வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Monday, December 13, 2010

தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?

இந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.


Lawful Interception (LI) என்பது நாட்டிலுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதற்காக ITU (International Telecommunication Union - http://www.itu.int ) மற்றும் ANSI (American National Standards Institute - http://www.ansi.org ) போன்ற நியம அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட தகவல் பறிமாற்ற வரையறை.

இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches) வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.

விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI, RAW  போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும் LEMF (Law Enforcement Monitoring Facility) என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.

சற்று விரிவாக பார்க்கலாம்...


உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.

                [கீழ்க்கண்ட தகவல்களுக்கு இந்த படத்தை ரெபர் செய்யவும்]

உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள IMC (Interception Management Centre) எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1) என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க IMC-யில் பதிவு செய்து விடுவார்.

இந்த IMC-யை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. IMC கம்யூட்டரை நிர்வகிக்க ITU மற்றும் ANSI நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது. எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்இதுதான் உண்மை. Law of Average!

சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)-க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை HI-2 (Hand Over Interface-2) என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF-செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் LEMF செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.
 இப்போது இருவரின் தொலைபேச்சுகளை விசைமாற்றி கொக்கி போட்டு அப்படியே LEMF செண்டருக்கு HI-3 (Hand Over Interface-3) என்ற தகவல் பாதை வழியாக அனுப்பி வைத்து விடும்.
இந்த பேச்சுகள் LEMF செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:) இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))

தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை CBI, RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.

தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் (E-mail), மின் அரட்டை (Chat) போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.

போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:)))

Wikileaks பற்றி அண்ணன் சுடுதண்ணி கொதிக்க கொதிக்க எழுதும் தொடரையும் படித்து பாருங்கள்...

                                                       *              *        *                        
பி.கு:

2.5 வார விடுமுறையில் இந்த வாரம் இந்தியா செல்கிறேன். நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்-2011
                                                                 
                                                                       *                *             *

Wednesday, December 08, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Last Part (7)


ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் காலை 9 மணியளவில் முத்துகிருஷ்ணன் சார் அவசர வேலை காரணமாக பள்ளி வரமாட்டார் என்று மூவாநல்லூரிலிருந்து ஒருவர் வந்து தகவல் சொன்னார். 9.30 மணி ஆகியும் சுப்பிரமணியன் சார் வரவில்லை. சார் ஒரு சில நாட்களில் அவருடைய வயல்களுக்குச் சென்றுவிட்டு லேட்டாக வருவார் என்பதால் நான் பெல் படித்து வழக்கம் போல் பிரேயர் முடித்து மாணவர்களை அவர்கள் வகுப்புகளில் அமர வைத்தேன்.

பத்து மணியளவில் எட-கீழையூரிலிருந்து மன்னார்குடி செல்லும் ஒருவர் சுப்பிரமணியன் சாருக்கு உடம்பு சரியில்லை என்று முத்துகிருஷ்ணன் சாரிடம் கொடுக்க சொல்லி அவர் கொடுத்தனுப்பிய லீவு லெட்டரை கொடுத்தார். ஆசிரியர்கள் இருவரும் பள்ளி வரவில்லை என்ற தகவல் அறிந்தவுடன் “இன்னைக்கு பள்ளிக்கூடம் லீவுடோய்..... என்று பசங்க எல்லாம் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்து விட்டனர். நான் என் நண்பன் எழில்மன்னனிடம் ஆலோசனை செய்து இன்று வழக்கம் போல் பள்ளியை நடத்துவது என்று முடிவு எடுத்தேன். எனது முடிவை கூறியவுடன் என் நண்பர்கள் “நீர் யானைஇளங்கோ, சந்திரசேகரன் போன்றவர்கள் லீவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் எதிர்த்தார்கள். மற்ற பசங்களும் லீவு இல்லை என்றவுடன் சோகமாகி விட்ட்டார்கள்.

எவனாவது ஒழுங்கா உட்கார்ந்து படிக்காமா... சத்தம் போட்டீங்கன்னா.. சுப்பிரமணியன் சாருகிட்ட பேர் எழுதி லிஸ்ட் கொடுத்துடுவேன்... மூங்கி கம்பு அடி வேணுமா?என்று கூறியவுடன் எல்லோரும் கப் சிப் என்று அமைதி காக்க ஆரம்பித்தார்கள். வழக்கம் போல் மதிய உணவு சமைக்க தேவையான பொருட்களை “உருட்டிகிழவியிடம் எடுத்து கொடுத்து மதிய உணவு தயார் செய்து மாணவர்களுக்கு பறிமாரி அன்று ஆசிரியர்கள் இருவரும் இல்லாமல் பள்ளியை வெற்றிகரமாக நண்பர்கள் துணையுடன் நடத்தினேன்.

அடுத்த நாள் காலை முத்துகிருஷ்ணன் சார் வந்தவுடன் அவரிடன் நேற்று நடந்தது பற்றி சொன்னவுடன் அவருடைய முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி மற்றும் பெருமிதம். வழக்கம் போல் முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியை என் பெரியப்பா (நாட்டாமை) மற்றும் அப்பாவிடம் சொல்லி என்னைப் பாராட்டியிருக்கிறார்.

ஐந்தாம் வகுப்பின் கடைசி கால கட்டமான பிப்ரவரி மாதத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த பண்டார வாத்தியார் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று எங்கள் பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகி வந்தார். முத்துகிருஷ்ணன் சாரை பக்கத்து கிராமமான பருத்திக்கோட்டை பள்ளிக்கூடத்திற்கு மாற்றல் செய்து விட்டது அரசாங்கம். எங்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய சோகம்.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் முழு ஆண்டுத் தேர்வு... முதல் பரீட்சை தமிழ். பண்டார வாத்தியார் சில நாட்களுக்கு முன்புதான் மாற்றலாகி வந்ததால் பசங்களின் படிப்பு திறமை மீது நம்பிக்கை இல்லை. மேலும் பெரும்பாலன மாணவர்களை பாஸ் செய்து உயர்நிலை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால்... பள்ளி ஆய்வு அதிகாரி பரீட்சை பேப்பர்களை ஆய்வு செய்து பார்த்து விட்டால் என்றால் என்ன செய்வது என்ற நினைப்பில் போர்டில் கேள்விக்கு பக்கத்தில் சில கேள்விகளுக்கான பதில் இருக்கும் பக்கத்தையும் எழுதி போட்டு “பசங்களா புத்தகத்தை பார்த்து எழுதுங்கடாஎன்று கூறினார். பசங்க எல்லாம் மகிழ்ச்சியாகிவிட்டார்கள்.

