்களை தட்டுத் தடுமாறி படிக்க ஆரம்பித்தேன். முதன் முதலில் ஒரு வெறியுடன் படித்து முடித்த ஆங்கில புத்தகம்.

5. Iacocca - Lee Iacocca (http://en.wikipedia.org/wiki/Lee_Iacocca)

ஆங்கிலத்தில் முதன் முதலில் படித்த சுயசரிதை புத்தகம். An inspirational autobiography book.

6. Seven Habits of Highly Effective People - Stephen R. Covey

தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.

மனிதர்கள் / தலைவர்கள்:

1. வை.சி.சோமு ஆலம்பிரியர் - எனது தந்தையார். 69 வயதில் தான் இறக்கும் வரை உழைத்துக்கொண்டேயிருந்த கிராமத்து விவசாயி.

2. தந்தை பெரியார்

3. பெருந்தலைவர் காமராசர்

4. டாக்டர் சாம் பிட்ரோடா (Dr.Sam Pitroda) - இந்தியாவின் தொலைத் தொடர்பு (Telecommunications) புரட்சிக்கு வித்திட்ட மனிதர். இவரைப்பற்றி பிறகு தனி பதிவு போடுகிறேன்.

5. கபில்தேவ்

6. பாரதிராஜா

தமிழ் படங்கள்:

1. முதல் மரியாதை

2. நாயகன்

3. முள்ளும் மலரும்

4. அழகி

5. தவமாய் தவமிருந்து

6. கன்னத்தில் முத்தமிட்டால்

வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், தேவர் மகன், பாட்ஷா, ஆட்டோகிராப்............ என்ற நீண்ட பட்டியல் உள்ளது.

ஆங்கில படங்கள்:

1. God Father - I

2. Titanic

3. Madagascar

4. Castaway

5. King Kong - 2006

6. Gladiator

பாடல்கள்:

மணி இரவு பணிரென்டாகப் போகிறது. Closing the laptop...

கவிப்பேரரசு வைரமுத்துவுடன் ஒர் சந்திப்பு



இந்த வார இறுதியில் ஜுலை 1, 2 தேதிகளில் நியுயார்க் நகரில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் (FETNA) தமிழர் விழாவில் கலந்துகொண்டேன். இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிட்டியது. வைரமுத்து அவர்களின் தீவிர ரசிகன் நான், காரணம் அவரும் என்னைப்போல் ஓர் கிராமத்து மனிதர். பல ச்நதர்ப்பங்களில் அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்போது நானே எழுதியது போன்று உணர்ந்திருக்கின்றேன். கிடைத்த சிறிது நேரத்தில் என்ன பேசுவது என்ற தயக்கம். "கள்ளிக்காட்டு இதிகாசம்" பற்றி எனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டேன்.

"மிக்க மகிழ்ச்சி, கருவாச்சி காவியம் படித்தீர்களா?" என்றார்.

"இன்னும் படிக்கவில்லை, புத்தகமாக வந்தபிறகு படிக்கலாம் என்று இருகிகிறேன்" என்றேன்.

"கூடிய விரைவில் புத்தகம் வரவுள்ளது, கட்டாயம் படியுங்கள்" என்றார்.

அதற்குள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் வந்துவிட்டனர். நானும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றேன்.

பி.கு:

எனக்கு V.I.Pக்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. இந்த விழாவில் நடிகர் சரத்குமார், பேராசிரியர் ஞானசம்பந்தன், பட்டிமன்ற நடுவர் டாக்டர் அறிவொளி, கவிஞர் இலந்தை இராமசாமி ஆகியோர்களையும் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. கவிப்பேரரசு எனது ஆசான் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், ஆனால் புகைப்படம் எடுத்த நண்பர் சற்று சொதப்பி விட்டார்!!.

Saturday, June 17, 2006

அய்யனார் சாமி



வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளச்சு. நீண்ட நாட்கள் பதிவு போடலைன்னா தமிழ்மணத்திலிருந்து நம்மள கழட்டி விட்டுவாங்க என்ற பயத்தில் இந்த பதிவு.

வெட்டிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நான் நேரில் பார்த்த, கேட்ட உண்மை சம்பவங்களின் அடிப்படையில் "வெட்டிக்காடு கதைகள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதலாம்னு ஒர் எண்ணம்.

இந்தக் கதை நான் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.

வெட்டிக்காடு கதைகள் (1) - அய்யனார் சாமி
--------------------------------------------------------

மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எருமை வாகனத்துடன் எமதர்மராஜாவே நேரில் வந்து நின்னாக்கூட பயப்படமாட்டார்கள். ஆனால் தமிழாசிரியர் புலவர் 'எமன் ' ராஜகோபால் பெயரைக்கேட்டாலேயே பசங்களுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்ம்பித்து விடும்.

வெள்ளை வேட்டி, சட்டை, முருக்கிய பெரிய மீசை, இடுப்பில் சொருகியிருக்கும் கத்தி, கையில் ஒரு நீண்ட மூங்கில் கம்பு சகிதமாக தமிழ் ஐயா நடந்து வருவதைப் பார்த்தால் பரவை முனியம்மா பாடும் 'மதுரை வீரன் தானே.... ' என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.

'கயவாலிப் பயலுகளா... என்னாடா அங்க சத்தம் ? வந்தேன்னா... குன்டிய ராவிபுடுவேன் ' என்று எமன் ஒரு குரல் கொடுத்தாரென்றால் பசங்களோடு சேர்ந்து பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருக்கும் மரம், செடி கொடிகள் கூட ஆடாமல், அசையாமல் அமைதி காக்கும்.

நாயகன் வேலு நாயக்கரப்போல தமிழ் ஐயா நல்லவரா ? கெட்டவரா ? என்று புரிந்து கொள்ள முடியாத கேரக்டர்.

பாடம் படித்து வராத, வீட்டுப்பாடம் செய்து வராத மாணவர்களை மூங்கில் கம்பாலும், கிளோரியா கம்பாலும் வகுப்பின் மூலை முடுக்கெல்லாம் விரட்டி, விரட்டிச் சென்று அடி பிண்ணி எடுப்பார். பெண்களை கொஞ்சம் கூட அவருக்கு பிடிக்காது. பெண்களின் கட்டுரை நோட்டுப்புத்தகத்தை வாங்கி பேருக்கு ஏனோதானோவென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு 'இது என்ன கையெழுத்து ? ' என்று கூறி எழுதிய பக்கங்களை கிழித்து எறிவார். ஆனால்.. சில பசங்களின் கோழி கிறுக்கல் கையெழுத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்.

ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். பத்தாம் வகுப்பு மாணவர்களையெல்லாம் பொதுத்தேர்வு படிப்பு விடுமுறை மற்றும் பரீட்சை நாட்களில் மன்னார்குடி டவுனில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்து, சாப்பாடு போட்டு, பாடங்கள் சொல்லிக்கொடுத்து படிக்க வைப்பார்.

ஐயாவைப் பார்த்து மாணவர்கள் மட்டுமல்ல... தலைமையாசிரியர் அப்பிரானி நாரயணன் மற்றும் சக ஆசிரியர்கள் கூடப் பயந்து ஐயா முன்பு அடகக ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள்.

ஐயாவுக்கு தலைமையாசிரியார் நாரயணனை கொஞ்சம்கூட பிடிக்காது. எப்படி பிடிக்கும் ? ஐயா பழுத்த நாத்திகவாதி. பெரியாரின் சீடர். பசங்க தப்பித்தவறிக்கூட சாமி, பேய், பூதம் என்று சொன்னால் தொலைத்து விடுவார். ஆனால் தலைமையாசிரியர் நாரயணனோ பழுத்த ஆத்திகவாதி. நெற்றி நிறைய நாமத்துடன் வலம்வரும் ஓர் அப்பிரானி.

கல்வி அதிகாரி (D.E.O) எந்த நேரத்திலும் பள்ளியை ஆய்வு செய்ய வருவார் என்ற பயத்தில் ஆசிரியர்கள் எல்லாம் ஒழுங்காக பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொன்டிருந்த காலக்கட்டத்தில் ஓர் நாள் தமிழ் ஐயா தலைமயாசிரியர் நாரயணன் அறைக்குச்சென்று கிராமத்திலுள்ள அவருடைய வயலில் அறுவடை நடைபெறுவதால் 'ரெண்டு நாட்கள் லீவு வேண்டும் ' என்று தலைமையாசிரியரைப் பார்த்து கேட்டார்.