எனக்கோ அதிர்ச்சியாகி விட்டது. முத்துகிருஷ்ணன் சாரும், சுப்பிரமணியன் சாரும் காப்பி அடிக்க கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வாத்தியார் “காப்பி அடிங்கடாஎன்று சொல்கிறாரே? எனக்கு பெரும்பாலன கேள்விகளுக்கு பதில் தெரியும் என்பதால் நான் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுதிக்கொண்டிருந்தேன். இதைக் கவணித்த பண்டார வாத்தியார் “ரவி நீ ஏன்டா... புத்தகத்த பாக்காம எழுதுறஎன்று கேட்டார். “சார்... காப்பி அடிக்கிறது தப்புன்னு... முத்துகிருஷ்ணன் சார் சொல்லிக் கொடுத்திருக்கார் சார்... எனக்கு பதில்கள் தெரியும் சார்என்றேன். இந்த பதிலைக் கேட்டு ஒரு கணம் திகைத்து விட்டார். பிறகு “சரிடா... நீ எழுதுடாஎன்று கூறி விட்டு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. காரணம்... நான் என் வாழ்க்கையில் எந்த ஒரு டெஸ்ட் மற்றும் பரீட்சையில் காப்பி அடித்தது கிடையாது. கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த கால கட்டத்தில் டெஸ்டில் பசங்க மற்றும் பெண்கள் காப்பி அடிப்பார்கள். “பெண்களே தைரியமாக காப்பி அடிக்கும் போது நாமும் அடித்தால் என்ன?என்று பல சமயங்களில் மனம் சஞ்சலப் படும். அப்போது ஐந்தாம் வகுப்பில் நடந்த இந்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வரும். ஒரு சில இன்டர்னல் மார்க்குக்காக இத்தனை நாள் கடைப்பிடித்து வந்த கொள்கையையும், மன உறுதியையும் விட்டுக்கொடுப்பதா? என்று நினைத்து மனம் தெளிவடைந்து விடும்.

நான்காவது செமஸ்டரில் Accoustics” என்ற மிகவும் கடினமான பாடம். புதிதாக சேர்ந்த கீதா மேடம் இந்த பாடத்தை எடுத்தார். முதல் இரண்டு டெஸ்டுகளிலும் எல்லோரும் எடுத்தது சொற்ப மதிப்பெண்கள். கடைசி மூன்றாவது டெஸ்டில் மதிப்பெண்கள் எடுத்தே ஆகவேண்டு என்ற கட்டாயத்தில் கிட்டடத்தட்ட மொத்த வகுப்பே முதல் ராத்திரி உட்கார்ந்து பிட்கள் தாயார் செய்து ரெடியாக இருந்தது.  டெஸ்ட் அன்று டெஸ்ட் ஆரம்பித்த சில நிமிடங்களில் பிட் தூள் பறக்குது. முதல் மாணவர்களான கோபால், சந்தானம், சுதிர் போன்றவர்களும், பெண்களும் மும்முரமாக பிட் அடிப்பதை பார்த்து கீதா மேடம் அதிர்ந்து போய் விட்டார். உடனே “நீங்க எல்லாரும் பிட் வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். நான் இப்ப ஒவ்வொருத்தரா செக் பண்ண வருவேன்.. நீங்களா எடுத்து கொடுத்திட்டீங்கன்னா ஒன்னும் செய்ய மாட்டேன். நான் கண்டு புடிச்சேன்னா இண்டர்னல் மார்க் முட்டைதான்என்றார். 65 பேர்கள் வகுப்பில் ஒரு ஏழு பேரிடம் மட்டும் பிட் இல்லை. அதில் நானும் ஒருவன்!

கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்கா, சிங்கப்பூர் வாழ்க்கை... 15 ஆண்டுகளாக உலகிலுள்ள பல நாடுகளுக்கு வேலை காரணமாக பிசினஸ் கிளாஸ் விமான பயணங்கள், ஐந்து நட்சத்திர விடுதி வாழ்க்கை என்று வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. இதற்கு காரணம்... ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெட்டிக்காடு அமைத்துக் கொடுத்த அடித்தளம். அந்த பள்ளியில் நான் கற்றுக்கொண்ட நல்ல பண்புகள் பசுமரத்து ஆணியாய் மனதில் பதிந்து இருப்பது!

படிப்பு - ஆசிரிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும், அடி வாங்காமல் தப்பிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக படித்த படிப்பு

நேரந் தவறாமை 9.30 மணி பள்ளிக்கூடத்திற்கு 8 மணிக்கே சென்ற பழக்கம் இன்றும் தொடர்கிறது. எந்த ஒரு மீட்டிங் என்றாலும் ஐந்து, பத்து நிடங்களுக்கு முன்பாகவே சென்று விடுவேன். தவிர்க்க முடியாத காரணத்தால் லேட்டாகும் என்றால் தகவல் சொல்லி விடுவேன்.

பொறுப்பு - ஒரு வேலையையோ, பொறுப்பையோ எடுத்துக்கொண்டால் முழு ஈடுபாட்டுடன் செய்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும்

நேர்மை - நான் பல குறைகள் கொண்ட சராசரி மனிதன். ஆனால்... மனசாட்சியின்படி நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். முடிந்த அளவு பின் பற்றி வருகிறேன்.

வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும், என் ஆசிரியர்களுக்கும் வணக்கமும்...நன்றிகளும்!
                              *        *       *
பி.கு:

- கடந்த பத்து ஆண்டுகளாக நான் படித்த வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான பல நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்து வருகிறேன்

- வெட்டிக்காட்டில் என் தந்தையார் வை.சி.சோமு ஆலம்பிரியர் நினைவாக ஒரு நூல் நிலையம் (Library) அமைத்து கொடுத்துள்ளேன்.

- கிராமப்புற ஏழை மாணவர்கள் பலருக்கு படிப்புக்காக பண உதவிகள் செய்து வருகிறேன்.

- AIMS India (www.aimsindia.net) தொண்டு நிறுவனத்தின் சார்பாக நான் படித்த மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் பல கிராம பள்ளிக் கூடங்களுக்கு கம்யூட்டர்கள், பெஞ்ச், டெஸ்க் வாங்கி கொடுப்பது, நூல் நிலையங்கள் அமைத்து கொடுப்பது போன்ற பல நலத்திட்ட பணிகளை செய்து வருகிறேன்.