'என்ன சார்... D.E.O எந்த நேரத்திலும் ஆய்வுக்காக வருவார். இப்ப போய் லீவு கேட்கிறீங்களே.. ? ' என்று இழுத்தார் நாரயணன்.

சரேலென்று இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து மேசை மீது ஓங்கி குத்திவிட்டு 'பாப்பாரப் பயலே...இப்ப லீவு தரமுடியுமா ? முடியாதா ? ' என்றார் எமன்.

'நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானானும் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் சார்.. D.E.O கேட்டால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிடுகிறேன் ' என்று நடுங்கிக்கொண்டே சொல்லி அன்று எமனோட கத்திகிட்டேயிருந்து தப்பித்தார் நாரயணன்.

மூவாநல்லூர் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள அய்யனார், மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்ற கோவில்களில் ஆடுகள், கோழிகள் பலி கொடுத்து... கரகாட்டம், வள்ளித் திருமணம், பவளக்கொடி நாடகங்களுடன் திருவிழாக்கள் களை கட்டும் ஆடி மாதத்தில் ஓர் நாள்...

ஏழாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் ரெண்டாவது பீரியட் தமிழ் பாடத்தை நினைத்துக்கொண்டு மனதில் திகிலோடு அமர்ந்திருந்தார்கள். காரணம்... தமிழ் ஐயா திடாரென்று நேற்று இன்று எல்லோரும் மூன்று செய்யுள்கள் ஒப்புவிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். பள்ளி விட்டவுடன் வீட்டிற்குச் சென்று புத்தகப்பையை ஒரு மூலையில் கடாசிவிட்டு வயல்வெளிகளிலும், குளத்திலும் ஆட்டம் போடும் பசங்க... அடுத்த நாள் காலையில பள்ளிக்கூடத்திற்கு போகும்போதுதான் புத்தகப்பையைத் தேடுவார்கள். இப்படிப்பட்ட படிப்பாளிகளிடம் திடாரென்று மூன்று செய்யுள்களை ஒரே நாளில் படித்து ஒப்புவிக்க வேண்டும் என்று எமன் கூறினால் பாவம்... அவர்கள் என்ன பண்ணுவார்கள் ? குறைந்தபட்சம் ஒரு மூன்று, நான்கு நாட்கள் கொடுத்தாலாவது கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்பார்கள்.

முதல் மார்க் வாங்கும் சண்முகத்தைத் தவிர மற்ற எல்லோருக்கும் இன்று சரியான மண்டகப்படி உண்டு என்ற பயத்தில் மாணவர்களிருக்க இரண்டாவது பீரியட் தொடங்குவதற்கான மணியும் அடித்தது. ஐந்து நிமிடங்களாயிற்று... பத்து நிமிடங்களாயிற்று.. ஐயா இன்னும் வரவில்லை.
வகுப்புத் தலைவன் சண்முகம் ஆசிரியர்கள் அறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து 'சார்.. இன்னிக்கு வரலைடா ' என்றான். மகிழ்ச்சி வெள்ளத்தில் மாணவர்கள் எல்லாம் ஆரவாரம் செய்தார்கள்.

'டேய்... சத்தம் போடாதிங்கடா... புகழேந்தி சாருக்கு டீ வாங்க நான் காடுவெட்டியார் கடைக்குப் போறேன்... சத்தம் போடாம இருங்கடா ' என்று கூறிவிட்டு சண்முகம் சென்றுவிட்டான். கணக்கு வாத்தியார் புகழேந்திக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஊருக்குள்ளிருக்கும் காடுவெட்டியார் கடை டாதான் பிடிக்கும். பக்கதிலுள்ள கோவிந்தராசு டீக்கடை டீ அவருக்கு பிடிக்காது.

செய்யுள் படித்து வரச்சொன்ன எமன் வரவில்லை. ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் கொஞ்சநேரம் கூட சுதந்திரமாக பேசவிடாமல் பேசியவர்கள் பெயர் என்ற லிஸ்ட் ஒன்றைக் கொடுத்து வாத்தியார்களிடம் மாட்டிவிடும் சகுனி சண்முகமும் வகுப்பில் இல்லை. மாணவர்களின் மகிழ்ச்சியைக் கேட்கவும் வேண்டுமா ? அடி தூள் பறக்குது.

சண்முகம் போன ஐந்து நிமிடங்கள் கழித்து வயலுக்குச் சென்றுவிட்டு சற்று லேட்டாக வந்த தமிழ் ஐயா பள்ளியை சைக்கிளில் நெருங்கும்போது அமைதியாக இருக்க வேண்டிய அவருடைய ஏழாம் வகுப்பு சென்னை கார்ப்பரேசன் கவுன்சில் மீட்டீங் போல சத்தமாக இருப்பதைக்கண்டு அதிர்ந்து போனார். பள்ளியின் முன்வாசல் வழியாக பள்ளிக்குள் வராமல் அப்படியே பள்ளியின் பின்பக்கம் சென்று அங்கிருக்கும் ஒத்தையடிப்பாதை வழியாக உள்ளே நுழைந்து பள்ளிக்குள் வந்தார்.

வேட்டைக்குச் செல்லும் புலி போல மெல்ல பதுங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து மெதுவாக ஏழாம் வகுபின் பின்பகுதிக்குச் சென்று பாதி சுவருக்கு மேலேயிருக்கும் மூங்கில் தட்டியின் ஒட்டை வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் சண்முகத்தை காணவில்லை. மாணவர்கள் சத்தம் போட்டு ஓடி பிடித்து விளையாடுகிறார்கள். மாணவிகள் பெஞ்சு மேல் சாக்பீசால் கட்டம் போட்டு தாயம் விளையாடுகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று அப்படியே நின்று பார்க்க ஆரம்பித்தார் எமன்.

அந்த நேரம் பார்த்தா கடைசி பெஞ்ச் ராமமூர்த்திக்கு சாமி ஆட வேண்டும் என்ற ஆசை வரவேண்டும் ? திடாரென்று பெஞ்ச் மேல ஏறி 'டேய்... நான்தான்டா அய்யானார் சாமி ' என்று கூறிக்கொண்டு 'டேய்..டேய்.. ' என்று சத்தம் போட்டு சாமி ஆட ஆரம்பித்தான். மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சத்தத்தை நிறுத்திவிட்டு ராமமூர்த்தியின் சாமியாட்டத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

உடனே பக்கத்திலிருந்த அவன் நண்பன் வேல்மணி பூசாரியாக மாறி 'அய்யனார் சாமீ... எங்களை நீதான் காப்பத்தனும்... உனக்கு என்ன குறையிருந்தாலும் எங்ககிட்ட சொல்லு... நாங்க தீர்த்து வைக்கிறோம் சாமீ ' என்றான்.

'எனக்கு ஏன்டா... இந்த வருஷம் ரெண்டு கரும்புதான் (ஆடு) வெட்டியிருக்கீங்க '
'அடுத்த வருஷம் நெறைய வெட்றோம் சாமி '

பக்தன் செல்வராசு அய்யனார் சாமியிடம் சென்று 'சாமீ...நான் படிக்காமலேயே பாசகனும் சாமீ.. அதுக்கு நீதான் ஒரு வழியச் சொல்லனும் சாமீ ' என்றான்.

'டேய்.. எனக்கு ஒரு குஞ்சு (கோழி) காவு குடுடா...நீ படிக்காம பாசாக நான் ஏற்பாடு பன்றேன் '

பிறகு மேலும் ஒரு சில பக்தர்களுக்கு வரம் கொடுத்துவிட்டு மலையேறி விட்டது அய்யனார் சாமி. அய்யனார் சாமி ஆட்டத்தைப் பார்த்துவிட்டு எமன் ஒன்றும் செய்யாமல் ஆசிரியர்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.