கிராமப்புற மாணவர்களுக்காக என்னால் முடிந்த சிறு உதவிகள்... It’s a way of giving back to the Society!
-- நிறைவு --

Monday, December 06, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 6


மூன்றாம் வகுப்பில் பாஸாகி சுப்பிரமணியன் சாரின் பள்ளியின் இடப்பக்கத்திலிருந்து நான்காம் வகுப்பிற்கு முத்துகிருஷ்ணன் சாரின் பள்ளியின் வலப்பக்கத்திற்கு இடப் பெயர்ச்சி. முத்துகிருஷ்ணன் சார் சுப்பிரமணியன் சார் போல கோபக்காரர் கிடையாது. அமைதியானவர்.. சுப்பிரமணியன் சார் போல பசங்களை மூங்கில் கம்பால் அடிக்க மாட்டார். எப்போதாவது அடித்தாலும் காதைப் பிடித்து லேசாக திருகி முதுகில் கையால் மட்டும்தான் அடிப்பார்.

நான்காம் வகுப்பில்தான் முதன் முதலில் ஆங்கிலம், அறிவியல், வரலாறு+புவியியல் போன்ற பாடங்கள் அறிமுகம். முத்துகிருஷ்ணன் சார்தான் நான்காம் வகுப்பில் A,B,C,D… சொல்லிக்கொடுத்து எழுதவும் சொல்லிக்கொடுத்தார். நான்காம் வகுப்பு முடிந்த போது A,B,C,D படிக்க, எழுத மட்டும்தான் தெரியும். இன்று மூன்றாம் வகுப்பு படிக்கும் என் எட்டு வயது மகன் ஒரு நாளைக்கு ஒரு ஆங்கில கதை புத்தகத்தை சர்வ சாதாரணமாக ப்டிக்கிறான். அவனுடைய Vocabulary  எனனை மிரள வைக்கும். ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் என் பெயரை எழுத சொல்லிக்கொடுத்தார் முத்துகிருஷ்ணன் சார். மேலும் is, this, was போன்ற சிறு வார்த்தைகள் படிக்கத் தெரியும். அவ்வளவுதான் ஆங்கில அறிவு.

வெட்டிக்காட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆறு, ஏழு வகுப்புகள் படித்த காலத்திலும் அங்கிருந்த ஆசிரியர்கள் ஆங்கில பாடத்தை சரியாக சொல்லித்தர வில்லை. இதனால்தான் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படித்தால் நான் முன்னேற முடியாது என்று நினைத்து ஆர்ட்ஸ் வகுப்பு எடுக்கும் புகழேந்தி சார் “டேய்... ரவி நீ நல்லா படிக்கிற பய... உங்க அப்பாகிட்ட சொல்லி மன்னார்குடி பள்ளிக்கூடத்துல சேர்ந்து படிடாஎன்றார். புகழேந்தி சார் சொன்னதிலிருந்து அப்பாவை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க சொல்லி அனத்த ஆரம்பித்து விட்டேன். நான் சைக்கிள் ஓட்ட கற்றுகொண்ட பிறகு என் அண்ணனைப் போல் ஒன்பதாம் வகுப்பில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் என்னை சேர்க்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்த அப்பா என் தொல்லை தாங்க முடியாமல் எட்டாம் வகுப்பில் என்னை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார். ஆனால் என் ஆங்கில் அறியாமை காரணமாக காலாண்டுத் தேர்வில் காத்திருந்தது பெருத்த அவமானம்!

காலாண்டுத் தேர்வில் ஆங்கில பாடம் தவிர மற்ற பாடங்களில் எல்லாம் எடுத்த மதிப்பெண்கள் 85-க்கும் மேல். ஆனால் ஆங்கிலத்தில் எடுத்த மதிப்பெண்கள் 36 மட்டும். மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் நான் வகுப்பில் முதல் மாணவன்.  பர்ஸ்ட் ரேங் என்று சொல்லி பிராக்ரஸ் ரிப்போர்டை என் வகுப்பு ஆசிரியை இந்திரா டீச்சர் கொடுத்து. “நீ பர்ஸ்ட் ரேங்க் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது... இன்னும் ஒரு மார்க் ஆங்கிலத்தில் குறைவாக எடுத்திருந்தால் சிகப்பு கோடு வாங்கியிருப்பே... 8A (English Medium) பர்ஸ்ட் ரேங்க் மாணவன் சீனிவாசன் ஆங்கிலத்தில் 98... நீயெல்லாம் கிராமத்தில் மாடு மேய்க்கதான் லாயக்கு என்று திட்டோ திட்டு என்று திட்டினார். பர்ஸ்ட ரேங்க் வாங்கியும் வெட்கித் தலைகுணிந்து அவமானத்தால் அழுத அந்த நாள் என்றும் மறக்க முடியாது. ஆனால் அதே இந்திரா டீச்சரிடம் எனது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வரலாறு+புவிவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் மதிப்பெண்(98) மற்றும் 455 மதிப்பெண்கள் என்று மதிப்பெண்கள் பட்டியலை காட்டியபோது அவருடைய முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, தலையில் கை வைத்து ஆசிர்வதித்து அவர் பாராட்டிய அந்த நாளையும் மறக்க முடியாது.

என்னுடைய ஆங்கில அறிவுக்கு முத்துகிருஷ்ணன் சாரை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. ஒரே ஆசிரியர் நான்கு, ஐந்தாம் வகுப்பு வகுப்புகளுக்கு எல்லா பாடங்களையும் எப்படி எடுக்க முடியும்? சுப்பிரமணியன் சார் வராத நாட்களில் ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்புகளையும் பார்த்து கொள்ள வேண்டும். மதிய உணவு சமையல் பணிகளையும் கவணிக்க வேண்டும். அரசு தொடக்க பள்ளிகளின் நிலைமை இன்றும் இப்படித்தான் இருக்கிறது. அதனால்தான் கிராமங்களில் படித்து வரும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஆங்கிலம் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. நகரத்தில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதைப் பார்த்தவுடன் பயந்து தாழ்வு மணப்பான்மைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது.

முத்துகிருஷ்ணன் சார் பள்ளியை ஐந்தாம வகுப்பு மாணவகளைக் கொண்ட ஒர் அமைச்சரவை அமைத்து நிர்வாகம் செய்வார். முதல் மந்திரி, உணவு மந்திரி, பாதுகாப்பு மந்திரி, துப்புரவு மந்திரி, விளையாட்டு மந்திரி என்ற ஐந்து மந்திரிகள் கொண்ட மந்திரி சபை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குதான் மந்திரி பதவி என்ற விதிமுறையை மாற்றி நான்காம் வகுப்பு படித்த எனக்கு பாதுகாப்பு மந்திரி பதவி கொடுத்து மந்திரிசபையில் என்னை சேர்த்து ஆச்சரியப்படுத்தினார். பள்ளியில் ஏதாவது பொருள் தொலைந்தால் பாதுகாப்பு மந்திரியின் பொறுப்பு என்பதால் சின்சியர் சிகாமணியான நான் என் “பாதுகாப்பு மந்திரிபொறுப்பை செவ்வணே செய்து முத்துகிருஷ்ணன் சாரிடம் நல்ல பெயர் எடுத்தேன்.  