அன்று மதியம் ஏழாம் வகுப்பிற்கு மூன்றாவது பீரியட் ஓவிய வகுப்பு. ஓவிய வகுப்பென்றால் மாணவர்களுக்கு ஒரே ஜாலிதான். ஏனென்றால் ஓவிய ஆசிரியர் முருகன் அம்புலிமாமா, ரத்னபால சிறுவர் கதை புத்தகங்களை படித்து அந்த கதைகளை அழகி படத்தில் வரும் பிச்சாண்டி வாத்தியார் போல ஆக்சன் போட்டு ரசித்து சொல்லுவார். இதனால் பசங்களுக்கு முருகன் வாத்தியாரை ரொம்பப் பிடிக்கும். 'மகேந்திரபுரி இளவரசி ' கதையின் நான்காம் பாகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.

மூன்றாவது பீரியட் தொடங்குவதற்கான பெல் அடித்தவுடன் ஒவிய ஆசிரியர் முருகனுக்குப் பதிலாக தமிழ் ஐயா வகுப்பினுள் நுழைந்தார். ஓவிய ஆசிரியரிடம் அனுமதி பெற்று அவருக்குப் பதில் எமன் வந்துவிட்டார். பசங்களுக்கு செய்யுள் சொல்லவேண்டுமே என்ற பயத்தில் குப்புனு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. நாற்காலியில் வந்து அமர்ந்து ஒரு ஐந்து நிமிடங்கள் பசங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்தார். புயல் அடிப்பதற்கு முன்பு நிலவும் மயான அமைதி.

'டேய்.. சண்முகம் காலையில வகுப்ப பார்த்துக்காம எங்கடா போயிருந்தே ? '

'புகழேந்தி சாருக்கு டீ வாங்கிவர காடுவெட்டியார் கடைக்கு போயிருந்தேன் சார் '

'சரி.. போயி வேப்ப இலை நிறைய ஒடிச்சுக்கிட்டு வாடா '

'டேய்.. செல்வம் நீ போயி ஒரு டப்பாவுல எதிர்த்த வீட்டு குப்பையில சாம்பல் அள்ளிகிட்டு வாடா '

'டேய்.. மதி நீ போயி பெரிசா ஒரு ஏழெட்டு கிளோரியா கம்பு ஒடிச்சிகிட்டு வாடா '

ஐயா சாலமன் பாப்பையா சொல்வது போல பசங்களுக்கு ஒன்னும் புரியல.. வெளங்கல.

வேப்ப இலை, சாம்பல், கிளோரியா கம்புகள் எல்லாம் எமன் முன்னாடி உள்ள மேசையில்.

'யாருடா.. அந்த அய்யனார் சாமி ? '

பசங்களுக்கு இப்ப வெளங்கிடுச்சி. அந்த அய்யனார் சாமியே வந்தாக்கூட நம்மல இன்னிக்கு எமன்கிட்டேயிருந்து காப்பாத்த முடியாது என்று நினைத்துக்கொண்டே மரண பயத்துடன் மெதுவாக எழுந்தான் ராமமூர்த்தி.

'பூசாரியும், படிக்காமலேயே பாசக வேணும்னு வரம் கேட்ட பக்தனும் எழுந்திருங்க '

வேல்மணியும் செல்வராசுவும் மெதுவாக எழுந்தார்கள்.

எமன் திடாரென்று ஒரு கையில் சாம்பலையும் மறுகையில் வேப்பிலையும் எடுத்துக்கொண்டு ராமமூர்த்தி தலையில் சாம்பலைக் வீசிக்கொண்டே 'அய்யனாரே... என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு ' என்று கூறிக்கொண்டே வேப்பிலையால் அடிக்க ஆரம்பித்தார்.

பிறகு ராமமூர்த்தி, வேல்மணி, செல்வராசு மூன்று பேரையும் கிளோரியா கம்பால் தாக்க ஆரம்பித்தார். பசங்க மூனு பேரும் அடி தாங்கமுடியாம வகுப்போட ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறி மாறி ஓடறாங்க. எமன் விடாமல் துரத்தித் துரத்தி அடிக்கிறார். பசங்க மூனு பேரும் போட்ட அலறல் சத்தத்தைக்கேட்டு மத்த வகுப்பு ஆசிரியர்களெல்லாம் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு ஏழாம் வகுப்பை திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் ராமமூர்த்தியை மட்டும் கட்டம் கட்டி 'அய்யனார் சாமீ.. என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு ' என்று சொல்லிக்கொண்டே வேப்பிலையாலும், கிளோரியா கம்பாலும் அடி பிண்ணி எடுக்கிறார். அடி தாங்கமுடியாமல் 'நான் ஓடிப்போயிடுறேன்.. நான் ஓடிப்போயிடுறேன் ' என்று ராமமூர்த்தி அலறுகிறான்.

அவிழ்ந்த கோவணத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டே மறு கையிலுள்ள கிளோரியா கம்பால் ராமமூர்த்தியை தாக்கிக்கொண்டே இருக்கிறார் எமன்.
இதற்கு மேல் இங்கேயிருந்தால் மனுசன் இன்னிக்கு அடிச்சே கொண்ணுடுவார் என்ற பயத்தில் ராமமூர்த்தி வகுப்பை விட்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

அன்று பள்ளியைவிட்டு ஓடியவன்தான் அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு ராமமூர்த்தி வரவேயில்லை!

***

Thursday, March 09, 2006

கல்லூரித் திருவிளையாடல்

CEG'ல் Final Year படிக்கும்போது எனது வகுப்பில் நடந்த சம்பவங்களைக் கொண்டு எழுதிய skit .


கல்லூரித் திருவிளையாடல்
**********************************

நடிகர்கள்
------------
சிவன் : ECE HOD Dr.V.Krishnamoorthy (ரவிச்சந்திரன்)

தருமி : சங்கர் நாரயணன் (Comedian of my Class)

நக்கீரன்: கிஷோர் (Fellow with a old man look and always questions every thing)

பான்டிய மன்னன்: 'Gulty' வெங்கட் (Class Rep)

காட்சி-1
----------
Dept Attender: Final Year Electronics மக்களுக்கு ஓர் நற்செய்தி, 'சைட்' மன்னர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. நமது Final year class Rep.. 'Gulty' வெங்கட்டிற்கு ஓர் பெருத்த சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. நமது வகுப்பு பெண்கள் அழகாக தோற்றமளிப்பதற்க்கு காரணம், இயற்கை அழகா? அல்லது செயற்கை அழகா? இச்சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு ஆறு Kingfisher Beer பாட்டில்கள் இலவசமாக வழங்கப்படும்.

தருமி: தலைவா... எத்தனை பாட்டில்கள்? என்னது.. ஆறு பாட்டில்களா!!! ஐயோ.. ஐயோ.. ஒரு பாட்டிலா, ரெண்டு பாட்டிலா? ஆறு பாட்டில்களாச்சே! இவ்வளவு நாளா ஃபிகர்களை சைட் அடிச்சி என்ன பிரயோசனம்? இந்த நேரம் பார்த்து பாட்டு எழுத மூடு வரமாட்டேங்குதே? இப்ப நான் என்ன பண்ணுவேன்?

சிவன்: நண்பரே...

தருமி: யாருப்பா நீ?

சிவன்:

கல்லூரிக்குச்
செல்லாமல்
கட் அடித்துவிட்டு
காலையும் மாலையும்
கண்ட கண்ட தெருக்கள்
பெண்கள் கல்லூரிகள்
பல சுற்றி
கண்ணில் படும்
கலர்களை
கள்ளப்பார்வை வீசி
கண்டு களிக்கும்
கள்வன் நான்!

தருமி: போச்சுடா.. நீயும் நம்ம கோஷ்டிதானா!

சிவன்: 'Gulty' வெங்கட்டின் சந்தேகம் தீர்க்கும் பாடல் உனக்கு வேண்டுமா?

தருமி: என்னது.. எனக்குப் பாட்டை நீ எழுதித் தருகின்றாயா? நான் யார் தெரியுமா? 'சைட்' அடிப்பதே தொழிலாக இருப்பவன். எனக்கு நீ பாட்டு எழுதி தர்றீர்யா?