ஐந்தாம் வகுப்பில் எதிர்பார்ததது போல் “முதல் மந்திரிபொறுப்பை என்னிடம் கொடுத்தார் முத்துகிருஷ்ணன் சார். முதல் மந்திரி என்பதால் நிறைய பொறுப்புகள். எனது முதல் மந்திரி பணிகள்...

- வழக்கம்போல் நானும் என் நண்பன் “உணவு மந்திரிஎழில்மன்னனும் எட்டு மணிக்கு பள்ளி வந்து விடுவோம். பள்ளியின் சாவி என்னிடம் இருக்கும். பள்ளியைத் திறந்து எல்லா பொருட்களையும் எடுத்து அதற்குறிய இடங்களில் வைப்போம்.

- தண்ணீர் குடிக்கும் டிரம்மில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.

- என் வகுப்பு தோழிகள் குப்பம்மா, சித்ரா ஆகியோர் இருவரும் 8.30 மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும் என்பது என் கட்டளை. அவர்கள் வந்தவுடன் பள்ளியையும், பள்ளிக்கு முன்பிருக்கும் பிரேயர் திடலையும் அவர்கள் கூட்டி, சுத்தம் செய்ய்ம் பணியை மேற்பாடுவையிடுதல்.

- ஆசிரியர்கள் இருவரும் 9.30 மணி பள்ளிக்கூடத்திற்கு 9.15 மணியளவில் சைக்கிளில் அவர்களுடைய பக்கத்து கிராமங்களான மூவாநல்லூர், எட-கீழையூர் ஆகியவற்றிலிருந்து வருவார்கள். பள்ளி புதுப்பொலிவுடன் இருப்பதைப் பார்த்து முத்து கிருஷ்ணன் சார் மகிழ்ச்சியுடன் ஒரு சில நாட்களில் முதுகில் தட்டி கொடுப்பார்.

- காலை 11 மணியளவிலும், மதியம் 3 மணியளவிலும் ஆசிரியர்கள் இருவருக்கும் டீக்கடையிலிருந்து டீ வாங்கி கொடுக்க வேண்டும்.

- மதிய உணவு சமைக்க வரும் “உருட்டிகிழவி பல நாட்கள் மட்டம் போட்டு விடுவார். அந்த நாட்களில் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் சமையல் செய்வதை மேற்பார்வையிட வேண்டும்.

- சுப்பிரமணியன் சாரின் வயல்கள் எங்கள் வயல்களுக்கு பக்கத்தில் இருக்கிறது. சாரின் வயலில் நடவு, அறுவடை போன்ற வேலைகள் நடைபெறும் நாட்களில் வயலில் வேலை பார்ப்பவர்களுக்கு டீ, வடை வாங்கி கொடுத்து வரச் சொல்லி சுப்பிரமணியன் சார் கொடுக்கும் வேலைகளை செய்ய வேண்டும்.

- பள்ளி முடிந்தவுடன் பாதுகாப்பு மந்திரி சந்திரசேகரன், என் நண்பன் எழில்மண்ணன் ஆகியோர்கள் உதவியுடன் எல்லா பொருட்களையும் பள்ளியின் உள்ளே எடுத்து வைத்து விட்டு பள்ளியை பூட்டி சாவியை எடுத்து கொண்டு ஆசிரியகளுக்கு விடை கொடுத்து விட்டுதான் வீட்டிற்கு வருவேன்.                           
                                              -- பாடங்கள் தொடரும்...

Tuesday, November 30, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 5



நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் கறவை எருமை மாடுகள், பசு மாடுகள், உழவு மாடுகள், வண்டி மாடுகள் என ஒவ்வொரு கால கட்டத்திலும் 10-லிருந்து 15 மாடுகள் இருக்கும். இந்த மாடுகளை மேய்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் முனியாண்டி என்ற பையன் எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தான். முனியன் என்னை விட மூன்று வயது பெரியவன். முனியனின் குடும்பம் கடலூர் மாவட்டலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக எங்கள் கிராமத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பம். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது முனியனின் அப்பா தங்கராசுக்கும் அவரது நண்பர் கட்டாரிக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் தங்கராசு தன் குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டார்.

முனியனின் வேலைகள் எனக்கும் என் அண்ணனுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. எருமை மாடுகள், பசு மாடுகளை மேய்க்கும் வேலை எனக்கும் உழவு, வண்டி மாடுகளை பராமரிப்பது, மாடுகளுக்கு தீவனங்கள் வைப்பது போன்ற வேலைகள் அண்ணனுக்கும் வழங்கப் பட்டது. தினமும் பள்ளி விட்டு வந்தவுடன் மாலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மாடுகளை மேய்த்து வர வேண்டும். அது போல் சனி, ஞாயிறு கிழமைகளில் காலை, மாலை இரு வேளைகளிலும் மாடுகளை மேய்க்க வேண்டும். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலோரின் வேலையும் மாடுகளை மேய்ப்பதுதான். நானும் என் நண்பர்களும் மாடுகளை வயல் வெளிகளில் மேய விட்டு விட்டு ஆட்டம் போடுவோம். இப்படி நான்கைந்து மாதங்கள் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் என் மாடு மேய்க்கும் பணி தொடர்ந்தது.

ஒரு நாள் சுப்பிரமணியன் சார் ஆதி திராவிட காலணியைச் சேர்ந்த என் நண்பன் கண்ணனுக்கு கூட்டல் கணக்கு பல முறை சொல்லிக் கொடுத்தும் தப்பாகவே விடை சொன்னான். கோபத்தின் உச்சிக்கு சென்ற சுப்பிரமணியன் சார் “எருமை மாடு மேய்க்கிறவனுக்கும்... மாட்டுக்கறி திங்கறவனுக்கும் படிப்பு வராதுஎன்று திட்டி மூங்கில் கம்பால் அடித்தார்.

எனக்கோ திக்கென்றது... நானும் தினமும் எருமை மாடுகளை மேய்க்கிறேன். எனவே எனக்கும் படிப்பு ஏறாதா? அன்று மாலை வீட்டிற்கு சென்றவுடன் எருமை மாடுகளை மேய்த்தால் படிப்பு ஏறாதுன்னு சுப்பிரமணியன் சார் சொன்னாரு. இனிமே நான் மாடு மேய்க்க மாட்டேன்என்று பெரியம்மா மற்றும் அம்மாவிடம் சொன்னேன். பள்ளிக்கூடத்துல வாத்தியார் ஏதோ சொல்லியிருக்காருன்னு அதைப்பற்றி அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால்.. தொடர்ந்து அடுத்த சில நாட்கள் நான் மாடு மேய்க்க மாட்டேன் என்று அழுது அடம் பிடித்தவுடன் விஷயம் அப்பாவின் கவணத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.