சிவன்: நண்பரே, உனக்கு என் திறமை மீது சந்தேகம் இருந்தால் நீ என்னை சோதித்து பார்க்கலாம். கேள்விகளை நான் கேட்கட்டுமா? அல்லது நீ கேட்கின்றாயா?

தருமி: வேண்டாம்ப்பா.... நமக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம், பதில் சொல்லிப் பழக்கம் கிடையாது. கேள்விகளை ஆரம்பிக்கின்றேன்.'கடலை போடுதல்' என்றால் என்ன?

சிவன்: காரணமே இல்லாமல் ஜொள்ளு விட்டுக்கொண்டு பெண்களுடன் பேசி நேரத்தை வீணடிப்பதுதான் கடலை போடுதல்.

தருமி: 'இடி இடிப்பது' என்றால் என்ன?

சிவன்: Dr.V.Krishnamoorthy class எடுப்பது.

தருமி: GRE, TOEFL English என்றால் என்ன?

சிவன்: Dr.ரவீந்திரன் பேசுவதுதான் GRE, TOEFL English.
(மனுசன் English Grammer என்றால் விலை என்ன என்று கேட்பார். மனதில் தோன்றும் ஆங்கில வார்த்தைகளை கமா, Full Stop இல்லாமல் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே போவார். என்ன சொல்றாருன்னு ஒருத்தனுக்கும் கடைசிவரைக்கும் விளங்கியது கிடையாது)

தருமி: எங்கே அவர் பேசிய வசனம் ஒன்று கூறவும்.

சிவன்: "This instrument cannot be able to function properly.. but it can work.. you can see it... but on the other hand I cannot be able to... or in other words.. (goes on)

Students.. These days computer books are going on coming... and next class I will brought the book"

தருமி: டி.ராஜேந்தர் Style English பேசும் Professor யார்?

சிவன்: KPR (Dr.K.P.Ramakrishnan)

தருமி: எங்கே அவர் கூறிய வசனம் ஒன்று கூறவும்?

சிவன்:
(மனுசன் சரியான பிளேடு.. ஆங்கிலத்தைத் தமிழாகப் பாவித்துத் தமிழ் பேசும் உச்சரிப்போடுதான் பேசுவார். கேட்க சகிக்காது. மூன்றாம் ஆண்டில் Microprocessor என்ற பாடம் எடுத்தார். ஆள் சரியான பிளேடு என்பதால் ஒருத்தனும் வகுப்பை கவனித்தது கிடையாது. முதல் டெஸ்டில் 25-க்கு இரண்டு பசங்களைத் தவிர எல்லோரும் எடுத்த மதிப்பெண்கள் ஐந்துக்கும் குறைவு. Test Papers எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அவர் பேசிய famous டி.ராஜேந்தர் style ஆங்கிலத் தமிழ் வசனம்)

"I taughtu one thingu, I askedu the same thingu, but you wroteu some thingu, these are the dibbicult thingsu you cannot get good marksu "

தருமி: சாரயம் காய்ச்சுவது என்றால் என்ன?

சிவன்: Manjit-யை கேட்டுப் பாரும்.(Chemistry Lab-ல் சாரயம் காய்ச்சி Chemistry Professor 'டைகர்' சங்கரிடம் வசமாக மாட்டியவன்)

தருமி: 'Test' என்றால் என்ன?

சிவன்: ஒருவன் படித்து எழுதிய பேப்பரைக் குறைந்தது பத்து பேராவது பார்த்து, காப்பி அடித்து மார்க் வாங்குவது.

தருமி: 'Assignment' என்றால் என்ன?சிவன்: அடுத்தவன் எழுதிய Assignmnentஐ பார்த்து அப்படியே Xerox காப்பி எடுப்பதுதான் Assignment எழுதுதல் ஆகும்.

தருமி: Test எழுதப் படிப்பதற்கு?

சிவன்: ஒரு கோபல், ஒரு சந்தானம் (First, Second rank Students)

தருமி: Test-ல் காப்பி அடிப்பதற்கு

சிவன்: ஒரு ராஜா சண்முகம்

(Test நடக்கும் தருணங்களில் அதிகாலையிலேயே Exam Hall-க்கு வந்து கோபால், சந்தானம் இருவருக்கும் சீட் போட்டுக் காத்துக் கிடப்பான்)

தருமி: Assignment எழுதுவதற்கு?

சிவன்: ஒரு Issac Davies.(Final Semester வரை பொறுப்பாக Assignment எழுதிய ஒரு அப்பிராணிப் பையன்)

தருமி: அதைப்பார்த்து Xerox எடுப்பதற்கு?

சிவன்: ஒரு 'பட்டு' செந்தில்(Assignment Xerox copy எடுப்பதில் மன்னன். ஆனால் சரியான Tension பேர்வழி. ஓரு முறை லோகநாதன் என்பவனுடைய Assignment-ஐ அரக்கப் பரக்கக் காப்பியடித்து Tension-ல் Lognathan name, Roll No ரெண்டையும் சேர்த்து காப்பி அடிச்சுட்டான். Professor Rajapal Perinbam வகுப்பில் வந்து கூறியது "There are two assignments with same name S.Lognathan, Roll Number 3352, How come?"

தருமி: Visiting student யார்?

சிவன்: Ravinder Shonvi(Ravinder Shonvi-ன் தந்தை ஒரு Indian Foreign Service officer. எப்போதாவது ஒரு முறை வகுப்பு பக்கம் வந்து நானும் இந்த வகுப்பில்தான் படிக்கிறேன் என்று எல்லோருக்கும் ஞாபகப்படுத்திவிட்டுச் செல்பவன்)

தருமி: Classஐ கட் அடிப்பதற்கு ?

சிவன்: நீ

தருமி: சைட் அடிப்பதற்கு?

சிவன்: நான்

தருமி: மச்சி.. நீதான் King மச்சி. நீ பாட்டை எழுதிக்கொடு. நான் Beerபாட்டில்களை வாங்கி வற்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து Enjoy பண்ணுவோம்.

சிவன்: Beer பாட்டில்கள் எனக்கு வேண்டாம். நீயே உனது கோஷ்டியோடு Enjoyபண்ணு.

தருமி: ரொம்ப Thanks மச்சி.

காட்சி-2-(Class Room)
-----------------------------

தருமி: பார் Gulty.. என்னைப் பார் Gulty... பாட்டுடன் வந்திருக்க்கும் என்னைப் பார் Gulty.

மன்னன்: சைட் அடிப்பதில் வல்லவரே.. என் சந்தேகம் தீர்க்கும் பாடலை எழுதி வந்திருக்கின்றீரா?

தருமி: ஆமாம் Gulty, நானே சொந்தமாக எழுதி வந்திருக்கின்றேன்.

மன்னன்: எங்கே பாடலை படித்துக் காட்டும்...

தருமி:

பெண்ணே!
பல்லவன் பேருந்தில்
கருப்பு மை தீட்டிய
உன்
கயல் விழிகள் பேசிய
காதல் மொழிகளில்
கணநேரம்
மயங்கி நின்ற நான்...

பயணச்சீட்டு
எடுப்பதற்காக
பாக்கெட்டில்
கை வைத்தவுடன்
பதறிப்போனேன்
பணம்
அங்கு இல்லாததால்!

மன்னன்: ஆகா! ஆகா! அற்புதமான பாடல். தீர்ந்தது எனது சந்தேகம். ஜொல்லு சங்கம் தீர்த்து வைக்காத ஒரு சந்தேகத்தைத் தனி ஒருவனாக வந்து தீர்த்துவைத்த தருமியே நீ வாழ்க. யாரங்கே.. எடுத்து வாரும் அந்த Kingfisher Beer பாட்டில்களை.

தருமி: ஆகா ! ஆகா! இன்றைக்கு ஒரே Jollyதான். முதல்ல Manjit பயலுக்கு ஒரு பாட்டில் கொடுத்து அவன் கடனை ஒழிக்கனும்.

மன்னன்: இந்தாருங்கள் நண்பரே, Beer பாட்டில்கள்.

நக்கீரன்: வகுப்புத் தலைவரே... சற்று பொறும். நண்பரே இப்படி வருகின்றீர்களா?

தருமி: யோவ் தாத்தா... பொறுய்யா. பாட்டில்களை வாங்கிட்டு வர்றேன்.

நக்கீரன்: அதில்தான் பிரச்சனை உள்ளது.

தருமி: என்னய்யா பிரச்சனை?

நக்கீரன்: நீர் எழுதிய பாட்டில் பிழை இருக்கின்றது.

தருமி: பிழையா? எவ்வளவு பிழை இருக்கின்றதோ அதற்கு தகுந்தாற்போல பாட்டில்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

நக்கீரன்: உமது பாடலின் பொருள் என்ன?

தருமி: மன்னருக்கே புரிந்து விட்டது. உமக்கு புரியவில்லையா? நல்ல பாட்டய்யா. "கயல் விழிகள் பேசிய காதல் மொழிகளில்" அருமையான வரிகள்.

நக்கீரன்: சரியான பாடல் ஒன்றிற்கு எமது வகுப்புத்தலைவர் பரிசு கொடுக்கின்றார் என்றால் அதைக்கண்டு சந்தோசப்படும் முதல் மனிதன் நாந்தான். அதேசமயம் தவறான பாடல் ஒன்றிற்கு வகுப்புத்தலைவர் பரிசு கொடுக்கின்றார் என்றால் அதைக்கண்டு வருத்தப்படும் முதல் மனிதனும் நாந்தான்.

தருமி: ஓகோ, இங்கே எல்லாமே நீர்தானோ?

(நக்கீரன் சிரிக்கின்றார்)

தருமி: நல்ல சிரிப்பய்யா... உன் சிரிப்பு. நான் வர்றேன்.

காட்சி-3
------

தருமி: வேணும்... எனக்கு நல்லா வேணும். புதுசா சைட் அடிக்கிறவன நம்பினேன். எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். டேய்.. எங்கடா போயிட்டே.. வரமாட்டான். அவன் வரமாட்டான்....

சிவன்: நண்பரே, பாட்டில்கள் கிடைத்ததா?

தருமி: வாய்யா... வா. உதை ஒன்னுதான் பாக்கி. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் அதுவும் கிடைத்து இருக்கும்.

சிவன்: என்ன நடந்தது? விளக்கமாகக் கூறவும்.

தருமி: உன் பாட்டில் குற்றமாம்.

சிவன்: எவன் அவன் என் பாட்டில் குற்றம் கூறியவன்?

தருமி: இந்தக் கோபத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனா.. பாட்டு எழுதுறதுல கோட்டை விட்டுடு. அங்கே கிஷோர்னு ஒரு தாத்தா இருக்க்கான். அவந்தான் உன் பாட்டில் குற்றம் கூறியவன்.

சிவன்: காட்டு அவனை....

காட்சி-4 (Class Room)
------------------------------

சிவன்: எவன் அவன் என் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தது?

நக்கீரன்: எவன் அவன் என்று மரியாதை இல்லாமல் பேச வேண்டாம். நாந்தான் உமது பாட்டில் குற்றம் கண்டுபிடித்தேன்.

சிவன்: எல்லாம் எனக்கு தெரியும்.

நக்கீரன்: எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்தால் எழுதிய பாட்டில் குற்றம் இருக்காதா என்ன?

சிவன்: என்ன் குற்றம் கண்டீர்... என் பாட்டில்?

நக்கீரன்: பாடலை எழுதிய நீர் கொண்டு வராமல் மற்றொருவரிடம் கொடுத்து அனுப்பியதன் காரணம்.

சிவன்: அது நடந்து முடிந்த கதை. என் பாட்டில் என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா அல்லது பொருட்குற்றமா?

நக்கீரன்: சொற்குற்றம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றம் உள்ளது.

சிவன்: என்ன குற்றம்?நக்கீரன்: எங்கே உமது பாடலைக் கூறும்.

சிவன்:

பெண்ணே!
பல்லவன் பேருந்தில்
கருப்பு மை தீட்டிய
உன்
கயல் விழிகள் பேசிய
காதல் மொழிகளில்
கணநேரம்
மயங்கி நின்ற நான்...

பயணச்சீட்டு
எடுப்பதற்காக
பாக்கெட்டில்
கை வைத்தவுடன்
பதறிப்போனேன்
பணம்
அங்கு இல்லாததால்!

நக்கீரன்: இப்பாடலின் பொருள்.

சிவன்: நமது வகுப்பு நண்பன் ஒருவன் பல்லவன் பேருந்தில் பயணம் செய்யும்போது நமது வகுப்புத் தோழியைப் பேருந்தில் பார்க்கின்றான். அப்போது அவளுடைய மீன் விழிகளின் அழகில் மயங்கி நிற்கும்போது அவன் தன் பர்சை பிக்பாக்கெட்டில் கோட்டை விட்டான் என்பதுதான் இப்பாடலின் பொருள்.

நக்கீரன்: இதன் மூலம் நீர் நமது வகுப்புத் தலைவருக்குத் தெரிவிக்கும் கருத்து.

சிவன்: ம்ம்... இன்னுமா புரியவில்லை. நமது வகுப்பு பெண்கள் அழகாக இருப்பதற்குக் காரணம்.. இயற்கை அழகுதான்.

நக்கீரன்: ஒருக்காலும் இருக்க முடியாது. நமது வகுப்பு பெண்கள் அழகாக தோற்றமளிப்பதற்கு காரணம் செயற்கை அழகே தவிர இயற்கை அழகு கிடையாது. ஐடெக்ஸ் கண்மையையும், உதட்டுச் சாயத்தையும் பூசிக்கொள்வதால் ஏற்பட்ட செயற்கை அழகே தவிர அது இயற்கை அழகு கிடையாது.சிவன்: மற்ற வகுப்புப் பெண்களுக்குக்கூட இயற்கை அழகு கிடையாதா?

நக்கீரன்: கிடையாது.

சிவன்: Stella Marris, Queen Marris, Ethiraj college பெண்களுக்குக்கூட இயற்கை அழகு கிடையாதா?

நக்கீரன்: கிடையாது.

சிவன்: சினிமாவில் நடிக்கும் பெண்களுக்குக்கூட?

நக்கீரன்: சினிமாவில் நடிக்கும் பெண்கள் என்ன?.. நான் அன்றாடம் இரவில் வணங்கும் எனது கனவுக்கன்னி அந்த ஸ்ரீதேவிக்குக்கூட இயற்கை அழகு கிடையாது.

சிவன்: உண்மையா

கநக்கீரன்: உண்மையாக

சிவன்: நிச்சயமாக

நக்கீரன்: நிச்சயமாக

சிவன்: கிஷோர்... நன்றாக எனது கையைப்பார்.

நக்கீரன்: நீர் எமது Electronics Department H.O.D என்று உமது Visiting Cardஐ காட்டினாலும் குற்றம் குற்றம்தான்.

சிவன்: கிஷோர்.....(கிஷோர் மயக்கம் போட்டு விழுகின்றான்)

Gulty: சார்.. கிஷோர் தெரியாம உங்களை எதிர்த்துப் பேசிட்டான் சார். அவனுக்குக் 'கப்பு' (Arrears) கொடுத்திடாதிங்க சார். அவனை மன்னித்து விடுங்கள்.

சிவன்(H.O.D): கிஷோரைச் சோதிப்பதற்காக நான் நடத்திய நாடகம் இது. கிஷோர் அமெரிக்கா சென்று படிப்பதற்காக என்னிடம் Recommendation letter கேட்டிருந்தான். அவன் US சென்று அங்குள்ள Freak-out பெண்களைப் பார்த்து ஜொல்லு விடாமல் ஒழுங்காகப் படிப்பானா என்று சோதிப்பதற்காக நான் நடத்திய ஒர் சிறிய சோதனை இது. இதில் அவன் வெற்றி பெற்று விட்டான்.

(கிஷோர் மயக்கம் தெளிந்து எழுந்து வருகின்றான்).

கிஷோர் நான் நடத்திய சோதனையில் நீ வெற்றி பெற்று விட்டாய். இந்தா, நீ கேட்ட Recommentation letter.

கிஷோர்: ரொம்ப Thanks Sir.