“சுப்பிரமணியன் வாத்தியார் என்ன சொன்னாருன்னு நான் வாத்தியாருகிட்ட கேட்கிறேன்என்று சொல்லி விட்டார். ஆனால் அடுத்த நாள் வயலில் வேலை பார்த்தவர்களுக்கு டீ வாங்கி கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த அம்மா வரும் வழியிலிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு வந்து விட்டார்.

“வாத்தியாரே... மாடு மேய்ச்சா படிப்பு வராதுன்னு சொன்னீங்கன்னு... இந்த ரவி பய மாடு மேய்க்க மாட்டேங்கிறான்... ஊரு புள்ளங்க எல்லாம் மாடு மேய்க்குது.. இவன் மட்டும் இப்படி சொல்றான்என்று சுப்பிரமணியன் சாரிடம் சொன்னார். அம்மாவின் வருகையை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. சுப்பிரமணியன் சாருக்கு முதலில் ஒன்றும் புரிய வில்லை. பிறகு அம்மா மற்றும் என்னிடம் கேட்டு நிலைமையை புரிந்து கொண்டார்.

கண்ணன் கணக்கு தப்பா போட்டான்னு கோபத்தில சொன்னேண்டா... அவன் மக்கு பய... நீ நல்லா படிக்கிறவன். உனக்கு படிப்பு நல்லா வரும்டா... அம்மா சொல்றபடி கேளுஎன்று என்னிடம் கூறினார்.

சுப்பிரமணியன் சார் சொல்லி விட்டதால் மாடுகளை தினமும் மேய்க்கும் என் பணி தொடர்ந்தது. 17 வயது வரை மாடுகள் மேய்க்கும் வேலையை செவ்வனே செய்தேன். கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான்  மாடு மேய்க்கும் வேலையிலிருந்து விடுதலை!

மாடு மேய்ப்பது பற்றி சுப்பிரமணியன் சாரிடம் வந்து புகார் செய்த நாள் முதல் எனக்கும் அம்மாவிற்கும் ஆரம்பமாகின சண்டைகள். அப்பா நாங்கள் எல்லாம் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பினார். பெரியம்மா படிப்பிற்கு ஆதரவும் கிடையாது... எதிரியும் கிடையாது. ஆனால்... என் படிப்பின் முதல் எதிரி படிப்பறிவில்லா என் அம்மாதான்.

பரீட்சை சமயங்களில், வீட்டுப் பாடங்கள் அதிகம் இருக்கும் சமயங்களில் மாடுகளை மேய்க்க போகாமல் படிப்பில் மூழ்கியிருப்பேன். “ஊர் புள்ளைங்க எல்லாம் மாடு மேய்க்குது...வீட்டு வேலைங்க செய்யுது...இவன் மட்டும் பெரிய தொர வீட்டு புள்ள கலெக்டருக்கு படிக்கிற மாதிரி ஒரு வேலையும் செய்யாம இந்த புத்தகத்த வச்சிகிட்டு உக்காந்திருக்கான் என்று  பாரதிராஜா பட காந்திமதி மாதிரி அம்மா சத்தம் போட ஆரம்பித்து விடுவார். ஒரு சில நாட்களில் புத்தகத்தை பிடுங்கி விட்டேறிவார்.

எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு நாள் வரலாறு வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தேன். அம்மா வழக்கம் போல் மாடு மேய்க்க போகவில்லை என்று உரத்த குரலில் திட்டிக்கொண்டிருந்தார். நான் கண்டு கொள்ளாமல் எழுதிக்கொண்டிருந்தேன். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அம்மா “நான் பாட்டுக்கு சொல்லிகிட்டேயிருக்கேன்... என்னடா பெரிய பொடலங்கா படிப்பு படிக்கிறேஎன்று சொல்லிக்கொண்டே என் நோட்டு புத்தகத்தை பிடுங்கி கிழித்து விட்டார். கிட்டத்தட்ட நாற்பது பக்கங்களை திரும்ப புது நோட்டில் நான் மறுபடியும் எழுத நேரிட்டது.                                         
                                              -- பாடங்கள் தொடரும்...

Monday, November 22, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 4



இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி...

முத்துகிருஷ்ணன் சார் விடுமுறையில் இருந்த ஒரு நாளில் சுப்பிரமணியன் சார் நான்காம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொருவராக எழுந்து ஒரு பாடத்தை உரக்க படிக்கச் சொன்னார். அப்போது முருகன் என்ற மாணவன் பாடம் படிக்கும்போது “ஒளவையார்என்று படிக்காமல் மற்றும் வைப் பிரித்து ஒ-ளவையார்என்று படித்தான். சுப்பிரமணியன் சார் பல முறை திரும்ப படிக்க சொல்லியும் ஒ-ளவையார் என்றே படித்தான். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னை அழைத்து புத்தகத்தை வாங்கி படிக்க சொன்னார். நான் சரியாக “ஒளவையார் என்று படித்தேன். சுப்பிரமணியன் சார் என்னைப்பார்த்து முருகன் கண்ணத்தில் ஐந்து அறைகள் விடச் சொன்னார் (ஐந்து முறை தவறாக முருகன் படித்ததால்!) முருகன் வகுப்பிலேயே உயரமானவன்... நானோ சின்ன பையன். எனவே என்னை ஒரு பெஞ்சு மேல் ஏறி நிற்கச் சொல்லி முருகன் கண்ணத்தில் அறை விட சொன்னார். நான் பய்ந்து கொண்டே முருகனுக்கு ஐந்து அறைகள் விட்டேன்...  
  
எங்கள் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள்தான் என்று முன்பே கூறியிருந்தேன். ஒருவர் முத்துகிருஷ்ணன் ஆசிரியர்... இவர் தலைமை ஆசிரியர். நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பார். இவருடைய மற்ற பெயர் அஞ்சாவது சார். மற்றவர் சுப்பிரமணியன் சார்... ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பார். மூனாவது சார் என்பது இவருடைய மற்ற பெயர்.