(நிறைவு)

Thursday, February 09, 2006

வழியில போற ஓணான...

கிண்டி பொறியியல் கல்லூரியில் நான் முதல் வருடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்ட காலம் அது.

ஏதோ காரணமாக கடைசி வருட மாணவர்களுக்கு ஒரு செமஸ்டர் தள்ளி போயிடுச்சு. அதனால போதிய ஹாஸ்டல் வசதி இல்லாததால் அவசர அவசரமாக விடுதி என்று போர்ட மாட்டி ஹைதர் அலி காலத்து பழைய கட்டிடங்களில் மாடுகளை தொழுவத்தில் அடைச்சு வைப்பதுபோல இளிச்சவாயன்களான எங்களை அடைத்து வைத்திருந்தது கல்லூரி நிர்வாகம். இது சீனியர் பசங்களுக்கு நல்லா வசதியா போயிடுச்சு. எல்லோரையும் மாடுகளைப் போல ஒண்ணா ஓட்டிக்கிட்டு போய் ராகிங் செய்ய. இப்போ மாதிரி ராகிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இல்லாத காலம் அது. ராகிங் பொறி பறக்கும்!

எங்களை அடைத்து வைத்து இருந்ததோ 'அனெக்ஸ்-II' என்ற லேடிஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலிருந்த கட்டிடம். கவருமெண்டு தர்ம ஆஸ்பத்திரி மாதிரி அந்தப் பக்கம் இருபது இரும்புக் கட்டில்கள், இந்தப் பக்கம் இருபது இரும்பு கட்டில்கள். அவனவன் தங்களோட பெட்டிகளையும், உடமைகளயும் இரும்புக் கட்டிலுக்கு கீழேயே வச்சுக்கணும். இருக்கிற நாலு பாத்ரூமுக்கு காலை ஆறு மணியிலேர்ந்து அடிதடி ரகளை நடக்கும்.

ராத்திரியானா அவனவன் சீனியர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவங்கள், இவனுங்களோட ராகிங்கியிலேர்ந்து எப்படி தப்பிப்பது? என்று சபை களை கட்டும்.

சீனியர்களா அவங்க... எமகாதகப் பயலுங்க!

சீனியர்களப் பார்த்தவுடன் ஏடாகூடமான ஒரு போஸில் வளைந்து சல்யூட் அடிக்க வேண்டும். 'கிண்டி சல்யூட்' னு அதற்கு பெயர். சல்யூட் அடிக்கலன்னா அன்னிக்கு ராத்திரி தர்ம அடி கிடைக்கும்!

ராத்திரி ஆனா கல்லூரி முன்னாடி இருக்குற அண்ணா சிலை முன்னாடி நிக்க வச்சு "ஏய்.. அண்ணா, அன்று நீ ஓர் விரல் காட்டி ஓராயிரம்...." என்று தொடங்கும் அபத்தமான நீண்ட வசனத்தை மனப்பாடம் செய்ய வைத்து பேச வைப்பானுங்க. 'அண்ணாயிஸம்' என்று அதுக்குப் பேரு.

எல்லோரையும் கிரவுண்டுல உட்கார வச்சு ஒவ்வொரு நாளும் ஒரு 'பலான' தலைப்பு கொடுத்து தீப்பொறி பறக்கும் கருத்துகள்(?!) கொண்ட பட்டிமண்டபம் நடத்துவானுங்க.

பனியன சட்டை மேலேயும், ஜட்டிய பேண்ட் மேலயும் போட்டுக்கச் சொல்லி "நான் சூப்பர்மேன்!" அப்படின்னு கூவிக்கிட்டே கிரவுண்ட சுத்தி ஓடிவரச் சொல்லுவானுங்க.

கிரிக்கெட் கிரவுண்டுல பேட், பந்து இல்லாம கற்பனை கிரிக்கெட் விளையாடணும். "டேய், பவுன்சருடா பாத்து விளையாடுடான்னு" கத்துவானுங்க. சரி பவுன்சருதான்னேன்னு ஹூக் சாட் அடிச்சா, "நாயே.. ஹெல்மெட் போடாம விளையாடுற.. குனிஞ்சுக்காம ஹூக் சாட் அடிக்கிறேயே.. பந்து மண்டையில அடிபட்டு நீ செத்துப் போயிட்டா... உன்னோட அப்பன், ஆத்தாவுக்கு நாங்க என்னடா... பதில் சொல்லுறது?" என்று அக்கறையாக் கேட்பானுங்க.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் எங்கள ஒரு ஆறு பேர அழச்சிகிட்டு சினிமா பார்த்துட்டு வரலான்னு நாலு சீனியர் பசங்க கூட்டிக்கிட்டுப் போனாங்க. "டேய்.. பசங்களா நாங்க ஒரு பஸ் ஸ்டாப் வந்தவுடன் கையக் காட்டுவோம். எல்லாரும் "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" அப்படீன்னு சத்தமா கத்தணும்.. புரிஞ்சுதா" என்றார்கள்.

"சரிங்க சார்..." என்று பூம் பூம் மாடு மாதிரி நாங்க தலையாட்டினோம்.

5B பஸ்சுல எங்கள ஏத்தி அழைச்சிகிட்டுப் போனங்க. சைதாப்பேட்டை பஸ் ஸ்டாப் வந்தவுடன் சீனியர் பசங்க கையக் காட்னாங்க. நாங்களோ மெட்ராசுக்குப் புதுசு. சைதாப்பேட்டை எது, தி.நகர் எதுன்னு எங்களுக்குத் தெரியாது. "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" ன்னு உரக்கக் கத்தினோம். தி.நகர் பயணிகள் பலர் தி.நகர் வந்துடிச்சுன்னு திடுதிப்புன்னு இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. பேக்கு மாதிரி நின்னுக்கிட்டிருந்த எங்களைப் பார்த்து கண்டக்டரும், டிரைவரும் "டேய்.. சாவு கிராக்கி.. யாருடா அது தி.நகர் வந்திடுச்சின்னு கத்தினது"ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரே ரகளையாப் போயிடிச்சு அன்னிக்கு.

இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பயலுக இருக்காங்களே... கொலகாரப் பசங்க! போன வருஷம் தாங்கள் பட்ட ராகிங்கிற்கு பழிக்குப் பழி வாங்கணுமுன்னு வெறி புடிச்சி அலைவானுங்க.

எங்க 'அனெக்ஸ்-II' ஹாஸ்டல்லேருந்து ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்க சாப்பிடற 'B' மெஸ்சத் தாண்டிதான் நாங்க சாப்பிடுற 'C' மெஸ்ஸுக்குப் போகணும். கரெக்டா காத்திருந்து மெஸ்ஸுலேர்ந்து ராத்திரி சாப்பிட்டு வரும்போது பத்திகிட்டுப் போயிடுவானுங்க.

ஒரு நாளு நடு ராத்திரியில மத்த பசங்க எல்லாம் நல்லா தூங்கிட்டு இருக்கும்போது.. எங்க மின்னணுவியல் கோஷ்டியான நான் (வெட்டிக்ஸ்), 'பட்டு' செந்தில், 'குல்டி' வெங்கட், 'காந்தி' சரவணன், 'நக்சலைட்' செந்தில், 'சித்தப்பு' லோகநாதன் எல்லாம் சேர்ந்து இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்களோட மரண ராகிங்கிலேர்ந்து எப்புடிடா தப்புவதுன்னு ஆலோசனை பண்ணினோம். பலவகையான ஐடியாக்கள்! கடசியில பட்டு சொன்ன ஐடியாத்தான் சரின்னு சபை முடிவு பண்ணியது. என்னான்னா... நேரா 'B' மெஸ் வழியாப் போகம, எல்லாப் பசங்களும் மெஸ்ஸுக்குப் போன பின்னாடி.. கொஞ்ச நேரம் கழிச்சி, லேடிஸ் ஹாஸ்டல் அந்தப்பக்கம் இருக்கிற முள்ளுச் செடிங்க மண்டி கிடக்குற எடம் வழியா உள்ள புகுந்து, 'I' பிளாக் வழியா வந்து மெஸ்ஸுக்குப் போயிட்டு வந்திடலாம். இந்த ரகசியத்த நமக்குள்ள மட்டும் வச்சிக்கணும். இதுதான்.