ஏதாவது ஒரு சார் விடுமுறைபென்றால் நடுவில் இருக்கும் தட்டியை நகர்த்தி ஓரத்தில் வைத்துவிட்டு ஐந்து வகுப்புகளையும் கண்காணித்துக் கொள்ளும் ஒர் சகலகலா வல்லவராகத் திகழ்வார் மற்ற ஆசிரியர். அச்சகலகலா வல்லவருக்கும் சில சமயங்களில் தர்மசங்கடமான நிலைகள் வருவதுண்டு!

உதாரணமாக... இயற்கையின் உபாதையை போக்க வந்து ஒரு விரலை மூக்கின் மேல் வைத்து அனுமதி கேட்கும் ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு அனுமதி வழங்குவதா? அல்லது இரண்டாம் வகுப்பில் நடக்கும் மற்போருக்கு தீர்ப்பு சொல்வதா? அல்லது மூன்றாம் வகுப்பில் நடக்கும் மாணவிகளின் குடுபி சண்டைக்கு தீர்ப்பு வழங்குவதா? அல்லது நான்காம் வகுப்பில் நடக்கும் குத்துச் சண்டைக்கா? இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மதிய உணவு சமைக்கும் கிழவி வராததால் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளை வைத்து மதிய உணவு தயார் செய்யும் வேலையை பார்வையிடுவதா? என்று அவர் குழம்பி பரிதவிக்கும் நிலையை காணவேண்டுமே?

பள்ளிக்கு தேர்வு செய்யும் அதிகாரி ஆய்வுக்காக வரும்போது இரண்டு ஆசிரியர்களும் மிகவும் டென்சனாக இருப்பார்கள்... இருக்காதா என்ன? ஏனென்றால்...பள்ளிக்கு பாதி மாணவர்களுக்கு மேல் வந்திருக்கும் அதிசயம் ஒரு சில நாட்களுக்குத்தான் நடக்கும்.

தேர்வு அதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்காக ஆசிரியர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் படைசூழ மாணவர்களை அழைத்து வர கிளம்பி விடுவார்கள்.

பள்ளிக்கு வரமாட்டேன் என்று அழுது, அடம் பிடிக்கும் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களை ஐந்தாம் வகுப்பு மாணவர்களை விட்டு அலேக்காக தூக்கி வரச்சொல்லி விடுவார்கள். இவ்வாறு மாணவர்களைத் தூக்கி வரும்போது இந்த வாத்தி பயலுகளுக்கு வேற வேலை இல்லைஎன்பது போன்ற சில தாய்மார்களின் வசைமொழிகளையும் வாங்கி கட்டிக் கொள்வதுண்டு.

குருவையும் மிஞ்சும் சிஷ்யர்கள் உண்டல்லவா?. தொலை தூரத்தில் மாணவர்கள் படையுடன் ஆசிரியர் வருகின்றார் என்ற தகவலை அறிந்தவுடன் தண்ணிடம் உள்ள ஒன்றிரண்டு சட்டைகளை தண்ணீரில் மூழ்கி வைத்து விட்டு, ஒரு சிறிய கோமணத்துடன் ஆசிரியர் முன் தோன்றி “சார்... என் சட்டைகளை எல்லாம் இப்பதான் தொவச்சு போட்டுருக்கேன்... என்னுகிட்ட வேறு சட்டைகள் இல்லை சார்...என்று பரிதாபமாகக் கூறி தப்பித்துக்கொள்ளும் புத்திசாலி மாணவர்களும் உண்டு.

சில மாணவர்கள்... ஆசிரியரைப் பார்த்தவுடன் கரும்பு கொல்லையிலோ, மரவள்ளி கிழங்கு கொல்லையிலோ அல்லது சவுக்குத் தோப்பிலோ ஓடி ஒளிந்து விடுவார்கள்.

இவ்வளவு இடையூருகளுக்கு இடையே பள்ளி ஆய்வு முடிந்த பிறகு அவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது!

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உழவர்கள் எல்லாம் குருவை நெற்பயிரை அறுவடை செய்வதற்காக மழை பெய்யக்கூடாது என்று கடவுளிடன் வேண்டிகொண்டிருக்கும் போது நாங்கள் மட்டும் மழை பெய்ய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம். ஏன்.... வேறொன்றுமில்லை... பள்ளியின் திறந்த கூரை வழியே மழை நீர் உள்ளே பிரவேசிக்கும். பிறகென்ன... விடுமுறைதான்..!                                       
                                              -- பாடங்கள் தொடரும்...

Thursday, November 18, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 3


ஆசிரியர்கள்தான் இந்த உலகத்திலேயே உயர்ந்த மனிதர்கள் மற்றும் பவர்புல் மனிதர்கள் அதனால் ஆசிரியர்கள் சொல்வதை தட்டாமல் கேட்கவேண்டும் என்ற எண்ணம் அந்த சிறு வயதில் என் மனதில் பதிந்து விட்டது. சுப்பிரமணியன் சார் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவணமாக கேட்பேன். கொடுக்கும் வீட்டு பாடங்களை உடனே செய்து விடுவேன். எனவே, நன்றாக படிக்கும் நல்ல பையன் என்ற பெயர் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து பல மாதங்கள் ஓடி விட்ட தருணத்தில் கலாவதி அக்காவின் (பெரியப்பா மகள்) திருமணம் வந்தது. திருமணத்திற்காக பெரியப்பா மற்றும் எங்கள் வீட்டு வாசல்களை அடைத்து பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. திருமண நாளன்று ஒன்பது மணி திருமணத்திற்கு எல்லோரும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் நான் மட்டும் வழக்கம் போல் ரெடியாகி எட்டு மணிக்கு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிவிட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்பி நிற்பதை பார்த்து விட்டு எல்லோரும் டென்சன் ஆகிவிட்டார்கள்.

அப்பா என்னைப்பார்த்து “படுவா பய... பெரிய கலெக்டருக்கு படிக்கிற மாதிரி பள்ளிக்கூடத்து கிளம்பி நிக்கிறான்யா... இன்னிக்கு பள்ளிக்கூடம் போவ வேண்டான்டா... போயி பைய வைச்சிட்டு கல்யாணத்தை பார்றாஎன்றார்.

“பள்ளிக்கூடம் போவலண்ணா சார் அடிப்பாருஎன்றேன்

“நான் வாத்தியாருகிட்ட சொல்லிக்கிறேன்... பள்ளிக்கூடம் போவ வேண்டான்டா...

ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் பள்ளிக்கூடத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவன் நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பள்ளிக்கூடம் போவலைன்னா சுப்பிரமணியன் சார் அடிப்பாருன்னு எனக்கு பயம் வந்து விட்டது. யாருக்கும் தெரியாமல் கொல்லைபுறம் வழியாக புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு ஓடி வந்து விட்டேன்.