பட்டோட ஐடியா அமர்க்களமா வொர்க் அவுட்டாச்சு. மூணு வாரமா நாங்க மட்டும் யார்கிட்டேயும் மாட்டமா மெஸ் போயி சாப்பிட்டு வந்துகிட்டு இருந்தோம்.

வச்சான்ய்யா... ஆப்பு, அதுக்கு ஒரு நாளு.. 'புட்டி' சாமிநாதன்.

சோடாபுட்டிக் கண்ணாடி மாட்டிய முகம். மெலிந்த உருவம். உலகம் பற்றி ஒண்ணும் தெரியாத அப்பாவி. சீனியர்களைக் கண்டு தொடை நடுங்குபவன். சீனியர்கள் வார்த்தைகளை வேதவாக்காகக் கடைபிடித்து வாழ்பவன். அவனோட போன சீனியர்களுகிட்ட வசமா நம்மளையும் மாட்டிவிட்டுவான் என்று பெயரெடுத்தவன். இப்படிப்பட்ட ஒரு மகா பேக்குதான் 'புட்டி' சாமிநாதன்.

வழக்கம்போல அன்னிக்கு ராத்திரியும் எல்லா பசங்களும் மெஸ்ஸுக்குப் போனவுடன், எங்க கோஷ்டி மெஸ்ஸுக்குக் கிளம்பிச்சு. அப்பப் பார்த்து புட்டியும் அங்கே இருந்தான். "நானும் உங்களோட மெஸ்ஸுக்கு வர்றேன்டா" என்று கூறிக்கொண்டு எங்களுடன் கிளம்பினான். நாங்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். என்ன சொல்றதுன்னு ஒருத்தனுக்கும் தெரியல. புட்டி எந்திரவியல். நான் மின்னணுவியல். புட்டி மீது எனக்கு சற்று பாசம் உண்டு. ஏன்னா.. அவன் ஊரு கும்பகோனம். எங்க தஞ்சாவூர் மாவட்டம். அதனாலதான்.

"மச்சி.. புட்டி பாவம்டா.. அவனையும் நம்மளோட கூட்டிக்கிட்டு போலாம்டா" என்றேன் நான்.

"வெட்டிக்ஸ் வேண்டான்டா" என்றான் பட்டு.

புட்டி ரொம்பக் கெஞ்சியதால் எங்கள் ரகசிய வழியைச் சொல்லி யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக் கூட்டிக்கிட்டு போனோம்.

முட்புதர்கள், 'I' பிளாக் கடந்து வந்தாச்சு. இதோ.. ஒரு எட்டு நட போட்டா 'C' மெஸ்.

அந்த நேரம் பார்த்து கருத்த மேனியும், நெடுநெடுவென வளத்தியும் கொண்ட செகண்ட் இயர் சீனியர் மதுரை 'முனியாண்டி' சங்கரும் அவன் நண்பனும் முதுகை எங்களுக்கு காட்டிக்கொண்டு சற்று தூரத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். 'முனியான்டி' சங்கர் ஒவ்வொரு ஜுனியருக்கும் முனியாண்டி 1, 2 என்று பெயர் வைத்து ராகிங் செய்வான். என்னோட பேரு 'முனியாண்டி-28'. அவன் "பேரு என்னடா?"னு கேட்டா 'முனியாண்டி-28' என்றுதான் சொல்லணும். தப்பித்தவறி நம்ம பேரச் சொல்லிட்டோமுன்னா..தொலச்சிப்புடுவான்... தொலச்சி.

மூன்று நாட்களுக்கு முன்னால் முனியாண்டி புட்டியை ராகிங் செய்தபோது அவன் சொன்ன "மவனே.. இனிமே என்ன எங்க பார்த்தாலும் எனக்கு கிண்டி சல்யூட் அடிக்கனும். இல்ல.. தொலைச்சிப்புடுவேன்" என்ற வார்த்தைகள் புட்டிக்குப் பொறிதட்டியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் புயலெனப் பாய்ந்து முனியாண்டிமுன் நின்று கிண்டி சல்யூட் அடித்து "வணக்கம் சார்!" என்றான் புட்டி. எங்களுக்கோ என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல...

"என்னடா.. திடீர்ன்னு முன்னாடி வந்து நிக்கிற.. எப்படி?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முனியாண்டி.

"இதோ இப்படி சார்" என்று கவுண்டமணியை மாட்டிவிடும் செந்திலைப்போல் முட்புதற்கள் மறைவில் நின்றிருந்த எங்களை நோக்கிக் கையைக் காட்டி... வச்சான் ஆப்பு.

"மவனுகளா.. எங்கடா கொஞ்ச நாளா உங்களக் கண்ணுல காணலேயேன்னு நெனச்சேன்.. இந்த ரகசிய வழிதான் காரணமா? இன்னிக்கு நீங்க தொலைஞ்சிங்கடா" என்று கூறி புட்டியை மட்டும் விட்டுவிட்டு எங்க கோஷ்டி எல்லோரையும் சாப்பிடக்கூட விடாமல் செகண்ட் பிளாக்கிற்கு ஓட்டிக்கிட்டுப் போனான் முனியாண்டி.

முனியாண்டி கோஷ்டி அன்னிக்கு எங்களப் பண்னின ராகிங்க இப்ப நெனச்சுப் பார்த்தாலும் மனசு பகீர்னு அடிச்சுக்கும். அப்புறம் பக்கம் பக்கமா படங்கள் நிறைய போட்ட எந்திரவியல் அசைண்மென்டை எல்லார்கிட்டேயும் கொடுத்து எழுதச் சொன்னாங்க.. பாவி பயலுங்க.

பசி வயித்தக் கிள்ள அசைண்மென்டை நாங்க எழுதி முடிச்சபோது ராத்திரி மணி ரெண்டு.

"வழியில போற ஓணான எடுத்து காதுல விட்டுகிட்டு, குத்றது கொடையிறதுன்னு சொன்னானாம்" அப்படின்னு எங்க கிராமத்துப் பெருசுங்க அடிக்கடி சொல்லுங்க. அன்னக்கித்தான் தெரிஞ்சது.. அதுக்கு அர்த்தம் என்னான்னு எனக்கு!

ooo

நன்றி: மரத்தடி.காம்

Saturday, February 04, 2006

தேடுகிறேன்...

சென்றமுறை இந்தியா வந்தபோது கால ஒட்டத்தில் எனது கிராமத்தில் ஏற்பட்டிற்கும் மாற்ற்ங்களை கண்டு எழதியது.


தேடுகிறேன்...
---------------------

பொறியியல் படித்து
அமெரிக்கா வந்து
வருடங்கள் பத்து
உருண்டோடி விட்டன!

இரண்டு வருடங்களுக்கொருமுறை
இந்தியா என்ற அட்டவணைப்படி
இன்று நான் என் கிராமத்தில்...

பத்து வருடங்களில்
எப்படியெல்லாம் மாறிவிட்டது
எனது கிராமம்!

கிட்டி, கிளி கோடு பாய்தல்
விளையாடும் சிறுவர்கள் இல்லை.
கிரிக்கெட் விளையாடும்
சிறார்கள்!

பாவாடை, தாவாணி மறந்து
சுடிதாரில் உலா வரும்
பள்ளிக்கூட மாணவிகள்!

மாட்டு வண்டி பூட்டி
மன்னார்குடி டவுன் சென்ற
மக்கள்
போகிறார்கள் இன்று
புழுதி பறக்கச் செல்லும்
சிறு பேருந்தில்!

காளைகளை ஏரில் பூட்டி
கலப்பயை கையில் பிடித்து
ஏர் உழும் காட்சிகள் இல்லை.
டிராக்டர் வைத்து
உழும் விவசாயிகள்!

முப்பது அடி கிணறு வெட்டி
முகத்தடியில் மாடுகள் பூட்டி
தண்ணீர் இறைக்கும்
காட்சிகளை காணவே முடியவில்லை.
முன்னூறு அடி
ஆழ்குழாய் கிணறு தோண்டி
மோட்டார் வைத்து
தண்ணீர் இறைக்கும் முறை!