9.30 மணிக்கு பெல் அடித்து அசெம்பளி ஆரம்பமானது. ஒன்றாம் வகுப்பு வரிசையில் வழக்கம்போல் முதல் மாணவனாக நின்ற என்னைப் பார்த்து சுப்பிரமணியன் சாரும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன் சாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். நாட்டாமை வீட்டு கல்யாணத்தில் ஊரே கூடியிருக்கும்போது நான் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதுதான்!

“ரவி.... நீ ஏண்டா அக்கா கல்யாணத்தை பார்க்காமல் பள்ளிக்கூடம் வந்தே?என்று கேட்டார் சுப்பிரமணியன் சார்.

நான் பதில் எதுவும் சொல்லாமல் நின்றேன்.

இங்கே வாடா... ரவிஎன்று முத்துகிருஷ்ணன் சார் கூப்பிட்டார்.

அவர் பக்கத்தில் சென்றேன். என் முதுகில் தட்டிக்கொடுத்து மாணவர்களைப் பார்த்து பேசினார். “பசங்களா... பாருங்கடா...அக்கா கல்யாணத்திற்கு போகாமல் பள்ளிக்கூடத்திற்க்கு வந்திருக்கான்... எல்லோரும் இவன் மாதிரி இருக்கனும்டா... என்ன காரணமாக இருந்தாலும் தினமும் பள்ளிக்கூடம் வரனும்

அசெம்பளி முடிந்தவுடன் முத்துகிருஷ்ணன் சார் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்து பத்து காசுக்கு கடலை மிட்டாய் வாங்கி வரச்சொல்லி எனக்கு கொடுத்தார். சுப்பிரமணியன் சார் அடிப்பார் என்று பயந்துகொண்டு பள்ளிக்கூடம் வந்த நான் பாராட்டுகள் மற்றும் கடலை மிட்டாய்களை எதிர்பார்க்கவில்லை. ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் பிற்காலத்தில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் என் பழக்கத்திற்கு அஸ்திவாரம் போட்டது.

பணிரெண்டு ஆண்டுகள் பள்ளிக்கூட வாழ்க்கையில் இரண்டு முறைதான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு ஏழு நாட்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. அடுத்து... பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அரை நாள். அதிக காய்ச்சலுடன் வகுப்பில் படுத்திருந்த என்னை ஆசிரியர் வீட்டிற்கு போடா என்று கட்டாயப்படுத்தி பள்ளியைவிட்டு அனுப்பி வைத்தார். மற்ற பத்து ஆண்டுகள் அட்டெண்டஸ் 100%.

ஒரு சில நாட்கள் மழை, உடம்பு சரியில்லை மற்றும் வேறு காரணங்களால் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்று தோன்றும். ஆனால் அப்போது ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சி மணக்கண்ணில் தோன்றும்... உடனே மனதில் உறுதி தானாக வந்து விடும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பல நாட்கள் எங்கள் ஊருக்கு வரும் ஒரே பேருந்தான 11 நம்பர் டவுன் பஸ் வராது. சில நாட்கள் பஸ் டிக்கெட்டிற்கு தேவையான 35 காசுகள் இருக்காது. அந்த சமயங்களில் வெட்டிக்காட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தே செல்வேன். எட்டாவது படிக்கும்போது எனக்கு சைக்கிள் சரியாக ஒட்டத்தெரியாது... சைக்கிளும் கிடையாது. அப்போது பள்ளியில் ஷிப்ட் முறை... எட்டாம் வகுப்பிற்கு மதிய ஷிப்ட் (1 மணி முதல் 5.30 மணி வரை). மதிய வேலையில் காலில் செருப்பில்லாமல் நடந்து செல்லும்போது (அப்போது கிராமவாசிகளான எங்களுக்கு செருப்பும் லக்சரி பொருள்தான்!) ஒரு சில நாட்களில் கடும் வெயிலால் ரோட்டிலிருக்கும் தார் உருகி காலில் ஒட்டிக்கொள்ளும். எங்காவது கிடைக்கும் நிழலில் நின்று தாரை துடைத்து விட்டு நடைப்பயணத்தை தொடருவேன். 

இந்த மன உறுதியை எனக்கு கொடுத்தது ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சிதான்!

                                            -- பாடங்கள் தொடரும்...

Wednesday, November 03, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 2



சுப்பிரமணியன் சார் மூன்றாம் வகுப்புக்கு ஏதோ பாடம் நடத்தினார். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பதினோறு மணியளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் சுப்பிரமணியன் சாருக்கு டீக்கடையிலிருந்து “டீமற்றும் “மசால் வடைவாங்கி வந்து கொடுத்தான்.

“டேய் ரவி... புது பயலே... இங்கே வாடாஎன்றார் சுப்பிரமணியன் சார். எழுந்து சார் அருகில் சென்றேன். மசால் வடையில் கொஞ்சம் பிய்த்து என்னிடம் கொடுத்து “சாப்பிடுறா...என்றார். நான் மகிழ்ச்சியுடன் வாங்கி சாப்பிட்டேன்.

சிலேட்டு வச்சிருக்கியாடா...

“ம்ம்ம்

“சிலேட்டை எடுத்துகிட்டு வாடா

உரசாக்கு பையிலிருந்த சிலேட்டையும், சிலேட்டு குச்சியையும் எடுத்து வந்து சுப்பிரமணியன் சாரிடம் கொடுத்தேன்.

சார் சிலேட்டில் “அஎழுதி என் கையைப் பிடித்து “அஎன்று சொல்லிக்கொண்டே அதன் மேல எழுத வைத்தார். அந்த “அ”-வுடன் தொடங்கியது எனது படிப்பு....


மதிய இடைவேளை பெல் அடித்தவுடன் அண்ணன் வந்து என்னை கூப்பிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றான். மதிய உணவு சாப்பிட்டு விட்டு அண்ணனுடன் மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டேன். பள்ளியில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே என் பள்ளிக்கூட முதல் நாள் முடிந்தது. பள்ளிக்கூடமும் எனக்கு பிடித்து போனது... சுப்பிரமணியன் சார் மசால் வடை கொடுப்பார் என்ற எண்ணமும் அதற்கு ஒரு காரணம். எனவே தினமும் அண்ணனுடன் பள்ளி செல்ல ஆரம்பித்தேன். ஆனால்.. அதற்கு பிறகு சப்பிரமணியன் சாரிடமிருந்து மசால் வடை கிடைக்கவில்லை!

சுப்பிரமணியன் சார் ஒன்றாம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் போது என்னையும் கவணிக்க சொல்வார். அவ்வப்போது சிலேட்டில் எழுத சொல்லி கொடுப்பார். அப்போது ஒன்றாம் வகுப்பில் படித்த அமரபாகம் ராதாயும் நானும் நண்பர்களானோம். இப்படியாக ஒரு மூன்று மாத காலம் பள்ளியில் சேராமலே பள்ளிக்கூடம் சென்று வந்தேன்.

கோடை விடுமுறை முடிந்து அடுத்த ஜூன் மாதத்தில் (1973 ஆம் ஆண்டு) ஒரு நள்ள நாளில் எனது நாலரை வயதில் புது சட்டை, பை, சிலேட்டு, புத்தகம், மிட்டாய்கள் சகிதமாக அப்பா, பெரியம்மாவுடன் வந்து பள்ளியில் என்னை முறைப்படி சுப்பிரமணியன் சார், தலைமையாசிரியர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் சேர்த்து விட்டார்.

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த பிறகு வீட்டிலிருந்து கால் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு அண்ணனுடன் சேர்ந்து செல்லாமல் நானே தனியாக சென்று வர ஆரம்பித்தேன். பெரிய பையனா ஆகிட்டோம்ல...

ஒன்னாவதில் சேர்ந்த சில நாட்களில் என்னுடன் ஒன்றாம் வகுப்பில் படித்த எங்கள் தெருவில் என் வீட்டிற்கு அருகிலிருக்கும் உப்பிலி (எ) எழில்மன்னும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். எழிலமன்னன் பற்றி சற்று பார்ப்போம்... ஏனென்றால அடுத்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு என்னுடைய உயிர்த்தோழனாக விளங்கியன். நானும் எழிலமன்னனும் இரட்டையர்கள் என்று ஊரில் எல்லோரும் பேசுமளவுக்கு நெருங்கிய நண்பர்கள். உப்பிலிக்கு எழில்மன்னன் என்ற அழகிய பெயரை அவனுடைய கும்பகோனம் தாத்தா வைத்திருந்தார். ஆனால் எங்கள் கிராமத்து மனிதர்களிடன் அவன் பெயர் மாட்டி சின்னா பின்னமாகியது. “எழில்மன்னன்எனற பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவனை எல்லோரும் “எலிமன்னன்என்று கூட்பிட ஆரம்பித்தார்கள். இதைக் கேட்டு நொந்துபோன எழில்மன்னனின் அம்மா அவனுக்கு கும்பகோனத்திலுள்ள “உப்பிலியப்பன்”  சாமி பெயரில் “உப்பிலிஎன்ற மற்றொரு பெயரை கூப்பிடுவதற்கு ஏதுவாக சூட்டினார். ஆனால் என் அம்மா இன்றும் ஊரில் எழிலமன்னனை “எலிமன்னன்என்றுதான் கூப்பிடுகிறார். காரணம்... “உப்பிலிஎன்பது சாமி பெயர் என்பதால் வாடா.. போடா என்று கூப்பிட முடியாதாம்!

உப்பிலியும் நானும் நண்பர்களான பிறகு ஏற்பட்ட மாற்றம்... நாங்களே குளத்திற்கு சென்று குளித்து பள்ளிக்கு தயாராகி செல்வது. தினமும் சரியாக காலை ஆறரை மணியளவில் எங்கள் வீட்டிற்கு உப்பிலி வருவான். இருவரும் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே இருக்கும் பெரிய குளம் அல்லது வடக்கே இருக்கும் அய்யனார் கோவில் குளம் நோக்கி நடப்போம். போகிற வழியில் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து பல் விளக்கி கொண்டே, பேசிக்கொண்டே குளத்தையடைவோம். அந்த காலத்தில் கிராமவாசிகளான நாங்கள் டூத்பிரஷ், பேஸ்ட், சோப்பு போன்றவற்றை பார்த்தது கிடையாது. இதெல்லாம் லக்ஸரி அயிட்டங்கள்! ஆறாவது படித்த காலகட்டத்தில்தான் குளிப்பதற்கு சோப்பு கிடைத்தது. அதுவும் சோப்பு தீர்ந்து விட்டால் மறுபடியும் அப்பாவோ, பெரியம்மாவோ மன்னார்குடியிலிருந்து வாங்கி வரும் வரை நோ சோப் குளியல். டூத் பிரஷ்ஸில் பல் விளக்க ஆரம்பித்தது பதினொன்றாம் வகுப்பிற்கு வந்த பிறகுதான்!

காலைக்கடன்களை முடித்து, குளத்தில் குளித்து விட்டு வீட்டிற்கு வருவதற்கு ஒரு எழரை மணியாகிவிடும். பெரியம்மா தினமும் கொடுக்கும் காலை சாப்பாடான தயிர் சாதம் (பழைய சோற்றை பிழிந்து அதில் தயிர் அல்லது மோர்) மற்றும் மாங்காய் ஊறுகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் வைத்து சாப்பிட்டு விட்டு அரை மணி நேரத்தில் ரெடியாகிவிடுவேன். இட்லி, தோசை போன்ற காலை சாப்பாடு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும்தான் கிடைக்கும். வருடத்தில் 95% நாட்களில் காலை சாப்பாடு தயிர் சாதம்தான்!

நானும், உப்பிலியும் சரியாக எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பிவிட்டோம் என்றால் மணி எட்டு என்பதை ஊர் மக்கள் தெரிந்து கொள்வார்கள். நாங்கள் இருவரும் எட்டு மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பியது அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம் காலை 9.30 மணி... ஆனால் நானும் உப்பிலியும்தான் 8.15 மணி அளவில் முதன் முதலில் பள்ளிக்கு வந்து விடுவோம்.

ஊர் பிள்ளைங்க எல்லாம் ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடம் போவுது.. இவிங்க ரெண்டு பேரும் மட்டும்தான்யா எட்டு மணிக்கு போய் பள்ளிக்கூடம் காணம போகப்போகுதுன்னு காவல் காக்கிறாங்க... எட்டு மணிக்கு பள்ளிகூடத்துக்கு போயி என்னா பண்ணாறங்கன்னு தெரியலய்யா...என்று அப்பா அடிக்கடி சத்தம் போடுவார்.

“அவெங்க எட்டு மணிக்கு போனா என்ன... ஒன்பது மணிக்கு போனா ஒனக்கு என்னடா... நல்லா படிக்கிற பசங்கதாண்டா சீக்கிரம் பள்ளிக்கூடம் போவாங்க...என்று பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் எங்களுக்கு சப்போர்ட் பன்னுவார்.

ஆனால்... எனக்கும் உப்பிலிக்கும் பர்ஸ்டா பள்ளிக்கூடம் செல்வதில் ஒரு சந்தோசம். அவ்வளவுதான்...                                           
                                                    -- பாடங்கள் தொடரும்...