நெற்கதிர்களை லாவகமாக
கையில் தூக்கி, கல்லில் அடித்து
கதிர் அடிக்கும் காட்சிகள் இல்லை.
இதற்கும் வந்து விட்டது
இயந்திரம்!

கோயில் திருவிழாக்களில்
அரிச்சந்திரா, பவளக்கொடி
வள்ளித் திருமணம்
நாடகங்கள் இல்லை.
திரை கட்டி காட்டப்படும்
சினிமாக்கள்!

கரகாட்டாம், மயிலாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம் இல்லை.
கோடம்பாக்கம் குமரிகள் போடும்
குத்தாட்ங்கள்!

முச்சந்தியில் கூடி
பேசி, பாடி, சிரித்து
மகிழ்ந்த மக்கள் இன்று
மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள்
தொலைக்காட்சி பெட்டி முன்பு !

காலச் சக்கரம், விஞ்ஞான வளர்ச்சி
ஏற்படுத்திய மாற்றங்கள்!
நான் மட்டும் தேடுகிறேன்.....
நான் ஓடி விளையாண்ட
என் கிராமத்தை.....?!

ooo

நன்றி: மரத்தடி.காம்

வெட்டிக்காடு

நான் பிறந்து வளர்ந்த எனது கிராமத்தைப்பற்றிய கவிதை.

வெட்டிக்காடு
-------------------

காவிரி நங்கை களிப்புடன்
கைகொட்டிச் சிரித்து
ஓடி விளையாடும்
தஞ்சைத் தரணியில்
தஞ்சைக்கும் மன்னைக்குமிடையே
எததனையோ சிறு கிராமங்கள்.

அச்சிறு கிராமங்களில்
ஒன்றுதான் வெட்டிக்காடு.
நான் பிறந்த ஊர்!

o

காலைக் கதிரவன்
கருமையான இருட்டை
விரட்டிக் கொன்றதுபோல்
கருமை நிறங்கொண்ட
தங்களையும்
அழித்து விடுவானோ
என்ற பயத்தில்
காகங்கள் கரையும்
காலை நேரத்தில்
கலப்பையைத் தோளில் சுமந்து
காளகளை ஓட்டிக்கொண்டு
வயல்களுக்குச் சென்று
உழைப்பின் சிறப்பை
உலகுக்கு எடுத்துக்காட்டும்
உழவர்கள் வாழும் ஊர்.

o

ஒன்று முதல் பதினேழு வயது வரை
இதுதான் உலகம் என்றெண்ணி
நான் ஓடி விளையாடிய ஊர்.

என் எண்ணங்களுக்கும்
உணர்ச்சிகளுக்கும் அஸ்திவாரம்
இங்குதான் போடப்பட்டது!

நான் உலகிலுள்ள எத்தனையோ
நகரங்களுக்கும் ஊர்களுக்கும்
சென்று வந்திருக்கிறேன்.
அங்கெல்லாம் கிடைக்காத இன்பம்
ஒவ்வொரு முறையும்
என் ஊரில் காலடியெடுத்து
வைக்கும்போது உணர்கின்றேன்.
பிறந்த மண்ணின் மகிமையோ?

o

'வெட்டிக்காடு'
இந்த கிராமத்திற்கேன்
இப்படியொரு
விசித்திரமான பெயர்?

அடர்த்தியான காடுகளை
வெட்டியழித்து
எமது முன்னோர்கள்
இங்கு குடியேறியதனால்
ஏற்பட்ட பெயரிது
இதைத்தவிர வேறெந்த
சரித்திர முக்கியத்துவமும்
கிடையாது என்று கூறி
என் சந்தேகத்தை விளக்கினார்
என் மூன்றாம் வகுப்பாசிரியர்.

o

ஊருக்கு தெற்கே ஓர் குளம்.
அதற்கடுத்து
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
தெரியும் பச்சைப் பசேலன்ற
வயல் வெளிகள்.

ஆண்களும், பெண்களும்
வயல் வெளிகளில்
ஏர் உழுதல், நாற்று பறித்தல்
நாற்று நடுதல், களை எடுத்தல்
என்ற பலவகையான வேலைகளைத்
தெம்மாங்கு பாட்டுகள் பாடியபடி
சுட்டெரிக்கும் கதிரவனின்
வெப்பத்திற்குச் சளைக்காமல்
உழைக்கும் உழைப்பாளிகள்!

தங்களின் இந்த உயர்ந்த தொழிலுக்கு
'உழுதுண்டு' என்ற குறளில்
வள்ளுவன் தந்த பெருமையைத் தவிர
வேறெந்த சுகத்தையும்
அனுபவிக்காத அப்பாவிகள்.

o

ஓடி விளையாடும்
சிறு ஆறுகள்

அறுவடையை எதிர்பார்த்து
தலை கவிழ்ந்து
நிற்கும் நெற்கதிர்கள்

கணவன்மார்களுக்கு
கஞ்சி கொண்டு செல்லும்
பெண்கள்

கவலையின்றி
குளத்திலும், ஆறுகளிலும்
குதித்து விளையாடும்
சிறுவர்கள்

ஆறுமாத காலமாக
வெயிலிலும், மழையிலும்
அயராது பாடுபட்டு
உழைத்த தங்களின் உழைப்பிற்குப்
பலன்தரும் நெற்கதிர்களை
அறுவடை செய்யப்போகும்
உழவர்களின் முகத்தில்
தோன்றும் மகிழ்ச்சி!

அடடா!
மருத நிலத்தின்
இந்த காட்சிகளைக் காணும்போது
மனதில் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்.

0

பள்ளி விடுமுறை நாட்களில்
எனக்கு மகிழ்ச்சி
ஏற்படுகின்றதோ இல்லையோ
எங்கள் வீட்டு
மாடுகளுக்குக் கொண்டாட்டம்தான்!

விடுமுறை நாட்களில்
கருத்துடன் மாடுகளை
மேய்த்துப் பராமரிப்பதுதான்
என் பெற்றோர்கள்
எனக்குக் கொடுக்கும் வேலை

வயல்வெளிகளில் மாடுகளை
மேயவிட்டுவிட்டு
நண்பர்களுடன் நான் போட்ட
ஆட்டங்களும், விளையாட்டுகளும்
எண்ணிடலங்கா...

கபடி விளையாடுவது
கிளி கோடு பாய்தல்
பட்டம் விடுவது
பந்து அடிப்பது
குளத்தில் விளையாடுவது
என்ற ஓர் நீண்ட
பட்டியலே போடலாம்.

அந்த இளம் வயதில்
என் நண்பர்களுடன் சேர்ந்து
எனது ஊரில் அடித்த
கொட்டங்கள் இன்னும்
எத்தனை! எத்தனை!

இவற்றையெல்லாம்
நினைத்துப் பார்த்தால்
திரும்ப அந்த இளமை நாட்கள்
கிடைக்காதா? என்று
மனம் ஏங்கும்.

o

ஒரு சராசரி மனிதனின்
பார்வையில் வெட்டிகாடு
ஓர் அமைதியான கிராமம்.
ஆனால்
என்னைப் பொருத்தவரை
எனது ஊர்
ஓர் சொர்க்க பூமி!!!

ooo

நன்றி: மரத்தடி.காம்

Wednesday, February 01, 2006

அறிமுகம்

வணக்கம்!

ஒருவழியாக நானும் என்னுடைய கிறுக்கல்களை பதிவு செய்ய இந்த வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.

என்னைப்பற்றிய சிறிய அறிமுகம்:

எனது பெயர் ரவிச்ச்ந்திரன். பிறந்து, வளர்ந்தது தஞ்சைத்தரணியில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு கிராமம். படித்தது கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னனுவியல் மற்றும் தொலைத்தொடர்பு (Electronics & Communications), தற்போது வசிப்பது அமெரிக்காவில் பாஸ்டன் பகுதியில். எனது எண்ணங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மரத்தடி மற்றும் திண்ணையில் ஒரு காலத்தில் எழுதியவற்றை இங்கு முதலில் போடுவதாக உத்தேசம்.


அன்புடன்,
-ரவிச்சந்திரன்